மகளிர் தினத்தன்று மட்டும் பெண்களை போற்றினால் போதுமா...?
எங்கு பார்த்தாலும் பெண்மையைப் போற்றும் விளம்பரங்கள், போஸ்டர்கள், கடைகளில் சலுகைகள், பக்கம்பக்கமாக பெண் சாதனையாளர்களின் கதைகள் என திடீரென நம்மைச் சுற்றி பெண்கள் மீதான மரியாதை அதிகரித்துக் காணப்படிகிறதென்றாலே நாம் புரிந்து கொள்ளலாம் மார்ச் 8ம் தேதி நெருங்கி விட்டதென்று.
’உலக மகளிர் தினம்’ கொண்டாடப்படும் மார்ச் மாதத்தில் எல்லாமே பின்க் கலரில் தென்படுவது ஆச்சரியப்படுவதற்கில்லைதான். ஆனால் உண்மையில் இவையெல்லாம் பெண்மையைப் போற்றுவதற்கான வழிகளா? பெண்களுக்கு மரியாதை செலுத்த நினைப்பவர்கள் இந்த வகையில் அந்த ஒரு நாள், அல்லது வாரம், மாதம் மட்டும் பெண்மையை போற்றினால் போதுமானதா? உண்மையில் பெண்களின் இன்றைய நிலை என்ன?
என்னைப் பொறுத்தவரை பெண்கள் எப்பொழுதுமே தங்குதடையின்றி தங்களின் இலக்கை அடைய போராடி வென்று கொண்டேதான் இருக்கிறார்கள் என்பேன். அது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தாலும் சரி, இப்பொழுது இந்த டிஜிட்டல் யுகத்திலும் சரி. அவர்கள் முன்னேற நினைத்தால் அவர்களை தடுக்க எவராலும் இயலாது. ஆனால் அந்த முடிவை ஒரு பெண் எடுப்பதே இங்கு உற்றுநோக்க வேண்டிய ஒன்று.
குடும்பச்சூழலில் உள்ள ஒரு பெண், தனித்து இயங்க, சுயகாலில் நிற்க, தொழில் தொடங்க நினைத்தால் அது அவ்வளவு சுலபமான செயல் இல்லை. ஆனால் அவள் அந்த முடிவை எடுத்த நொடியில் தன்னைச் சுற்றியுள்ள தடைகளை, சவால்களை உடைத்தெறிய என்னென்ன வழிகள் உள்ளதென்று கண்டுபிடித்து அதை முறியடித்து முன்னே போய்கொண்டே இருப்பாள் என்பதே நிதர்சனம். இதற்கு அவளின் பெற்றோர், கணவர், குழந்தைகள், நண்பர்கள், சமூகம் எல்லாம் ஒத்துழைக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்து நிற்கத்தேவையில்லை. ஏனெனில் அப்படி யோசிக்கத் தொடங்கிவிட்டால் அடுத்த அடி எடுப்பதற்குள் காலம் ஓடிவிடும்.
இப்படி நான் சொல்வதற்குக் காரணம், கடந்த வாரம் நான் சந்தித்த பெண்கள் மற்றும் அவர்களின் கதைகள் என்னை பெரிதும் பிரமிக்கவைத்ததே. ‘உழைக்கும் பெண்கள் சாதனையாளர்கள் விருது’ என்ற தலைப்பில் நடந்த விழாவிற்கு வந்திருந்த அத்தனைப் பெண்களின் கதைகளும் வெவ்வேறு தளங்களில் இருந்தது. இளம் வயதில் கணவரை இழந்து, தன் குழந்தைகளை காப்பாற்ற மற்றவர்களின் உதவியின்றி சுயகாலில் நிற்க, தன் திறமையை வளர்த்துக் கொண்டு இன்று ஒரு பிரபல அழகுக்கலை நிபுணராகி, சொந்த பார்லர், வீடு, கார் என வசதிகளோடு தன் குழந்தைகளையும் நல்ல பள்ளியில் படிக்கவைத்து ஆளாக்கியுள்ளார் ஒரு விதவைப் பெண். மற்றொரு பெண்மணி, சிறுவயதில் இருந்து பெற்றோர்களால் வெறுக்கப்பட்டு, சரியான கல்வியும் கிடைக்காமல், பலமுறை தற்கொலைக்கு முயன்று, நடந்து முடிந்த திருமணமும் தோல்வியில் முடிய, அவர் சந்திக்காத இன்னல்களே இல்லை எனலாம். ஆனால் அவர் எதற்குமே சளைத்துப் போகாமல், எவரும் தேர்ந்தெடுக்காத பெண்கள் பாடி பில்டிங் துறையில் பதக்கங்கள் பல வென்று இன்று உலக மேடைகளில் பரிமளிக்கிறார். விட்டுப் பிரிந்த கணவர், வெறுத்து ஒதுக்கிய சொந்தங்கள் முன் தன் மகனையும் வளர்த்து ஆளாக்கி இன்று தனக்கான வழியை காண்பித்துள்ளார்.
இது வெறும் இரு பெண்களின் நிஜக்கதை மட்டுமல்ல, அந்த விழாவிற்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையிலும் இப்படி எத்தனையோ கதைகள் அடங்கியிருந்தது. ஆனால் அதற்கெல்லாம் அஞ்சி, அடங்கி, ஒடுங்கி இருந்திருந்தால் அந்த மேடையில் அவர்களால் கம்பீரமாக நடைப்போட்டிருக்க முடியுமா என்ன?
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், அங்கு வந்திருந்த பெண்கள் எவரும் மேல்தட்டு குடும்பங்களில் பிறந்தவர்கள் அல்ல. தங்களுக்கான வழியை அவர்களாகவே தேடிக் கொண்டவர்கள். இவர்களைப் போல் பல பெண்கள் வெளி உலகில் இன்னும் அதிகமாகவே உள்ளனர். என்ன உலகிற்குத்தான் அவர்களின் வெற்றி பெரிதாகத் தெரிவதில்லை. இதற்காகத்தான் நான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் மகளிர் தினத்தன்று மட்டும் பெண்களை போற்றும் போக்கைப் பற்றி குறிப்பிட்டேன். ஏனெனில் பெண்களின் வெற்றிக் கதைகள் நம்மைச்சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. அதனால் இந்த ஒரு நாள் மட்டும் ஒருசிலரை பாராட்டுவது பெண்களை போற்றும் செயலாகிவிடாது. அதே நேரம் பெண்களைச் சுற்றி உள்ளோரும் அவர்களின் பெருமையை வீட்டில், அலுவலகத்தில், சமூகத்தில்; மதித்திட தினம் தினம் அக்கதைகளை பறைசாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
இவ்வாறு பெண்களை போற்றவே யுவர்ஸ்டோரி அவர்களின் கதைகளை 365 நாளும் எழுதி வருகிறது. சிறு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் நகரவாழ் பெண்கள் வரை வீட்டைத்தாண்டி தங்களால் சாதித்திட முடியும் என்ற நம்பிக்கையில், எதோ ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தி சுயகாலில் நிற்கும் மகளிரின் கதைகளை ’சாதனை அரசிகளாக’ மகுடம் சூட்டி போற்றிப் புகழ்கிறோம். அவர்களின் கதைகளை சக பெண்களாகிய நீங்களும், ஆண்களும் பாராட்டி அதில் கிடைக்கும் ஊக்கத்தில் உங்கள் வீட்டுப் பெண்களும் இலக்குகளை அடைய உந்துதல் அளியுங்கள். இதுவே மகளிர் மீதான மரியாதையை சமூகத்தில் உயர்த்தும். அப்போது அவர்களைப் புகழ்வதற்கென்று ஒரு தினம் தேவைப்படாது.
அண்மையில் யுவர்ஸ்டோரி நடத்திய பெண்களுக்கான விழாவில் எமது நிறுவனர் சொல்லிய வார்த்தைகளே இன்று என் நினைவுக்கு வருகிறது.
”பெண்களாகிய நீங்கள் உங்களை நீங்களே காதலியுங்கள். உங்களை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணாக நாம் மற்றவர்களை மிகவும் நேசிக்கிறோம், கொண்டாடுகிறோம், ஆனால் நாம் நம்மை கொண்டாடவும், நேசிக்கவும் மறந்து விடுகிறோம். நம்மை நாமே கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார்.
ஆம், பெண்களாகிய நாம் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு, நாமும் சாம்பியனாகி, மற்றவர்களையும் சாம்பியனாக்க உற்சாகத்தோடும், உத்வேகத்துடனும் தினமும் நடைப்போடுவோம்... வாருங்கள்...