தமிழக ஊரக தொழில்களுக்கு ‘கொரோனா சிறப்பு நிதி’-ன் கீழ் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழக அரசு அறிவித்துள்ள 300 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 1,39,574 பயனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு நிதி உதவி திட்டம் செயல்படும்.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டத்தின் கீழ் ஊரக தொழில் மேம்பாட்டிற்காக ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஊரகத் தொழில்கள் மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுக்கவும் உலக வங்கியின் கடனுதவியுடன் 918 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 120 வட்டாரங்களை சேர்ந்த 3,994 கிராம ஊராட்சிகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு இத்திட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. இத்திட்டம் பல்வேறு சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதன் மூலம் ஊரகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்த பணிகளில் நியமனம் செய்ய 31-10-2019 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் 525 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது மேலும் அவர்களுக்குத் திட்டம் குறித்து உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மே 28ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையில் இருந்து கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் புதிதாக தொழில் தொடங்கவும் 300 கோடி ரூபாய் ‘கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகை’ வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.
அதன் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு இந்த சிறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட கிராமப்புற தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்கவும் ஏற்கனவே தொழில் செய்து கொண்டு இருப்பின் அதனை மேம்படுத்தவும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ்,
300 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 1,39,574 பயனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு நிதி உதவி திட்டம் செயல்படும்.
இத்திட்டத்தின் மூலம்,
- 31 952 நபர்களுக்கு மொத்தம் 159 கோடியே 76 லட்சம் ரூபாய் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.
- 1,598 உற்பத்தியாளர்கள் குழுக்களில் உள்ள 31,960 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒரு முறை மூலதன மானியம் குழு ஒன்றுக்கு (20 நபர்கள்) ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 23 கோடியே 97 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 240 தொழில் குழுக்களுக்கு (1200 நபர்கள்) தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 கோடியே 60 லட்ச ரூபாய் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும்.
- புலம்பெயர்ந்து மீண்டும் திரும்பி வந்த 5,010 இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கான கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடியே 10 லட்சம் ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்படும்.
- ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு 500 நபர்கள் வீதம் 37,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 75 உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா 10 லட்ச ரூபாய் என 7 கோடியே 50 லட்ச ரூபாய் மூலதனம் மானியமாக வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிகள் விதவைகள் திருநங்கையர்கள் ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோர் இன் தொழில் மேம்பாட்டிற்காக 31,952 நபர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் மொத்தம் 49 கோடியே 92 லட்சம் ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரித்தல், கிருமி நாசினிகள் மற்றும் கைக்கழுவும் சோப்பு தயாரித்தல், ஆடைகள் தயாரிப்பு, பால்வள மேம்பாடு, ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, சிறு உணவகங்களை நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை, சிறு மளிகைக் கடைகள் வைத்தல், பல்வேறு உலோகப் பொருட்களை தயாரித்தல், செயற்கை அழகு கலை, சிற்பங்கள் பழுது நீக்கம், குழாய் பழுது நீக்கம், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்கம், கணினி சார்ந்த தொழில்கள், கைபேசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டிற்காக இந்த சிறப்பு நிதியுதவி வழங்கப்படும்.
இதன்மூலம் ஊரகப் பொருளாதார வளர்ச்சியும் ஊரகத் தொழில்களில் எழுச்சியும் மக்கள் வருமானத்தில் முன்னேற்றமும் ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தகவல்: டிஐபிஆர்