கேரள மாணவிக்கு பி.எச்டி உதவித் தொகை வழங்கிய ஷாருக்கான்!
ஷாருக்கானின் பெயரில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது விவசாய நடைமுறைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள கோபிகாவிற்கு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஆண்டு ‘ஷாருக்கான் லா ட்ரோப் பல்கலைக்கழக’ பி.எச்டி உதவித்தொகையை அறிவித்திருந்தது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ள மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் பதினோறாம் பதிப்பிற்கான அறிமுக நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு ஷாருக்கான் லா ட்ரோப் பல்கலைக்கழக பி.எச்டி உதவித்தொகை வழங்கினார்.
ஷாருக்கானின் பெயரில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது விவசாய நடைமுறைகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள கோபிகாவிற்கு முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. ஷாருக்கான் கோபிகாவிற்கு இந்த உதவித்தொகையை வழங்கிய பின்னர் கூறும்போது,
“எனக்கு கல்வி மீது ஈடுபாடு அதிகம். ஒரு நாடோ, குடும்பமோ, நகரமோ, மாநிலமோ முன்னேற கல்வி உதவும் என்பதே என்னுடைய வலுவான நம்பிக்கை. கல்விக்கு எல்லையே இல்லை,” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பெண்களை படிக்கவைத்து தற்சார்புடன் வாழ்வதற்கான சக்தியளிப்பது மிகவும் அவசியம். பெண்களுக்கு கல்வியறிவு வழங்கப்படுவதே உலகை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் மார்க்கமாகும்,” என்றும் குறிப்பிட்டார்.
கோபிகா பி.எச்டி மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பயணிக்க இந்த உதவித்தொகை வழிவகுக்கும் என்றும் ஷாருக்கான் குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறும்போது,
“கோபிகாவின் அர்ப்பணிப்பையும் மன உறுதியையும் பாராட்டுகிறேன். இந்தியாவில் விவசாயத் துறையை மேம்படுத்துவதில் பங்களிக்க வேண்டும் என்கிற அவரது கனவு நனவாக இந்த உதவித்தொகை கைகொடுக்கும்,” என்று தெரிவித்தார்.
செய்தி: ANI