புற்றுநோயில் இருந்து மீண்டு ஏறுதல் விளையாட்டில் சாதிக்கும் ஷிவானி!
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு 18 வயதான ஷிவானி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்.
ஒன்பது வயதில் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளனானது முதல், செங்குத்தான சுவரை ஏறுவதற்காக மொத்த வலுவும் உங்கள் கைகளில், குறிப்பாக விரல் நுனிகளில் வைக்கப்படும் விளையாட்டை ஏற்றுக்கொண்டது வரை ஷிவானி சரக், மனஉறுதி, விடாமுயற்சி மற்றும் வெற்றிக்கான உத்வேகத்தின் அடையாளமாக திகழ்கிறார்.
ஜம்மூவைசேர்ந்த 18 வயதான ஷிவானி, இந்தியாவின் முன்னணி ஏறுதல் விளையாட்டு (ஸ்போர்ஸ் கிளைம்பிங்) வீராங்கனையாக கருதப்படுகிறார். பல தடைகளை வென்று சிகரங்களை தொட்டு வருகிறார். முதல் முறையாக இந்த விளையாட்டு இடம்பெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் ஷிவானி பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் வெண்கலம் வென்றார். உள்ளூரில் முதல் சர்வதேச பதக்கம் வென்றது குறித்து உற்சாகம் அடைபவர், 2019ல் நடைபெற்ற ஏசிசி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார்.
சோதனை
ஜம்மூவில் பிறந்து வளர்ந்த ஷிவானிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர். பள்ளியில் டேக்வாண்டோ பயிற்சி பெற்றாலும் அதில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கவில்லை. 2009ல் ஷிவானிக்கு 9 வயதாக இருந்த போது சோதனை தாக்கியது.
“அது புத்தாண்டு மற்றும் என் சகோதரர் பிறந்தநாள் என நினைவில் உள்ளது. எல்லோரும் கொண்டாட்டத்தில் இருந்த போது, எனக்கு மட்டும் கடும் வயிற்று வலி உண்டானது. நான் அழுவதை பார்த்த சகோதரி என் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் என்னை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். டாக்டர் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய என் அப்பா வலியுறுத்தினார். அதன் பிறகு நான் சண்டிகர் அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கு ஓவரியன் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, உடனே சிகிச்சையும் துவங்கியது,” என்கிறார் ஷிவானி.
ஷிவானியின் கீமோதெரிபி சிகிச்சைக்காக ஜம்மூவுக்கும், சண்டிகருக்கும் சென்று வர வேண்டிய நிலையில், இது குடும்பத்திற்கே சோதனையாக அமைந்தது.
“பெற்றோர் முன் நான் அழுதால் அவர்களும் அழுவார்கள். எனவே நான் எப்போதும் வலுவாக இருக்க முயற்சித்தேன். நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் என்னைச்சுற்றி இருந்தனர். அவர்களும் குணமாக வேண்டும் என கடவுளிடம் பிராத்தனை செய்வேன். தலைமுடி உதிர்வது உள்ளிட்ட விளைவுகளை எதிர்கொண்டேன். இது மிகுந்த சோதனை காலமாக அமைந்தது,” என்கிறார் அவர்.
2012ல் அவர் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கு செல்லத் துவங்கினார். 14 வயதில் சகோதரி போலவே அவரும் ஏறுதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டார். இது ஒரு கடினமான விளையாட்டாகும். இது மலைப்பாறையில் பாதுகாப்பிற்காக ஆங்கர்கள் பொறுத்தப்பட்டிருக்கும். அதிருந்து ஒரு கயிறு ஏறுபவர் மீதும் பொருத்தப்பட்டிருக்கும்.
அவர் பள்ளியில் உள்ள 4 மீட்டர் சுவரில் ஏறத்துவங்கினார். துவக்கத்தில் அவரது உடல் நிலை தடையாக இருந்தாலும், டாக்டர் அனுமதி கொடுத்தால் தொடர்ந்து இதில் ஈடுபடலாம் என அவரது தந்தை ஊக்கம் அளித்தார். ஷிவானி பலவீனமாக இருந்ததால் இது எளிதாக இருக்கவில்லை. தனது சகோதரர்கள் உதவியை நாடினார். அடுத்த ஓராண்டில் ஷிவானி இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபடத்துவங்கினார்.
மன உறுதியின் பலன்
மெல்ல ஷிவானி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். 2015ல் தேசிய போட்டியில் தங்கம் வென்றார், 2016ல் உலகக் கோப்பையில் பங்கேற்றார். அவர் ராணுவத்துடனும் பயிற்சி செய்கிறார்.
ஏறுதல் விளையாட்டு கடினமானது என்றாலும், வேறு வித சவால்களும் இருந்தன. ஜம்மூவில், ஒரு ஏறும் சுவர் தவிர, ஷிவானிக்கு போதிய பயிற்சி வசதிகள் இல்லை.
“ஆசியப் போட்டிகளுக்கு ஒரு பயிற்சி முகாம் தான். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை நடந்தது. நாங்கள் சொந்தமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. எனவே தான் ராணுவத்துடனான பயிற்சி எனக்கு ஊக்கம் தருகிறது,” என்கிறார் ஷிவானி.
ஷிவானி தினமும் ஏறுதல் பயிற்சியுடன், உடற்பயிற்சி செய்கிறார். ஒலிம்பிக் வாய்ப்பு பற்றி அவர் கனவு காண்கிறார். 2022 ஆசிய விளையாட்டு போட்டிகளை இலக்காகக் கொண்டுள்ளார்.
வெல்ஸ்பனின் சூப்பர் ஸ்போர்ஸ்வுமன் திட்டம் இப்போது அவரை ஆதரித்து வருகிறது.
“இந்தத் திட்டத்தின் ஆதரவு காரணமாக, நான் பல போட்டிகளில் பங்கேற்று, மேலும் பல வீரர், வீராங்கனைகளை சந்திக்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன்,” என்கிறார் ஷிவானி. அவரது குரலி உறுதியும், நம்பிக்கையும் வெளிப்படுகிறது.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர்சிம்மன்