பகிர்ந்துகொள்ளும் வகையிலான அலுவலக இடத்தை புக் செய்ய உதவும் தளம்!
அலுவலக இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறை சிறு தொழில் முனைவோர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் செலவுகளை சேமிக்க உதவும்.
குருகிராமைச் சேர்ந்த சந்தீப் சிங்கின் அப்பா பேருந்து ஓட்டுநராக இருந்தார். குடும்பத்தின் நிதிச்சூழல் காரணமாக சந்தீப் பட்டப்படிப்பு முடிக்கமுடியாமல் போனது. டெல்லியில் உள்ள கிரோரிமல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இவர் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டார். இருப்பினும் இவர் தொழில்முனைவில் ஈடுபடுவதற்கு இது தடையாக இருக்கவில்லை.
”நான் யூட்யூப் மூலம் வீடியோக்களைப் பார்த்து வலைதளம் உருவாக்குவதில் திறனை வளர்த்துக்கொண்டேன். எனக்கு 23 வயதிருக்கும்போதே ’குரு இன்ஃபோசிஸ்’ என்கிற வெப் சேவை ஏஜென்சி தொடங்கினேன். அதன் பிறகு Edunuts என்கிற கல்வி போர்டல் தொடங்கினேன்,” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது,
“என்னுடைய முயற்சி எதிர்பார்த்த வகையில் வெற்றியடையவில்லை. பல விதங்களில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. எதிர்மறையான அனுபவங்கள் கிடைத்தன. அது வெறும் ப்ராடக்ட் தோல்வி அல்ல. என்னுடைய நேரம், முயற்சி, மூலதனம் ஆகியவற்றுடன் நான்காண்டுகள் செலவிட்டு நான் உருவாக்கிய அற்புதமான குழு அனைத்தும் வீணானது,” என்றார்.
ஒவ்வொரு கடினமான சூழலிலும் நம்பிக்கை அளிக்கும் சில விஷயங்கள் நடப்பதுண்டு. அதேபோல்தான் சந்தீப்பும் கடினமான சூழலில் அவருக்கு ஆர்வம் அதிகமுள்ள பகுதியைக் கண்டறிந்தார். அவர் ஏற்கெனவே அலுவலகத்திற்காக பயன்படுத்தி வந்த இடத்தை பணப்பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது. எனவே அலுவலக இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறை குறித்து ஆராயத் தொடங்கினார்.
இந்தியாவில் அலுவலக இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறைக்கான தேவை அதிகரித்து வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தகைய பணியிடங்களுக்கான தேவை இந்தியாவில் அதிகமாக உள்ளது.
குறிப்பாக நடுத்தர மற்றும் பெரியளவிலான வணிகங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய அலுவலக அறைகளையும் அத்துடன் குறைந்த விலையில் வழங்கப்படும் உள்கட்டமைப்புகளையும் அதிகம் பயன்படுத்துகின்றன.
எனினும் இத்தகைய பகிர்ந்துகொள்ளும் அலுவலக அறைகளை நேரடியாக ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் புக் செய்யும் வசதி இல்லை என்பதை சந்தீப் கவனித்தார். மீட்டிங் அறைகள் மற்றும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பணியிடங்களுக்கான சந்தைப்பகுதியை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணினார்.
இந்த எண்ணமே 2019ம் ஆண்டில் மீண்டும் தொழில்முனைவில் ஈடுபட்டு Flexispaces என்கிற முயற்சியைத் தொடங்க ஊக்கமளித்தது. தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இடவசதி இருப்பதை உறுதிசெய்துகொள்வது உள்ளிட்ட நடைமுறைகளின் அவசியமின்றி வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்திசெய்யத் தொடங்கினார் சந்தீப்.
ஃப்ளெக்சிஸ்பேசஸ் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. Awfis, Cowrks, 91springboard, Instaoffice போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.
ஃப்ளெக்சிஸ்பேசஸ் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாக சந்தீப் தெரிவித்தார்.
சந்தீப் நிறுவனத்தைத் தொடங்கியது குறித்தும் இதன் சிறப்பம்சம் குறித்தும் எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக உரையாடலில் பகிர்ந்துகொண்டார். அதன் தொகுப்பு இதோ:
எஸ்எம்பிஸ்டோரி: அலுவலக இடத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக ஆராய்ந்த நிலையில் இதில் வணிக வாய்ப்பு இருப்பதை எவ்வாறு உணர்ந்தீர்கள்?
சந்தீப் சிங்: இதற்கு முன்பு நான் தொடங்கிய ஸ்டார்ட் அப் குழுவிற்காக 80 இருக்கை வசதிகள் கொண்ட பணியிடம் அமைக்கப்பட்டிருந்தது. பணப்பற்றாக்குறை காரணமாக இந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டோம். புதிய வணிகத்தில் ஈடுபட விரும்பியதால் பகிர்ந்துகொள்ளும் வகையிலான அலுவலக இடத்தைத் தேடினேன். அதற்கான செலவு குறித்து ஆய்வு செய்தேன். இறுதியாக கன்னாட் ப்ளேஸ் பகுதியில் பகிர்ந்துகொள்ளும் முறையில் இரண்டு இருக்கைகள் எடுத்துக்கொண்டேன்.
பணியிடத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறையில் பல்வேறு இடைவெளிகள் இருப்பதை உணர்ந்து இதுகுறித்து ஆழமாக ஆராய்ந்தேன். அலுவலக இடங்களை நேரடியாக புக் செய்துகொள்ளும் வசதி இல்லை என்பதையும் இந்தப் பிரிவில் ஆன்லைனில் செயல்படவில்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். அலுவலக இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறை குறித்து பலர் அறியவில்லை. இத்தகைய வசதி இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எனவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஃப்ளெக்சிஸ்பேசஸ் தொடங்கத் தீர்மானித்தேன்.
எஸ்எம்பிஸ்டோரி: இந்த வணிகம் எவ்வாறு செயல்படுகிறது? எந்தெந்த பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது?
சந்தீப் சிங்: ஃப்ளெக்சிஸ்பேசஸ் முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது. பயனர் தனது தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்ளும் அலுவலக இடத்தை ஆன்லைனில் கண்டறியலாம். அவரது தனித்தேவைக்கேற்ற சிறந்த இடத்தைக் கண்டறியவும் புக் செய்யவும் நாங்கள் உதவுகிறோம். உடனடித் தேவையாக இருப்பினும் முன்பதிவு முறையாக இருப்பினும் இடத்தை வழங்குபவர் புக்கிங்கை உறுதிசெய்த பிறகே இந்த செயல்முறை நிறைவடைகிறது.
நிறுவனங்கள் தங்களது அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வெளியே வேறொரு பகுதியில் சந்திப்பு அல்லது நிகழ்வு ஏற்பாடு செய்யும்போது அதற்கான இடத்தை புக் செய்ய இந்தத் தளம் உதவுகிறது. செயலி அல்லது வலைதளம் மூலம் ஒரு சில க்ளிக் மட்டும் செய்தால் போதும். எந்தவித தடங்கல்களும் இன்றி எளிதாக புக் செய்துவிடலாம். பயிற்சியளிப்பதற்கான இடத்தை புக் செய்வதற்கும் நாங்கள் உதவுகிறோம். தற்போது எங்களது வாடிக்கையாளர்களுக்கு எட்டு வெவ்வேறு பிரிவுகளின்கீழ் சேவையளித்து வருகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தினிடையே உங்களது சேவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
சந்தீப் சிங்: பயிற்சியளிப்பதற்கான எங்களது இடவசதியை வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் அவர்களது செலவு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. பயன்படுத்தாத இடத்திற்கான செக்யூரிட்டி டெபாசிட் அல்லது வாடகை செலுத்தவேண்டிய அவசியமிருக்காது.
ஸ்டார்ட் அப் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சந்திப்பு ஏற்பாடு செய்வதைத் தவிர்த்துவிட்டு எங்களது சந்திப்பு அறைகளைப் பயன்படுத்திக் கொண்டு பணத்தை சேமிக்கின்றனர். எங்கள் மூலமாகவும் அவர்களுக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர்.
எஸ்எம்பிஸ்டோரி: வணிக வளர்ச்சி மற்றும் நிலைப்படுத்துதல் தொடர்பாக நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
சந்தீப் சிங்: இந்தியாவில் இத்தகைய வாய்ப்பு இருப்பது குறித்து பலர் அறியவில்லை. சந்தை வளர்ச்சி என்பது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. புதிய வணிகத்தைப் பொறுத்தவரை சவால்கள் அதிகம். எங்கள் நிறுவனம் அதன் வளர்ச்சிப்பாதையில் சந்திக்க நேரும் ஒவ்வொரு பிரச்சனையையும் அடையாளம் கண்டு தீர்வுகண்டு வருகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: இதுபோன்ற பிரிவில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?
சந்தீப் சிங்: ஆரம்பகட்டத்தில் குறைந்த செலவில் வணிக முயற்சியில் ஈடுபடுவது சிறந்தது. மக்கள் உங்களது வணிகம் குறித்து அறியவேண்டும். உங்கள் மீது நம்பிக்கை ஏற்படவேண்டும். இது வளர்ந்து வரும் புதிய சந்தை என்பதால் இத்தகைய சேவை குறித்த தகவல்களோ போட்டி நிறுவனங்கள் பற்றிய தொகுப்புகளோ ஏதும் இல்லை.
எஸ்எம்பிஸ்டோரி: சப்ளையர் மேலாண்மை, பண வரத்து மேலாண்மை, மூலதன மேலாண்மை உள்ளிட்ட பகுதிகளை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள்?
சந்தீப் சிங்: எங்கள் நிறுவனம் இந்தச் சந்தையில் முதன் முதலில் அறிமுகமானதால் இந்தப் பிரிவை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதனால் பகிர்ந்துகொள்ளும் இடத்தின் உரிமையாளர்கள் அனைத்து வகையிலும் எங்களுடன் இணக்கமாக செயல்பட முன்வருகின்றனர்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது வருங்கால திட்டம் என்ன?
சந்தீப் சிங்: அலுவலக இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் சந்தை ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சிடையந்து வருகிறது. வருங்காலத்தில் எங்களது சேவையும் வளர்ச்சியடையும். கூடுதல் நகரங்களில் விரிவடையத் திட்டமிட்டுள்ளோம். தற்போது டெஸ்க்டாப் மற்றும் ஆண்ட்ராய்டில் செயல்படுகிறோம். விரைவில் iOS புக்கிங் தளத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா