கேரளாவில் உள்ள ஏழை மக்களுக்கு 5 ஆண்டுகளில் 100 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ள பள்ளி முதல்வர்!
கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள Our Lady’s Convent Girls Higher Secondary School முதல்வரான லிசி சக்கலக்கல் கடந்த ஐந்தாண்டுகளில் ஏழை மக்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 100-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு Our Lady’s Convent Girls Higher Secondary School முதல்வரான லிசி சக்கலக்கல் எட்டாம் வகுப்பு மாணவர்களில் ஒருவரான க்ளாரா பானுவிற்கு வீடு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டார். கட்டிட வேலை செய்துவந்த அவரது அப்பா சமீபத்தில் இறந்துபோனதால் அந்த மாணவியின் குடும்பத்தினர் வீடு இல்லாமல் அவதிப்பட்டனர்.
தனது மாணவியின் சூழ்நிலையைக் கண்ட லிசி, அவருக்கு ஒரு வீடு கட்டிக்கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டார். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அக்கம்பக்கத்தினர் என பலரிடம் நிதி திரட்டினார். இறுதியில் க்ளாராவின் குடும்பத்திற்கு 600 சதுர அடியில் ஒரு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது.
வீடு தேவையிருப்போருக்கு வீடு வழங்கும் இவரது முயற்சிக்கு இதுவே ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. அதே ஆண்டான 2014-ல் இவரது பள்ளியில் ப்ளாட்டினம் ஜூப்ளி கொண்டாட்டம் நடந்தது. அப்போதுதான் லிசி ’ஹவுஸ் சேலஞ்ச் ப்ராஜெக்ட்’ துவங்கத் தீர்மானித்தார்.
தற்போது ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் ஐந்து வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றும் ’Efforts for Good’ குறிப்பிடுகிறது.
லிசி ‘டெக்கான் க்ரானிக்கல்’ உடன் பகிர்ந்துகொள்கையில்,
”100-வது வீட்டின் கட்டுமானம் பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்தது. பிப்ரவரி மாதம் 28-ம் தேதி செல்லானம் பகுதியைச் சேர்ந்த வீடில்லாத குடும்பத்திடம் வீட்டின் சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களும் எங்கள் மாணவிகள்,” என்றார்.
லிசி மேற்கொண்ட திட்டங்கள் இதுமட்டுமல்ல. கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது ’ப்ராஜெக்ட் ஹோப்’ என்கிற மற்றொரு பிரச்சாரத்தையும் துவங்கினார். தீவிரமாக பாதிக்கப்பட்ட நூற்றி ஐம்பது வீடுகள் இந்த திட்டத்தின்கீழ் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டது. நிதி உயர்த்தியதன் மூலமும் மற்ற முயற்சிகள் மூலமும் சில வீடுகள் பழுது பார்க்கப்பட்டது. மேலும் சில வீடுகள் மறு கட்டுமானம் செய்யப்பட்டது.
ஒரு வீடு கட்டுவதற்கு 15 லட்ச ரூபாய் தேவைப்பட்டதால் லிசியின் முயற்சி எளிதாக இருந்துவிடவில்லை.
ஏழைகளுக்கு வீடு கட்டும் முயற்சி குறித்து லிசி கூறுகையில்,
“மாணவர்கள் தாமாக முன்வந்து தங்களது பிறந்தநாள் பரிசுகள், சேமிப்புப் பணம் போன்றவற்றை இந்த நோக்கத்திற்காக வழங்கினர். ஆசிரியர்களும் மாணவர்களும்கூட தாராளமாக நன்கொடை அளித்தனர்,” என்றார்.
இந்த முயற்சியின் உன்னத நோக்கத்தை உணர்ந்து பலர் ஆதரவளிக்கத் துவங்கினர். தினக்கூலிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பலர் தங்களது பெயரைக் கூட வெளியிடாமல் வீடு கட்டும் முயற்சியில் உதவ முன்வந்தனர். தொழிலாளர்கள் இலவசமாக பணியாற்றினர். கட்டுமானப் பணிக்கான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டது. எனவே ஐந்து லட்சத்திற்குள் வீடு கட்டும் பணி முடிவடைந்தது. அனைத்து வீடுகளும் இரண்டு படுக்கையறைகள், குளியலறைகள், சமையலறைகள் வசதி கொண்டதாகவும் பேரழிவுகளைத் தாங்கும் திறன் கொண்டவை.
லிசியின் முயற்சியால் பலர் பலனடைந்துள்ளனர். அவற்றுள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரின் வாழ்க்கையை வீடு கட்டும் முயற்சி எவ்வாறு மாற்றியமைத்தது என்று பகிர்ந்துகொண்டார்.
”நாங்கள் வீடு கட்டிக் கொடுத்த பெண் ஒருவருக்கு இளம் வயதிலேயே திருமணம் முடிந்திருந்தது. அவரது கணவர் இறந்து போய்விட்டார். புகுந்த வீட்டினர் அவரை ஒதுக்கிவிட்டனர். தனிமையில் இருந்த அவரது மனநலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு வீடு கட்டிக் கொடுத்த பிறகு அவர் பணிக்குச் செல்லவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் துவங்கினார்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “எங்களது முயற்சி வெறுமனே வீடுகளை ஒப்படைப்பதல்ல. இது ஒருவரின் வாழ்க்கையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை மேம்படுத்தும் செயலாகும்,” என்று Efforts For Good குறிப்பிடுகிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA