இந்தியாவில் கொரோனாவை வென்ற 90+ வயதான மூத்த குடிமக்கள்!
சாதனை படைக்க மட்டுமல்ல, நோய் தொற்றில் இருந்து மீளவும் வயது ஒரு தடையல்ல என்பதை இவர்கள் நிரூபிக்கின்றனர்.
கொரோனா தொற்று; ஏழை, பணக்காரர், ஆண், பெண், இளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இருப்பினும் முதியவர்களுக்கு ஏற்கெனவே வயது மூப்பு தொடர்புடைய உடல் உபாதைகள் இருக்க வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு நோய் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 90 வயதைக் கடந்த பல முதியவர்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அவர்களில் சிலரைப் பற்றி இங்கு பார்ப்போம்.
மத்தியப்பிரதேசம் – ராமேஷ்வர் சௌத்ரி (90 வயது)
மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராமேஷ்வர் சௌத்ரி என்கிற 90 வயது முதியவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.
“கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொண்டு வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று ராமேஷ்வர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கேரள ஜோடி – தாமஸ் அபிரகாம் மற்றும் மரியம்மா (93 வயது, 88 வயது)
கேரளாவில் 93 வயதான தாமஸ் அப்ரகாம் என்கிற முதியவருக்கும் 88 வயதான அவரது மனைவி மரியம்மாவிற்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இணை நோய் பாதிப்புகளும் இருந்துள்ளது. இவர்கள் ஒரு கட்டத்தில் உடல்நிலை மோசமாகி அதன் பின்னரே நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக வயதில் நோய் தொற்று ஏற்பட்டு குணமடைந்த தம்பதி இவர்கள்தான்.
இவர்களது மகன் குடும்பத்துடன் இத்தாலியில் இருந்து கேரளா திரும்பியுள்ளனர். அவர்களிடம் இருந்தே இந்தத் தம்பதிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையே இவர்கள் குணமடைந்ததற்கு முக்கியக் காரணம் என்கிறார் இவர்களது பேரன்.
கர்நாடகா - ஹல்லம்மா (100 வயது)
கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹல்லம்மா என்கிற 100 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். இவரது மகன் வங்கியில் பணிபுரிகிறார். அவருக்கு ஜூலை 3-ம் நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஜூலை மாதம் 16-ம் தேதி ஹல்லாமாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
“மருத்துவர்கள் எனக்கு சிறப்பாக சிகிச்சையளித்தார்கள். வழக்கமான உணவுடன் தினமும் ஒரு ஆப்பிள் கொடுத்தார்கள். மருந்து மாத்திரைகள் கொடுத்து ஊசி போட்டார்கள். இப்போது நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். கோவிட்-19 தொற்று சாதாரண சளி தொந்தரவு போன்றதுதான்,” என்று ஹல்லம்மா ஏஎன்ஐ-இடம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி – மங்கம்மா (101 வயது)
திருப்பதியைச் சேர்ந்த 101 வயது மூதாட்டி மங்கம்மா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
இவரது மன உறுதியே நோயை எதிர்த்துப் போராடி குணமடையச் செய்துள்ளதாக மருத்துவர்கள் வியக்கின்றனர்.
இவர் அனுமதிக்கப்பட்டிருந்த SVIMS மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் ராம் கூறும்போது,
“மங்கம்மா சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தார். மன உறுதியுடன் நோய் தொற்றை எதிர்த்து வென்றுள்ளார். இவர் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தானே, மும்பை - சுக் சிங் சாப்ரா (102 வயது)
28 நாட்கள் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள நாட்டின் அதிக வயதானவர் என்ற பெருமையை பெற்றார் சுக் சிங் சாப்ரா. சளி, காய்ச்சலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாப்ராவுக்கு, கொரோனாவை பற்றியோ தனக்கு அது வந்தது பற்றியோ தெரியாது.
“வயது மூப்பின் காரணமாக அவருக்கு காது கேட்காததால அவருக்கு இந்த தொற்று பற்றி பெரிதாக தெரியாது. எங்கள் குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கொரோனா உறுதி ஆனதில் அவருக்கும் இருந்தது. சளி, காய்ச்சலோடு மூச்சு விட சிரமப்பட்ட அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து, தற்போது பூரண குணமடைந்துள்ளார்,” என சாப்ராவின் பேரன் கூறினார்.
சுக் சிங் சாப்ரா குணமடைந்து வீடு திரும்பியபோது அவரை பொதுமக்களும், அக்கம்பக்கத்தினரும் மலர் தூவி வாழ்த்தி வரவேற்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ள நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, குறிப்பாக இவர்களைப் போன்ற முதியவர்கள் குணமடைந்திருப்பது தொற்று பாதிக்கபட்டவர்கள் அச்சம் கொள்ளாமல் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடையலாம் என்கிற நம்பிக்கையை மனதில் விதைக்கிறது.
தொகுப்பு: ஸ்ரீவித்யா