சிறிய நகரங்களில் செயல்பாட்டை வலுவாக்க விரும்பும் ShareChat!
பெங்களூருவைச்சேர்ந்த ஷேர் சாட் நிறுவனம், தனது மாதாந்திர தீவிர பயனாளிகள் எண்ணிக்கையை இரு மடங்களாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
பிராந்திய மொழி சமூக ஊடக சேவையான ஷேர்சாட், அடுத்த சில மாதங்களில், 100 முதல் 150 பேரை பணிக்கு அமர்த்திக்கொள்ள இருப்பதாகவும், இரண்டாம் அடுக்கு நகரங்களில் தனது உள்கட்டமைப்பை வலுவாக்குவதில் தொடர்ந்து முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
60 மில்லியன் தீவிர மாதாந்திர பயனாளிகளை கொண்டுள்ள இந்த பெங்களூரு நிறுவனம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
"அடுத்த பில்லியன் பயனாளிகளை ஈர்ப்பதிலும், எங்கள் மேடையை விரிவாக்கம் செய்வதிலும் முன்னேறி வருகிறோம். ஷேர்சாட்டிற்கு உற்சாகமான, நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளோம். ஒவ்வொரு இணைய நிறுவனமும், லாபத்தில் கவனம் செலுத்துவதற்கு முன், பெரிய அளவில் வளர்ச்சி காண்பதில் முதலீடு செய்கிறது,” என்று ஷேர்சார் இணை நிறுவனர் மற்றும் முதல் செயல் அதிகாரி பாரீத் ஆஹான் கூறினார்.
ஷேர்சாட்டின் 15 முதல் 20 சதவீத பயனாளிகள் நாட்டின் முன்னணி 8 நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 30 முதல் 33 சதவீத பயனாளிகள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் கூறுகிறார். இந்திய மொழிகளில் அணுகக் கூடியதாக உள்ள இந்த சேவை, தினமும் 23 முதல் 24 நிமிடம் என அதிக பயன்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
நிறுவனம் இப்போது வருவாய் முயற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறது. விளம்பர இருப்பை மட்டும் உருவாக்காமல், பயனாளிகளுக்கு பலவித அனுபவங்களை அளிக்கும் வகையில், பிராண்ட்களுடன் இணைந்து சோதனை முன்னோட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக, ஷேர்சாட் நிறுவன முதன்மை வர்த்தக அதிகாரி சுனில் காமத் கூறினார்.
மொஹல்லா டெக் நிறுவனத்திற்கு சொந்தமான ஷேர்சாட், 2018-19 நிதியாண்டில் ரூ.414.7 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.33.8 கோடியாக இருந்தது. இருப்பினும், அதன் வருவாய், ரூ.1.7 கோடியில் இருந்து ரூ.25.8 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஷேர்சாட், டிவிட்டர் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து 100 மில்லியன் டாலர் நிதித் திரட்டியதாக தெரிவித்தது. இதுவரை 224 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. டிரஸ்ட்பிரிட்ஜ் பாட்னர்ஸ், ஷுன்வெய் கேபிடல், லைட்ஸ்பீடு வென்சர் பாட்னர்ஸ் மற்றும் SAIF கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
"கடந்த ஆண்டு டிசம்பரில் 110 ஊழியர்கள் என்பதில் இருந்து 300 ஊழியர்களாக வளர்ச்சி அடைந்துள்ளோம். நாங்கள் குழுவை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளதால, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 400 முதல் 450 ஊழியர்கள் வரை பெற்றிருப்போம். 2020ல், 120 மில்லியன் தீவிர மாதாந்திர பயனாளிகளை பெறத் திட்டமிட்டுள்ளோம்,” என்று ஆஹான் கூறுகிறார்.
இந்த மேடையில், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் பிரபலமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐஐடி கான்பூரில் படித்த அன்குஷ் சச்தேவா, பாரீத் அஹான் மற்றும் பானு சிங் ஆகியோரால், 2015 அக்டோபரில் துவக்கப்பட்ட ஷேர்சாட், இந்திய மொழிகளில், உள்ளடக்கத்தை கண்டறிந்து, பகிர வழி செய்கிறது. இந்தி, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
பயனாளிகள் பதிவுகளை உருவாக்க, பயனாளிகளை பின் தொடர, அனைத்து வகை உள்ளடக்கத்தையும் ரசிக்க, ஒருவருக்கு ஒருவரு செய்தி பரிமாறிக்கொள்ள, மற்ற தகவல் தொடர்பு மேடைகளில் பகிர்ந்து கொள்ள, இந்த சேவை வழி செய்கிறது.
கூகுள்- கேபிஎம்ஜி அறிக்கை படி, 2021ல், 536 மில்லியன் இந்தியர்கள் ஆன்லைனில், பிராந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை அணுகுவார்கள் என தெரிவிக்கிறது. போன்களின் விலை குறைவது, டேட்டா கட்டணம் மற்றும் உள்ளூர் மொழி உள்ளடக்கம் அதிகரிப்பு ஆகியவை இதற்கு உதவுகிறது.
2021ல், இந்தி இணைய பயனாளிகள் (201 மில்லியன்) ஆங்கில இணைய பயனாளிகள் (199 மில்லியன்) எண்ணிக்கையை மிஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த இணைய பயனாளிகள் எண்ணிக்கை 735 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2016ல், இந்திய மொழிகளில் மற்றும் ஆங்கிலத்தில் இணையத்தை அணுகியவர்கள் எண்ணிக்கை 234 மில்லியன் மற்றும் 175 மில்லியனாக இருந்தது.
செய்தி: பிடிஐ | தமிழில்; சைபர்சிம்மன்