முதல் முயற்சியிலேயே CA தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்!
சரியாகத் திட்டமிட்டு, காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி நம் வசமாகும் என நிரூபித்திருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த இசக்கிராஜ். கடந்தாண்டு நடந்த கணக்கு தணிக்கையாளர் பணிக்கான சிஏ தேர்வில் 800க்கு 553 மதிப்பெண்கள் பெற்று இம்மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்
Institute of chartered accountants of India, ICAI எனப்படும் அகில இந்திய அளவில் கணக்கு தணிக்கையாளர் பணிகளுக்கான 2020ம் ஆண்டிற்கான சிஏ தேர்வு, கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
கடந்தாண்டு மே மாதமே நடந்திருக்க வேண்டிய இத்தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நேரடியாக 1,085 தேர்வு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி ராஜ் என்பவர் 800-க்கு 553 மதிப்பெண் பெற்று பழைய பாடத்திட்டத்தில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் இந்த தேர்வில் பழைய பாடதிட்டத்தின்படி, சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ரீபிரியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவில் சிஏ தேவில் முதலிடம் பிடித்த இசக்கி ராஜ், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தன் தந்தையின் அறிவுரையின்படி 12-ஆம் வகுப்பு முடித்ததும் சி.ஏ படிப்பில் சேர்ந்ததாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் முயற்சியிலேயே இசக்கி ராஜ் இத்தேர்வில் வெற்றியடைந்துள்ளார்.
“ஆடிட்டர் செந்தில் என்பவரிடம் பணியாற்றினேன். ஆர்வம் காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இறுதி தேர்வுக்குத் தயாராகினேன். நன்றாக தேர்வு எழுதினேன் என நம்பினேன். ஆனால் அகில இந்திய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை,” என மகிழ்ச்சியுடன் இசக்கி ராஜ் கூறியுள்ளார் .
புதிய பாடத்திட்டத்தின்படி தேசிய அளவில் மும்பையைச் சேர்ந்த கோமல் கிஷோர் ஜெயின் 75% மதிப்பெண்களுடன் முதலிடமும், சூரத் மாணவர் முதீத் அகர்வால் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் சிஏ படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படுகிறார்கள். தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.