மேற்குவங்கத்தில் நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்கும் பள்ளி!
2008-ம் ஆண்டு அனூப் கயன், மோஜ்கா கயன் இருவரும் துவங்கிய பியாலி அஷர் ஆலோ பள்ளியில் 160-க்கும் அதிகமான மாணவிகள் உள்ளனர். இந்தப் பள்ளியில் இலவச கல்வியும் மதிய உணவும் வழங்கப்படுகிறது.
மேற்குவங்கத்தின் தெற்குப் பகுதியில் தொலைதூரத்தில் அமைந்துள்ளது பியாலி என்கிற சிறு கிராமம். இந்த கிராமம் குற்றங்களின் மையமாக விளங்குகிறது. சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர். அத்துடன் குழந்தைத் திருமணங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மொத்தத்தில் இந்த கிராமம் குழந்தைகளுக்கு உகந்த இடமாக இல்லை.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இங்கு நல்ல மாற்றம் காணப்படுகிறது. இதற்குக் காரணம் 45 வயது அனூப் கயன் மற்றும் 38 வயது மோஜ்கா கயன். இவர்கள் இருவரின் முயற்சியால் பியாலி தற்போது இளம் பெண்களுக்கான புகலிடமாக மாறியுள்ளது. குற்றங்கள் நிறைந்த கிராமப்பகுதியை இளம் பெண்களுக்கான பாதுகாப்பான புகலிடமாக மாற்றவேண்டும் என்பதில் இந்தத் தம்பதி உறுதியாக உள்ளனர்.
அனூப் மற்றும் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அவரது மனைவி மோஜ்கா இருவரும் பியாலி அஷர் ஆலோ பள்ளியை (நம்பிக்கை ஒளி) உருவாக்கியுள்ளனர். இந்தப் பள்ளி நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தப் பள்ளியில் நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை தற்போது 160 மாணவிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தில் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். அப்பாக்களுக்கு மதுப்பழக்கம் இருக்கும். அம்மாக்கள் கணவரைப் பிரிந்து வாழ்பவர்களாக இருப்பார்கள்.
பியாலி அஷர் ஆலோ மாறுபட்ட பள்ளியாகும். இங்கு வழக்கமான பள்ளியைப் போலில்லாமல் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தப் பள்ளியில் பாட்டு, நடனம், நாடகம், கலை, விளையாட்டு போன்ற வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது. இலவச டியூஷனும் எடுக்கப்படுகிறது.
மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு டெய்லரிங், அழகுக்கலை போன்றவற்றிற்கான பயிற்சி வகுப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கிலம் பேச பயிற்சியளிக்கும் வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அனூப் Efforts For Good உடன் உரையாடுகையில்,
“நான் சமீபத்தில் இங்குள்ள சிறுமிகளுக்காக கால்பந்து பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதில் உள்ளூர் சிறுவர்களும் பங்கேற்கின்றனர். இந்தச் சிறுவர்கள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியும் சூதாட்டத்தில் ஈடுபட்டும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். தற்போது சிறுவர்களும் சிறுமிகளும் ஒன்றாக வெவ்வேறு போட்டிகளில் கிராமத்தின் சார்பாக பங்கேற்கின்றனர்,” என்றார்.
பள்ளி துவங்கப்பட்ட பிறகு மோஜ்கா ஸ்லோவேனியாவில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு உதவி கோரினார். அவர்களில் ஒருவர் பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டினார். இந்த மாணவர்கள் செய்தித்தாள்களை மொத்தமாக சேகரித்து அவற்றை விற்பனை செய்து 4.5 லட்சம் ரூபாய் உயர்த்தினார்கள். இந்த தம்பதி இந்தத் தொகையைக் கொண்டு பள்ளிக்கான இடத்தை வாங்கினார்கள். அத்துடன் இலவசமாக டியூஷன் எடுக்கவும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு ’தி டெலிகிராஃப்’ தெரிவிக்கிறது.
மேலும் Christlicher Entwicklungsdienst, FAMI ஆகிய இரண்டு ஜெர்மானிய என்ஜிஓ-க்கள் பள்ளியின் கட்டமைப்பை உருவாக்க இந்தத் தம்பதிக்கு உதவியுள்ளனர்.
இன்று ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ ஆதரவளிக்கிறது. இவ்வாறு ஆதரவளிப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என ’தி டெலிகிராஃப்’ குறிப்பிடுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு சீருடைகள், ஸ்டேஷனரி, சுகாதார பொருட்கள் அடங்கிய மாதாந்திர பேக்கேஜ் போன்றவை பள்ளியிலிருந்து வழங்கப்படுகிறது.
நலிந்த பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவவேண்டும் என்பதே அனூப்பின் கனவு. இதனால் உருவானதுதான் பியாலி ஆஷர் ஆலோ பள்ளி. மோஜ்கா, ஸ்லோவேனியாவைச் சேர்ந்த உளவியலாளர். ஆறு மாத இண்டெர்ன்ஷிப்பிற்காக இந்தியா வந்திருந்தார். அவருக்கும் இதே போன்ற எண்ணம் இருந்துள்ளது. அனூப் ’தி டெலிகிராஃப்’ உடனான உரையாடலில்,
”கல்வி இல்லையென்றால் ஏழை மக்களின் குழந்தைகளும் ஏழைகளாகவே இருப்பார்கள். எங்களது மாணவர்களில் குறைந்தபட்சமாக 50 சதவீதம் பேராவது வளர்ந்து நல்ல நிலையை அடைந்து மற்றொரு ஏழை குழந்தைக்கு ஆதரவளிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தம்பதியின் பயணம் எளிதாக இருந்துவிடவில்லை. அனூப், மோஜ்கா இருவரும் ஒவ்வொரு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசினர். அவர்களது மகள்களை பள்ளிக்கு அனுப்ப சம்மதிக்க வைத்தனர். அதன் பிறகு நிலைமை மாறியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் துவங்கினார்கள்.
”பெண்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய எங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டோம். நாங்கள் இன்னமும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம்,” என்றார் அனூப்.
கட்டுரை: THINK CHANGE INDIA