சொன்ன வாக்கைக் காப்பாற்றிய சமந்தா: பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசு!
நடிகை சமந்தாவின் தாராள மனசு!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வறுமையை எதிர்த்துப் போராடிய கவிதா என்ற பெண் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக நடிகை சமந்தா செய்த செயல் தற்போது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா, சில மாதங்கள் முன்பு, டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கவிதா என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர், "எனக்கு 7 சகோதரிகள் இருக்கின்றனர். எனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் 7 சகோதரிகளையும் நான் மட்டுமே உழைத்து கவனித்து வருகிறேன். இதற்காக ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறேன். இதில் கிடைக்கும் வருமானம் குடும்பத்தைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை," என்று முறையிட்டார்.
இதைக்கேட்ட நடிகை சமந்தா,
“நான் உங்களுக்கு ஒரு கார் வாங்கி தருகிறேன். அதை கொண்டு டிராவல்ஸ் வைத்து இன்னும் அதிகமான வருமானம் ஈட்டிக்கொள்ளுங்கள்," எனக் கூறினார்.
வாக்குறுதி அளித்தபடியே, இப்போது நடிகை சமந்தா ஆட்டோ ஓட்டுநர் கவிதாவுக்கு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்தக் காரின் மதிப்பு 12.5 லட்ச ரூபாய். நிகழ்ச்சியில் சொன்னபடியே, டிராவல்ஸ் வைப்பதற்காக காரை வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி, கவிதா கார் ஷோரூமில் காரை பெறுவதற்கான சாவியை வாங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா ஏழைப் பெண்ணான கவிதாவுக்கு உதவிய சம்பவம் வெளியில் தெரியவர, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சமந்தா இதற்கு முன்பும் இது போல் பல உதவிகளை சத்தமில்லாமல் செய்துள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருங்கியவர்கள். இதற்கிடையே, நேற்று தனது குழுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார் சமந்தா.
“இந்த கடினமான காலங்களில் கூட, இவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உற்சாகத்தை உயர்த்தி, என் நாட்களை எளிதாகவும் வேடிக்கையாகவும் ஆக்குகிறார்கள்," என்றும் அந்தப் படத்துடன் பதிவிட்டு இருந்தார்.
நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்து வருகிறார். தெலுங்கில், சகுந்தலம் என்ற காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் காதல் கதையாக இமயமலை சுற்றி நடக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டிருந்தால் தற்போது சமந்தா இமயமலை பகுதியில் ஷூட்டிங்கில் இருக்கிறார்.