‘மனித மேதமையை அச்சம் நெருக்குகிறது’ - தொழில்நுட்ப மாநாட்டில் சத்குரு கருத்து!
பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில், இண்டெல் இந்தியா நிறுவனத்தின் கண்ட்ரி ஹெட் நிவ்ருதி ராய் உடனான உள்ளொளிகள் நிறைந்த உரையாடலில் சத்குரு அறிவியல் மற்றும் ஆன்மிகம் சந்திக்கும் இடம் மற்றும் மனித ஆற்றல் பற்றி பேசினார்.
செல்வாக்கு மிக்க 50 பேரில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள சத்குரு, தனது செயல்பாடுகள் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மீது தாக்கம் செலுத்துகிறார். தொலைநோக்கு மிக்கவராக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேச்சாளராக, அதிகம் விற்பனையாகும் புத்தகங்களின் ஆசிரியராக, ஐக்கிய நாடுகள் சபை, உலக பொருளாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச மேடைகளில் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆன்மிகம் உள்ளிட்டவை குறித்து அவர் பேசி வருகிறார்.
பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில், இண்டெல் இந்தியா நிறுவனத்தின் கண்ட்ரி ஹெட் நிவ்ருதி ராய் உடனான உள்ளொளிகள் நிறைந்த உரையாடலில் சத்குரு அறிவியல் மற்றும் ஆன்மிகம் சந்திக்கும் இடம் மற்றும் மனித ஆற்றல் பற்றி பேசினார்.
அச்சம் என்றால் என்ன? அது ஏன் இத்தனை நெருக்குவதாக இருக்கிறது என்பது குறித்தும் அவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
“மனித மேன்மை, மனித ஆற்றல் மற்றும் மனிதத் திறன், துன்பத்தின் அச்சத்தால் நெருக்கப்பட்டிருக்கிறது,” என்று அவர் கூறினார்.
“அச்சம் என்ன செய்கிறது என்றால், உங்களைச்சுற்றி எல்லைகளை உண்டாக்குகிறது,” என்று கூறும் சத்குரு, மக்கள் எப்படி தங்களை ஆற்றலை கட்டுப்படுத்தும் எல்லைகளை அச்சத்தின் காரணமாக உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.
“துன்பப் படுதலின் அச்சத்தில் இருந்து ஒருவர் விடுபடுவது முக்கியம். ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்களது உண்மையான ஆற்றலை கண்டடைந்துளனர். இது, 99 சதவீதம் அச்சம் சார்ந்த ஊக்கமாக அமைகிறது,” என்று கூறுபவர், மதரீதியான, தார்மீக ரீதியான மற்றும் அறம் சார்ந்த சக்திகள் எப்படி அச்சம் நிறைந்தவர்களை நிர்வகித்து வந்திருக்கிறது என்றும் இது எப்படி மாற வேண்டும் என்பது பற்றியும் பேசினார்.
செயற்கை நுண்ணறிவை (AI) அறத்தின் மீது உருவாக்க முடியுமா?
தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகம் சந்திக்கும் புள்ளியை ஆய்வு செய்தபடி, பெருவாரியான மக்களுக்கான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு பார்க்கப்படுவது குறித்து கவனம் செலுத்தியபடி, நிவ்ருதி அறத்தின் மீது செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படுவதற்கான அவசியம் இருக்கிறதா எனக் கேட்டார். அதாவது, செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தீர்வுகளில் அறம் அடங்கியிருக்க வேண்டுமா என்று கேட்டார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த சத்குரு, ஆன்மிகம் என்பது அறம் அல்ல எனும் விளக்கத்துடன் துவங்கினார். அறம் மற்றும் நெறிமுறைகள் அல்லாமல், மனிதநேயமே எல்லா தீர்வுகளுக்குமான பதில் என்றார்.
“இந்த பூமியில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்பமே மனித அமைப்பு தான். இப்போது, மனிதகுலம் தனது சொந்த அறிவால், தனது திறன்களால் துன்புற்றுக்கொண்டிருக்கிறது,” என்றார்.
“மனித அறிவியல் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டு, தவறாக கையாளப்பட்டு, பல நேரங்களில் பல விதங்களில் நமக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது.
”என்ன தொழில்நுட்பமாக இருந்தாலும், உலகின் மீதான அதன் தாக்கம் தொழில்நுட்பத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை, அதை பயன்படுத்துபவரால் தான் தீர்மானிக்கப்படுகிறது,” என்றார்.
“தொழில்நுட்பம் அதனளவில் சார்பில்லாதது. அதற்கென தனியே எந்த குணமும் இல்லை. இருப்பினும், வரலாற்று நோக்கில் தொழில்நுட்பத்தை அணுகினால், அதிநவீன தொழில்நுட்பம் எப்போதுமே ராணுவத்தின் கைகளுக்கு தான் முதலில் சென்றுள்ளது.
எப்படி மக்களை தொழில்நுட்பத்தால் கொல்லலாம் என கண்டறிந்த பிறகு, எப்படி நம் வாழ்க்கையை காப்பாற்ற பயன்படுத்தலாம், உலகிற்கு எப்படி நன்மை பயக்கலாம் என ஆராய்கிறோம். இதை நாம் மாற்ற விரும்பினால், இது அற நெறி சார்ந்து நிகழப்போவதில்லை. ஏனெனில், அறநெறி அடையாளம் சார்ந்தது, என அவர் விளக்கினார்.
“இதனால் தான் ஆன்மிகம் முக்கியமாகிறது. ஏனெனில், ஆன்மிகம் என்பது உங்கள் பெளதீக இயல்பைக் கடந்து வாழ்க்கையை உணர்வதாகும். எல்லாமே உங்கள் அடையாளம் சார்ந்து இயங்குகிறது. எனவே இந்த வரம்பு கொண்ட அடையாளம் அழிய வேண்டும்,” என்றார்.
“தொழில்நுட்பம் மனித அறிவால் கையாளப்பட்டு, மனிதர்களை மையமாகக் கொண்ட விதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும்,” என நிவ்ருதி தெரிவித்தார்.
உங்களுக்குள் மகிழ்ச்சியின் விரிவாக்கம்
அறிவியல் எப்படி மனித மனசாட்சியில் இருந்து தோன்றியது என்பது பற்றியும், மக்கள் தாங்களாக இல்லாதவற்றுடன் ஆழமாக அடையாளப்படுத்திக் கொள்ளும் போது உண்மையின்மை எப்படி எல்லா துன்பங்களுக்கும் காரணமாகிறது என்று சத்குரு குறிப்பிட்டார்.
“நவீன விஞ்ஞானிகள், மனித அனுபவங்கள் ரசாயனம் அடிப்படையிலானது என்கின்றனர் தெரியுமா? உதாரணமாக, நீங்கள் மன அமைதி இழந்து, டாக்டரிடம் சென்றால், அவர் கொடுக்கும் மருந்து உங்களுக்குக் கொஞ்சம் காலம் அமைதி அளிக்கிறது. ஆனால், மகத்தான ரசாயன தொழிற்சாலை இங்கே இருக்கிறது. மிகவும் நுட்பமான ரசாயன தொழில்சாலை இங்கே தான் இருக்கிறது.”
“இத்தனை சிக்கலான ரசாயன தொழில்சாலை இருக்கும் போது, நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்களா? செயல்திறனாக தீமை கொண்டுள்ளீர்களா? சோம்பலாக இருக்கிறீர்களா? என்பதே கேள்வி. எனவே நீங்கள் நல்ல சி.இ.ஓவாக இருந்தால், உங்கள் ரசாயனத்தில் இருந்து ஏகாந்தத்தை உருவாக்கலாம். மோசமான சி.இ.ஓ.வாக இருந்தால் அதிலிருந்து துன்பத்தை உருவாக்கலாம்,” என்றார்.
உங்கள் அறியாமையுடன் அடையாளம் கொள்ளுங்கள்: அறிவுடன் அல்ல!
மனித அறிவு எப்படி பலவிதங்களில் தவறாக கையாளப்பட்டு, தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று பேசியவர், நம்முடைய அறிவுடன் அல்லாமல், அறியாமையுடன் அடையாளப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி பேசினார்.
“இந்த பிரபஞ்சத்தில் பெளதீக உருவாக்கம் ஒரு சதவீதம் கூட இல்லை; எஞ்சியவை எல்லாம் வெறும் வெளி தான். எனவே தான் ஆன்மிக செயல்பாடு, ஒரு சதவீதம் பற்றி கவலைபப்டாமல், 99 சதவீதம் குறித்து அக்கரை கொள்கிறது. சிவ எனும் சொல்லுக்கு, இது தான் பொருள்- இல்லாதது”.
“யோகி கலாச்சாரத்தில், நம்முடைய அறியாமையுடன் தான் எப்போதும் அடையாளப்படுத்த அல்லது அக்கரை கொள்ள வலியுறுத்தப்படுகிறோம். அறிவுடன் அல்ல. ஏனெனில் உலகில் உள்ள நூலகங்களை எல்லாம் கற்றால் கூட, அண்டம் பற்றி நீங்கள் அறிந்தது சொற்பம் தான். இந்த அறிவுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டால், நீங்கள் மினிஸ்டராகலாம்.
ஆனால், நம்முடைய அறியாமை எல்லையில்லாதது. அறியாமையுடன் அடையாளப்படுத்திக்கொண்டால், நாம் எல்லையில்லாமல் ஆகலாம்”.
எதிர்காலம் மனித ஆற்றல் நிர்வாகம் சார்ந்ததாக இருக்க வேண்டும்
பணியிட சூழலில் மகிழ்ச்சி உணர்வு பற்றி பரந்த நோக்கில் பேசியவர், “ஒரு மனிதன் வளம் அல்ல: ஆற்றல். ஒன்றை வளமாக கருதினால், அதை வைத்து என்ன எல்லாம் செய்யலாம் என்பது பற்றி யோசிப்பீர்கள். ஆனால், ஒரு மனிதன் ஆற்றலாகும். அதிக பட்ச ஆற்றலில் மனிதர்களை எப்படி ஊக்கம் பெற வைக்கலாம் என மனித வளம் முயற்சிக்க வேண்டும்.”
நினைவுத்திறன் பொறியாக மாறக்கூடாது
மனதின் உண்மையான சாத்தியங்களை எப்படி பயன்படுத்திக்கொள்லலாம் என்பது பற்றி பேசியவர், அதன் நான்கு பரிமானங்களான மனது, புத்தி, அகங்காரம் மற்றும் சித்தி பற்றி குறிப்பிட்டார்.
நவீன அறிவியல் மற்றும் நவீன கல்வி முறை பெரும்பாலும் புத்தி சார்ந்தே இயங்குவதாகக் குறிப்பிட்டவர் இது நல்ல செயல்முறை அல்ல என்றார்.
“நம்முடைய கல்வி முறை நினைவுத்திறன் தான் அறிவு எனும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மனிதகுலத்திற்கான மிகப்பெரிய தீங்காகும். ஒரு பாடப்புத்தகத்தை படித்து அதில் உள்ள எல்லா வார்த்தைகளையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தால், எல்லோரும் என்னை அறிவாளி என நினைக்கலாம். ஆனால் இன்று, இதை உங்கள் சிப் செய்துவிடும்.”
அறிவுக்கு சித்தி எனும் நான்காம் பரிமானம் இருக்கிறது. ஒரு சிறு துளி கூட நினைவுத்திறன் இல்லாத தூய்மையான அறிவு இது. இதன் பொருள், உங்கள் சித்தியை தொட முடிந்தால் உங்கள் புரிதல் எல்லையில்லாமல் அமையும்.
“மனதின் இந்த பரிமானத்தை உங்களால் தொட முடிந்தால், ஒருவரின் மனசாட்சியுடன் தொடர்பு கொள்ளும் புள்ளி இது, நீங்கள் எதையும் ஆசைப்பட வேண்டியதில்லை. நீங்கள் எதையும் கனவு காண வேண்டியதில்லை. உங்களுக்கு நிகழ வேண்டிய சிறந்தவை எப்படியும் நிகழும்,” என்று அவர் விளக்கினார்.
கர்நாடகா மாநிலத்தில், கோவிட்-19 தடுப்பூசியை விநியோகிக்கும் பொறுப்பு வகிக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் நிவ்ருதி ராய், தடுப்பூசியை முன்னுரிமை அளிப்பதில் உள்ள அறம் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசினார்.
“தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்-மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் முதலில் 100 சதவீதம் முன்னுரிமை அளிக்கபட வேண்டும் என்பதே சரியான பதில் என நம்புகிறேன். அதே போல, இதர பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் 65 வயது முதல் 70 வயதானவர்கள். தினமும் வேலை செய்பவர்களும் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள்.
ரயில் நிலையத்தில் தரையை சுத்தம் செய்பவராக இருக்கலாம். அல்லது பிழைப்புக்காக தினமும் பணிக்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கலாம். இவர்களுக்கு தான் முதலில் அளிக்கப்பட வேண்டும். இந்த தொற்றை முடிவுக்குக் கொண்டு வர விரும்பினால் இது முக்கியம், என்று சத்குரு குறிப்பிட்டார்.
ஆங்கிலத்தில்: ரயான் பிரான்ட்ஸ் | தமிழில்: சைபர் சிம்மன்