மரஞ்செடிகள் நடுவே வகுப்புகள்; இயற்கையே ஆசான்; ‘சாரங்’ எனும் அற்புதப்பள்ளி நிறுவிய ஜோடி!
நான்கு சுவருக்குள் கரும்பலகையை வெறித்து நோக்கும் வழக்கமான பள்ளிகள் போலின்றி, 12 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்த ஆகாசத்துக்கும் பரந்த மண்ணுக்குமிடையே வகுப்புகள். அங்கு மழைச்சாரலும், உயிரினங்களும் இயற்கையும் தான் ஆசான்கள். கோபால கிருஷ்ணனும், விஜயலெட்சுமியும் வழிகாட்டிகளே!
பள்ளி என்றவுடன் உயர்ந்த கட்டிடங்கள், நாலடிக்கு ஓர் தடுப்புசுவர் கொண்டு பிரிக்கப்பட்ட வகுப்புகள் போன்ற தோற்றமே கண்முன்விரியும். யதார்த்த பள்ளிக் கூடங்கள் அப்படித்தான் இருக்கும். ஆனால், அவை யதார்த்த வாழ்வை எதிர்கொள்வதற்கான திறனை வழங்குகிறதா? இதே கேள்வியினை மனதுக்குள் எதிர்கொண்ட கேரள தம்பதியினரால் உருவாக்கப்பட்டது தான் ‘சாரங்' எனும் காட்டுப்பள்ளி.
நான்சுவருக்குள் கரும்பலகையை வெறித்து நோக்கும் வழக்கமான பள்ளிகளின் சூழல் போலின்றி, 112 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்த ஆகாசத்துக்கும் பரந்த மண்ணுக்குமிடையே தான் வகுப்புகள். அங்கு மலையும், மழைச்சாரலும், உயிரினங்களும் இயற்கையும் தான் ஆசான்கள். கோபால கிருஷ்ணனும், விஜயலெட்சுமியும் வழிகாட்டிகளே!
1994ம் ஆண்டில், அரசு ஆசிரியர் பணியை துறந்த தம்பதியினர் சாரங்-ஐ தொடங்குவதற்காக முனைப்போடு வேலை செய்யத் தொடங்கினர். அவர்களின் முதல் மாணவர், அவர்களின் மகன் கவுதம். படிப்படியாய் நெருங்கிய குடும்பங்களிலிருந்தும் ஏழைக் குடும்பங்களிலிருந்தும், வழக்கமான பள்ளியிலிருந்து பாதியில் படிப்பைவிட்ட மாணவர்களும் சாரங்கை நோக்கி வந்தனர். அக்குழந்தைகள் ஒருவருக்கொருவர் வகுப்பு தோழர்களாக அறிமுகப்படுத்தப் படவில்லை. மாறாக சகோதர, சகோதரிகளாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அங்கு அவர்கள் இயற்பியல், உயிரியல், புவியியல், கணிதம், வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் என அனைத்து பாடங்களையும் கண்டும், உணர்ந்தும், செயல்படுத்துவதன் மூலம் கற்றுக்கொள்கின்றனர். மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தையும் இயற்கையோடு இணைந்து கற்றுகொள்கின்றனர்.
சாரங் உருவான பின்னணி!
36 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தை பிறப்பை எதிர்பார்த்து காத்திருந்த கோபால கிருஷ்ணனும் விஜயலெட்சுமியும் வயிற்றில் வளரும் சிசுவினை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வளர்க்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளனர். ஏனெனில், அரசு ஆசிரியர்களாக பணிபுரிந்த இருவருக்கும் நடைமுறையில் இருந்த கல்விமுறை குறித்தும், அக்கல்வி வாழ்க்கையினை எதிர்கொள்ள குழந்தைகள் தயாராகி கொள்ள உதவவில்லை என்பது குறித்தும் கவலையடைந்தனர். திறந்தவெளியில் யதார்த்த வாழ்விற்கு நெருக்கமான சூழலை கொண்ட பள்ளியை உருவாக்க வேண்டும் என்பதை கனவாக்கினர்.
அதை நினைவாக்க அரசுப் பணியை துறந்தனர் இருவரும். கேரளாவின் பாலக்காடு அருகே அட்டப்பாடியில், அரசால் தண்ணீர் இல்லாத, விவசாயம் செய்வதற்கு லாயிக்குல்லாத நிலம் என்று கைவிடப்பட்ட தரிசு நிலத்தில் 12ஏக்கர் இடத்தை இவர்கள் வாங்கினர். மலை உச்சியில் நிலத்தின் மேற்பரப்பு மண் அரித்து காணப்பட்ட நிலையில், அந்நிலத்தை விளை நிலமாக்க முனைந்தனர்.
பரந்த நிலப்பரப்பில் மிகக் குறைவான மரங்கள் ஆங்காங்கே மட்டுமே தென்பட்டன. அவ்விடத்திற்கேன இருந்த ஒரே நீர் ஆதாரமும் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. ஆனால், குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ளவும், வாழ்வியலை பற்றி அறிந்து கொள்ளவும் இது சரியான இடமாகயிருக்கும் என்பதை தீர்க்கமாக நம்பினர்.
1982ம் ஆண்டு முதல் சாரங் பள்ளி இயங்கத் தொடங்கியது. சாரங்கின் பிள்ளைகளும், நண்பர்களும் மற்றும் நலம் விரும்பிகளும் கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலெட்சுமியோடு இணைந்து நிலத்தை புதுப்பிக்க கைகோர்த்தனர். ஆனால், அப்பணி எந்த வகையிலும் எளிதானதாக அமையவில்லை. கடுமையான நிலப்பரப்புடன் போராட இயலாத அக்கம் பக்கத்தினர் மலையை விட்டு வெளியேறினர். ஆனால், மலைகளுக்கு மீண்டும் பசுமையை கொண்டு வருவதில் உறுதியாய் இருந்து இவர்கள், எவ்வித இடையூறுகளாலும் அவர்களது கனவை தகர்த்து கொள்ளவில்லை.
நீர்நிலைகளில் மூங்கில் மற்றும் கற்களை கொண்டு தடுப்பணைகளை உருவாக்கினர். மண்அரிப்பிலிருந்து நிலத்தை காப்பதற்கும், தண்ணீரை பாதுகாப்பதற்கும் தண்ணீர் வழிந்தோடும் வகையில் குட்டைகளை தோண்டியுள்ளனர். காட்டுத் தீயிலிருந்த நிலத்தை காப்பது சாரங்கிற்கு பெரும்சவாலாகியது. சாரங்கின் மாணவ படையினர் அவ்வப்போது நிலத்தை ஆராய்ந்து, கருங்காற்றாழை வேலிகளும், காட்டு தீ பரவும் எல்லை பகுதி ஆபத்தில் இருக்கிறதா என்பதை சோதனை செய்கின்றனர். காட்டுத் தீக்கான அனைத்து தூண்டுதலுக்கும் தள்ளி வைக்கப்பட்டன.
நிலத்தின் பெருவாரியான இடத்தை காட்டுக்கென ஒதுக்கினர். மீதமுள்ள இடங்களில், சாரங்கின் குழந்தைகளோடு அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே விளைவித்தனர். மண், மூங்கில்கள் கொண்டு அவர்களுக்கான இருப்பிடத்தை கட்டி எழுப்பினர். அனைத்து காய்கறிகளும், பயிர்களும், பழங்களும் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டன.
இவ்வனைத்து செய்கைகளால், சாரங் குழந்தைகளின் உடல்திறனோடு, அறிவுத்திறனும் சேர்ந்தே வளர்ந்தது. தரிசு நிலத்தில் பசுமை படரத்தொடங்கியது. 15 ஆண்டுகள் உழைப்பில் அதை சாத்தியப்படுத்தினர். தொடர் விவசாயத்தால் அங்கே மண் வளம் மீண்டது. தூர்ந்து போன நீர்நிலைகளில் நீர் வளம் மிகுந்தது.
பசுமை மீண்டு வளர்ந்ததில், வெளியேறிய குரைக்கும் மான்கள், முயல்கள், அணில், முள்ளம்பன்றி, புனுகு பூனை, நத்தைகள் மற்றும் சில அரிய வகை உயிரினங்களும் சாரங் மலையின் வசிப்பவர்களாக மாறின. ஆனால், இந்த வேலையைத் தொடங்கிய குழந்தைகள் இரண்டு வருடங்கள் மட்டுமே அதன் ஒரு பகுதியாக இருக்க முடிந்தது. 1995ம் ஆண்டின் இறுதியில், சாரங்கில் கற்ற 50 குழந்தைகள் அவர்களது அற்புதமான பயணத்தை நிறுத்த வேண்டியிருந்தது. பள்ளியினை மேற்கொண்டு நடத்த தம்பதியினருக்கு நிதி தேவைப்பட்டதால் இக்கனவு தகர்ந்தது. ஊழியர்களுடனான உள் பிரச்சினைகளும் மறுப்புற சிக்கலாகின.
சாரங் பள்ளி செயல்பட்ட இரண்டு வருடங்களில், தம்பதியினர் கடனில் மூழ்கினர். பள்ளியை மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். பள்ளியை மூடும் முடிவு கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலெட்சுமிக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் மிகவும் வேதனையளித்தது.
ஆனால் கோபாலகிருஷ்ணனும் விஜயலெட்சுமியும் அவர்களது மகன் கவுதம் மற்றும் அவரது சகோதரிகளான கண்ணகி மற்றும் உன்னியார்ச்சா மூலம் சாரங் பள்ளியை உயிர்ப்பிப்புடன் வைத்திருந்தனர். தொடர்ந்து மலையிலே வசித்து வந்த அவர்கள், சாரங் கற்றல் முறையை பரிசோதனை செய்து வந்தனர்.
உண்மையில் அவர்களது சாரங் கல்விமுறை வெற்றிகரமானதே. அதற்கு சிறு எடுத்துக்காட்டு, பள்ளியின் முதல் மாணவனும், தம்பதியினரது மூத்த மகனுமாகிய கவுதமின் இன்றைய நிலை.
36வயதாகும் கவுதம், அவரது வாழ்நாள் முழுவதும் முறையான வழக்கமான பள்ளிப்படிப்பை மேற்கொள்ளாதவர்.
‘‘நான் சிறுவயதில் எதையாவது பற்றி தெரிந்து கொள்ளலாம், கற்று கொள்ளலாம் என்று ஆர்வமாக இருந்த சமயத்தில், வழக்கமான பள்ளிக்கு சென்று கொண்டிருந்த என் சமவயது பிள்ளைகள் பள்ளி அளிக்கும் அழுத்தத்தை அனுபவித்து கொண்டிருந்தனர். எனக்கு வெறும் 10 வயதாக இருந்தபோதே, தற்காப்புக் கலையான ‘களரிப்பயட்டை' கற்றுக் கொள்வதற்காக நானும், என் உறவினர் பையனும் வீட்டை விட்டு விலகி வேறொரு இடத்தில் தங்கி பயின்றோம். அங்கு, எங்களுக்குத் தேவையான உணவை நாங்களே சமைத்து, எங்களது உடைகளை துவைத்து ஒருவருக்கொருவர் அரவணைப்புடன் இருந்தோம்.
ஒரு வானொலி எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், உள்ளூர் வானொலி கடையில் நான் பயிற்சி பெற்றேன். எனக்கு 14 வயதாகும் போதே, அமெச்சூர் வயர்லெஸ் ஆபரேட்டரின் தேர்வெழுதி வெற்றி பெற்று, ஹாம் ரேடியோ (ரேடியோ என்பது ஒரு வழிப்பாதை. அதைக் கேட்கத் தான் முடியும். ஆனால், ‘ஹாம் ரேடியோ' என்பது இரு வழிப் பாதையாக பயன்படும். பேரிடர் காலங்களிலும் தடையின்றி பேச முடியும். மிகக் குறைந்த மின்சாரத்தை வைத்துக் கொண்டே உலகின் எந்த மூலைக்கும் செய்திகளை அனுப்ப முடியும். இது தான் ஹாம் ரேடியோவின் சிறப்பம்) ஆபரேட்டரானேன்,''என்றார் கவுதம்.
வீட்டிற்கு அனுதினமும் படையெடுத்த விருந்தினர்கள், அவர்களுடன் எந்நேரமும் நிகழும் விவாதங்கள் மற்றும் உரையாடலை கேட்டு வளர்ந்த கவுதமிற்கு சமூகத்தை பற்றி புரிதல் அதிகம் ஏற்பட்டது என்கிறார்.
‘‘நான் ஒரு குழந்தையாக இருந்தபோதிலும் என் பெற்றோர் இந்த விவாதங்களிலிருந்து என்னைஒதுக்கி வைக்கவில்லை. நான் பல்வேறு கண்ணோட்டங்களைக் கேட்க நேர்ந்தது. பண்ணையில் வேலை செய்தல், பண்ணையிலே கற்று கொள்ளுதல் என நாட்கள் அதிகம் பிஸியாகவே கழிந்ததால், வழக்கமான பள்ளியை மிஸ் செய்கிறோம் என்ற எண்ணம் உருவாகுவதற்கான நேரம்கூட கிடைக்கவில்லை,''என்று சாரங்கின் மாணவர் என்ற பெருமையுடன் கூறினார் கவுதம்.
பல ஆண்டுகளாக, பள்ளியால் ஏற்பட்ட கடன், குடும்பத்தை வருத்தியதால், கடனைத் திருப்பிச் செலுத்த, கவுதம் கோவாவில் உள்ள ஆர்கானிக் ஃபார்மிங் அசோசியேஷனில் ஒரு முழுநேர பணியை மேற்கொண்டார். வெப் டெவலப்மேன்ட் பயிற்சியும் எடுத்துகொண்டதால், அது அவரை ஒரு பகுதி நேர பணியாளராக மாறுவதற்கு கைகொடுத்தது.
இதற்கிடையில், கண்ணகியும் உன்னியார்ச்சாவும் கிளாசிக்கல் நடனம் கற்க விரும்பினர். கோபாலகிருஷ்ணனும், விஜயலெட்சுமியும் மகள்களுடன் தொழில்முறை நடன ஆசிரியர்களை கண்டறிந்து அவ்வூருக்குச் செல்ல முடிவு செய்தனர். சாரங் மலை அமைதியாகியது. கவுதமின் வேலை அவரை பிஸியாக வைத்திருந்தாலும், சாரங் பள்ளி குறித்த நிறைவேறாத கனவு அவரை துரத்தியது. அந்த நேரத்தில் கவுதம், அனுராதா என்ற ஒரு பொறியயாளரை மணந்தார். அவர் சாரங் பள்ளியை மீட்டெடுக்கும் கவுதமின் கனவிற்கு பக்கபலமாகினார்.
2013ம் ஆண்டில், கடன்களைத் திருப்பிச் செலுத்திய பின்னர், கவுதம் அவரது குடும்பத்தினரோடு மீண்டும் சாரங் மலையினை அடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் அவருடைய குடும்பம் சேகரித்த அறிவைப் பரப்பும் விதமாக கிராமப்புற பல்கலைக்கழகமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட கவுதம், சாரங் பள்ளிக்கு மறுஉயிர் கொடுத்தார்.
சாரங் இன்று உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு மாற்றுக் கல்வியை அளிக்கும் முறையை வழங்குகிறது. மாணவர்கள் சரங்கில் எந்நேரமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. வழக்கமான பள்ளிகளைப் போல இங்கு வழக்கமான வகுப்புகள் எதுவும் நடக்காது.
‘‘வழக்கமான பள்ளிக்கல்வி முறைகளுக்கு மாற்றான கல்வியினை தேடும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை தவறாமல் இங்கு அழைத்து வருகிறார்கள். குழந்தைகளை அவர்களது சொந்த ஆர்வத்திலிருந்து கற்றுக்கொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம். பெற்றோர்களையும் அவர்களது சொந்த பள்ளிகளைத் தொடங்க ஊக்குவிக்கிறோம். ஏனெனில் சாரங்கை மற்றொரு மையப்படுத்தப்பட்ட தீர்வாக மாற்ற எங்களுக்கு விருப்பமில்லை. பரவலாக்கலை நாங்கள் நம்புகிறோம். பாடத்திட்டம், செயல்பாடுகள் போன்றவற்றை உருவாக்குவதில் பெற்றோர் குழுக்களை நாங்கள் ஆதரிக்கிறோம்,'' என்கிறார் அனுராதா.
சாரங் சூரிய சக்தியில் முழுமையாக இயங்குகிறது. விசேஷமாக தயாரிக்கப்பட்ட தீ அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது. மேலும் அனைத்து கழிவுகளின் மூலமும் உரம் தயாரிக்கின்றனர். அவர்கள் கழிப்பறைகளுக்காக மண் குழிகளை தோண்டியுள்ளனர். அங்கு மலத்தை மண் மற்றும் சாம்பல் கொண்டு மூடுவதால், பின்னாளில் அவை மண்ணுக்கான இயற்கை உரமாக மாறுகின்றது.
சாரங்கிலுள்ள ஒவ்வொரு கட்டிடங்களும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கவுதமின் குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளன. கட்டுமானத்திற்கு தேவையான மண், மூங்கில் அனைத்தையும் வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் பெற்று கொள்கின்றனர்.
இயற்கையான கட்டிடக்கலை குறித்து அவர்கள் செயல்முறையில் சோதனை செய்து கற்று கொள்வதால், அவை கான்கிரீட் மற்றும் நவீன கட்டுமானப் பொருட்களின் பயன்பாட்டை குறைந்தபட்சமாகக் கட்டுப்படுத்துகின்றன. இயற்கை வேளாண்மை, வனப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்பு ஆகியவையும் தொடர்கின்றன.
இயற்கையுடன் இணைந்து சாரங் கல்வியை கற்கும் அவர்களது சொந்த பேரக்குழந்தைகள் மற்றும் பல குழந்தைகளின் வழி உருவாகும் வளமான எதிர்கால சமூகம் குறித்து ஆனந்தத்தில் உள்ளனர் கோபாலகிருஷ்ணனும், விஜயலெட்சுமியும்.
தகவல் மற்றும் படங்கள் உதவி: தி பெட்டர் இந்தியா, மனோரமா