ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் பெண்களுக்கு பாதுகாப்பு முயற்சி: மெட்டா அறிவிப்பு என்ன?!
பாதுகாப்பு அம்சங்களுக்கு 5 பில்லியன் செலவழிக்கும் மெட்டா!
மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான ’மெட்டா’ (Meta Platforms Inc) நிறுவனம் தங்களது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெண் பயனர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை மெட்டா அறிவித்துள்ளது. உலகளவில் இந்தத் தளங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு $5 பில்லியன் செலவழிக்க இருப்பதற்காக, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பாதுகாப்புக் கொள்கையின் இயக்குநர் கருணா நைன் தெரிவித்திருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு முயற்சிகளுக்காக 13 பில்லியன் டாலர் செலவழித்துள்ளதாகவும், தற்போது 40,000 ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் கருணா நைன் தனது தகவலில் தெரியப்படுத்தினார். மேலும் பேசியவர்,
“மெட்டாவில், பாதுகாப்பான ஆன்லைன் அனுபவத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பும் முயற்சிகளும் முன்னணியில் உள்ளன. ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்து கட்டமைத்து முதலீடு செய்து வரும் அதே வேளையில், இந்த முயற்சிகளை தொடங்குவது எங்களின் அர்ப்பணிப்புக்கான மற்றொரு படியாகும்," என்று கூறியுள்ளார்.
அவர் கூறியது போல் புதிய முயற்சிகளின் கீழ், இந்தி உட்பட 11 இந்திய மொழிகளில் தகவல் மற்றும் வளங்களை அணுகுவதற்கான பெண்கள் பாதுகாப்பு மையத்தைத் தொடங்குவதோடு மற்றும் பெண்களின் தவறான புகைப்படங்கள் பரவுவதை தடுக்கும் StopNCII.org இயங்குதளத்தை அறிமுகப்படுத்துகிறது மெட்டா. இந்த StopNCII.org தொழில்நுட்பம் UK Revenge Porn Helpline என்ற அமைப்பு உடன் இணைந்து மெட்டாவால் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெண் பயனர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ஆபாச படங்கள் போன்ற அச்சுறுத்தல் பெற்றால், பாதிக்கப்பட்டவர்கள் அந்த புகைப்படங்களை ஹாஷ் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், யாராவது அதைப் பதிவேற்ற முயற்சித்தால், அதனை இந்தத் தளங்கள் தடுக்கும். இதேபோல் இரண்டாவது முயற்சியான பெண்கள் பாதுகாப்பு மையம், வீடியோ அடிப்படையிலான பாதுகாப்பு பயிற்சி தொகுதிகளை உள்ளடக்கியது மற்றும் பல இந்திய மொழிகளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
இணையத்தில் பாதுகாப்பான சமூக நடத்தையை ஊக்குவிப்பதற்காக மெட்டா தனது தளங்களில் பயனர்களுக்கு அவர்கள் தொடர்பு கொள்ளும் நபர்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா சார்ந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறது என்று மெட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.