கூட்டுநிதி வாயிலாக மக்களுக்கு உதவும் தளம்...!
ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மருத்துவ, சமூக மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கு நிதி உயர்த்த உதவியுள்ளது மும்பையைச் சேர்ந்த இந்த க்ரவுண்ட் ஃபண்டிங் தளம் ’ImpactGuru'
சாய் ஸ்ரீகாந்திற்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் ரத்தஓட்டம் மீண்டும் சீராக இருப்பதற்காக அறுவை சிகிச்சை மூலம் இதயத் தமனியில் சிறிய ட்யூப் ஒன்று செலுத்தப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இன்றி சுயநினைவின்றியே இருந்தார். மருத்துவமனை செலவு அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அவரது மனைவி சங்கீர்த்தனாவிடம் மருத்துவச் செலவிற்கு பணமே இல்லாமல் போனது.
”நான் கிட்டத்தட்ட 60 லட்ச ரூபாய் செலவழித்தேன். கூடுதலாக 40 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. நாங்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். என் குடும்பத்தில் என் கணவர் மட்டுமே சம்பாதித்து வந்தார். பல வகையில் பணத்தையும் செலவழித்த பின்னர் கையில் பணமே இல்லாமல் போனதுடன் நம்பிக்கையும் இழந்துபோனேன். அப்போதுதான் இம்பாக்ட்குரு (ImpactGuru) எனக்கு உதவியது. அவர்களது தளம் வாயிலாக ஒரே வாரத்தில் 23,18,700 ரூபாய் நிதி திரட்டினோம்,” என்றார் சங்கீர்த்தனா.
இம்பாக்ட்குரு ஒரு கூட்டுநிதி தளம். இது தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் போன்றவை மருத்துவ, சமூக மற்றும் தனிப்பட்டத் தேவைகளுக்கு நிதி உயர்த்த உதவுகிறது.
பியூஷ், குஷ்பூ ஜெயின் தம்பதியால் நிறுவப்பட்ட இம்பாக்ட்குரு 2014-ம் ஆண்டு துவங்கப்பட்டது முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் 150 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உயர்த்த உதவியுள்ளது.
மாற்றத்தை ஏற்படுத்துதல்
இம்பாக்ட்குரு மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமின்றி சிறந்த நோக்கத்திற்காக பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் லாபநோக்கமற்ற நிறுவனங்கள் கூட்டுநிதி திரட்ட உதவுகிறது. இவ்வாறு பலனடைந்த நிறுவனங்களில் ஒன்று 17000 ஃபீட் ஃபவுண்டேஷன். லடாக்கின் தொலைதூரப்பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக பணம் சேகரிக்க இந்நிறுவனம் இம்பாக்ட்குரு தளத்தில் பிரச்சாரம் செய்தது.
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள லடாக் தனிமையான தொலைதூரப் பகுதியாகும். இங்குள்ளப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதனால் குழந்தைகள் ஓடி ஆடி விளையாட முடிவதில்லை. 17000 ஃபீட் ஃபவுண்டேஷன் இதை மாற்ற நினைத்தது.
“நாங்கள் இம்பாக்ட்குரு மூலம் 3,15,000 ரூபாய் நிதி உயர்த்துவதற்காக பிரச்சாரம் செய்தோம். எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நாங்கள் கோரிய தொகையைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைத்தது. இம்பாக்ட்குரு குழு எங்களுக்கு முழுமையான ஆதரவளித்து சமூக ஊடக பிரச்சாரத்திற்கு உதவியது. எங்கள் கனவை நனவாக்கியது,” என்றார் 17000 ஃபீட் ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் இயக்குனர் சுஜாதா சாஹு.
பெங்களூருவின் சர்ஜாபூர் பகுதியில் அரசாங்கம் சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டது. இதனால் அங்கு வசித்தவர்கள் மிகுந்த கவலைய அடைந்தனர். அந்தப் பகுதியில் இருந்த ஆலமரங்களும் தேக்கு மரங்களும் ஐம்பதாண்டுகள் பழைமையானது. குடியிருப்புவாசிகள் அதைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டினர். மரங்களை மறுநடவு செய்வதே இதற்கான ஒரே தீர்வு என முடிவெடுத்தனர்.
”மரங்களை க்ரேன்களைக் கொண்டு வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்லவும் மறுநடவு செய்யவும் பணம் மிகப்பெரிய தடையாக இருந்தது. இம்பாக்ட்குரு வாயிலாக 3 லட்ச ரூபாய்க்கு நிதி உயர்த்த விண்ணப்பித்தோம். தேவையான தொகையில் 93 சதவீதம் கிடைத்தது. எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தப் பகுதியின் அனைத்து மரங்களையும் பாதுகாப்பாக மீட்டது இம்பாக்ட்குரு. இவை அனைத்தும் அவர்களது செயலியாலும் ஆதரவான சூழலாலும் சாத்தியமானது,” என்கிறார் சர்ஜாபூர் குடியிருப்போர் நல சங்கத்தின் நிறுவனர் ஜாய் விஆர்.
பொதுவாக வளர்ச்சி குறைபாடுள்ளவர்கள் முக்கிய செயல்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்கள். முழுநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற விரும்பியது யாஷ் அறக்கட்டளை. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க கஃபே ஒன்றைத் துவங்க திட்டமிட்டது.
”நாங்கள் இம்பாக்ட்குரு வாயிலாக நிதி உயர்த்த முயற்சி செய்தோம். 16 நாட்களில் 7,50,646 ரூபாய் திரட்டமுடிந்தது. எங்கள் கனவு நனவாகியது. மும்பையின் ஜுஹு பகுதியில் கஃபே அர்பன் துவங்கப்பட்டது. இம்பாக்ட்குரு இல்லாமல் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை எங்களால் உருவாக்கியிருக்கமுடியாது,” என்றார் யாஷ் அறக்கட்டளையின் ட்ரஸ்டி அஷைதா மஹாஜன்.
இம்பாக்ட்குரு துவக்கம்
பியூஷ் ஜெயின் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது சிலிக்கான் வேலியில் SoFi என்கிற ஒரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போதுதான் இந்த முயற்சி துவங்கப்பட்டது.
“என்னுடைய ஆய்வுக் கட்டுரையை வெளியிடுவதன் ஒரு பகுதியாக சமூக முயற்சிகளுக்கு நிதி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை ஆராயத் துவங்கினேன். அப்போதுதான் இந்தியாவில் கூட்டுநிதி அதிகம் ஆராயப்படாத பிரிவாக இருப்பதையும் இதில் மிகப்பெரிய வாய்ப்புக்கள் இருப்பதையும் தெரிந்துகொண்டேன். இது குறித்து சிந்தித்தபோதுதான் மருத்துவ, தனிப்பட்ட மற்றும் சமூக தேவைகளுக்கான தளம் உருவாக்குவது குறித்த எண்ணம் தோன்றியது. அப்படி உருவானதுதான் இம்பாக்ட்குரு,” என்றார் இம்பாக்ட்குரு இணை நிறுவனர் பியூஷ் ஜெயின்.
ஆரம்பத்தில் அரசு சாரா நிறுவனங்கள் நன்கொடைகளை சேகரிக்க பிரச்சாரம் செய்ய உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் இம்பாக்ட்குரு. பின்னர் விரிவடைந்து அவசர மருத்துவத்தேவை இருப்போரும் கல்விக்கட்டணம் செலுத்த நிதி தேவைப்படும் மாணவர்களும் நிதியுதவி பெற உதவும் தளமாக மாறியது.
குறைவான வளங்களுடன் 2014-ம் ஆண்டு துவங்கப்பட்டது முதல் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுநிதி தளமாக வளர்ச்சியடைந்தது வரை பியூஷ் மற்றும் குஷ்புவின் பயணம் எளிதாக இருந்துவிடவில்லை.
“முழு வீச்சில் செயல்படும் குழுவை உருவாக்கும் வரை அனைத்துப் பணிகளையும் நானும் என் மனைவி குஷ்புவும் பார்த்துக்கொண்டோம்,” என்றார் பியூஷ்.
இம்பாக்ட்குரு செயல்பாடுகள்
வலைதளம் வாயிலாகவும் ஆண்ட்ராய்ட் செயலி வாயிலாகவும் இம்பாக்ட்குரு தளத்தை அணுகலாம். இந்தத் தளம் தரப்படுத்தப்பட்ட டெம்ப்ளேட்டுடன்கூடிய கதை உருவாக்கம் சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குகிறது. நிதி உயர்த்துபவர்கள் சொந்தமாக பிரச்சாரங்களை வடிவமைக்க இது உதவுகிறது.
சில கேள்விகளுக்கு பதிலளித்தும் மருத்துவமனை பில் செலுத்தப்படுவதற்கான மதிப்பீடு கடிதம், வங்கி விவரங்கள் உள்ளிட்ட சான்றுகளை இணைத்தும் ஐந்தே நிமிடங்களில் நன்கொடைக்காக விண்ணப்பிக்கலாம். மருத்துவ அறிக்கைகள், நிறுவனத்தின் முன்மொழிவுகள் போன்ற சான்றுகள் முழுமையாக சரிபார்க்கப்படும். பின்னணி விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும் நிதி உயர்த்த விரும்புபவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ள அனுமதி பெறுவார்கள்.
”உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பல்வேறு வகையில் பணம் செலுத்தும் வசதியுடன் நன்கொடைகள் பெறப்படும். இந்தியா, யூகே, அமெரிக்கா போன்ற பகுதிகளைச் சேர்ந்த நன்கொடையாளர்களுக்கு வரிச் சலுகைகளும் வழங்குகிறோம். எங்களது தளத்தில் நிதி உயர்த்தியவர்கள் இதுவரை 125-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுள்ளனர்,” என்றார் பியூஷ்.
நிதி உயர்த்துபவருக்குத் தேவையான சேவையைப் பொறுத்து இம்பாக்ட்குரு அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. சுய உந்துதல் சார்ந்த பிரச்சாரமாக இருக்கும் பட்சத்தில் திரட்டப்பட்ட ஒட்டுமொத்த நிதித்தொகையில் இருந்து ஐந்து சதவீதம் கட்டணமாக பெறப்படும். எனினும் உள்ளடக்கம் உருவாக்குவது தொடர்பான கூடுதல் உதவி கோரப்படும் பட்சத்தில் எட்டு சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் உள்ளடக்கத்திற்கான உதவியுடன் மார்கெட்டிங் உதவியும் கோரப்படும் பட்சத்தில் பன்னிரண்டு சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதுதவிர மூன்று சதவீத பேமெண்ட் கேட்வே கட்டணம் வசூலிக்கப்படும்.
உள்ளூர் நிதி மூன்று முதல் ஐந்து நாட்களில் கணக்கிற்கு மாற்றப்படும். சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு ஏழு முதல் பத்து நாட்களாகும். நன்கொடையாக அனுப்பப்படும் தொகை நேரடியாக நிதி உயர்த்துபவரின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும். அல்லது இம்பாக்ட்குருவின் அதிகாரப்பூர்வ கணக்கிற்கு அனுப்பப்பட்டு அதன்பிறகு மருத்துவமனைக்கோ அல்லது லாப நோக்கமற்ற நிறுவனத்தின் கணக்கிற்கோ அவ்வப்போது அனுப்பப்படும். இது அவசரத் தேவையைப் பொறுத்தோ அல்லது பிரச்சாரத்தின் நோக்கத்தைப் பொறுத்தோ தீர்மானிக்கப்படும். அனைத்து நன்கொடைகள் பற்றியும் இம்பாக்ட்குரு தளத்தில் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கமுடியும்.
இந்தியாவில் இம்பாக்ட்குரு போன்றே பல்வேறு கூட்டுநிதி தளங்கள் செயல்படுகின்றன. Milaap, Rang De, FuelADream, Ketto போன்ற பிரபல தளங்கள் நலிந்த மக்களும் கிராமப்புற மக்களும் நிதி உயர்த்த உதவுகிறது. எனினும் இம்பாக்ட்குரு கதை உருவாக்க அம்சத்தில் செயற்கை நுண்ணறிவை இணைத்துள்ளது. அத்துடன் அப்போலோ மருத்துவமனைகள், க்ளோபல்கிவிங் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இம்பாக்ட்குரு இவ்வாறு செயல்படும் ஒரே கூட்டுநிதி தளமாகும்.
கூட்டுநிதி
இந்தியாவில் கூட்டுநிதி ஆரம்பகட்டத்திலேயே இருக்கிறது. ஹெல்த்கேர் சுற்றுச்சூழலுக்கும் இது பொருந்தும்.
”ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஹெல்த்கேரில் 100 பில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. இதில் 60 சதவீதம் தொகை மக்கள் தாங்களே சொந்தமாக செலவிடும் தொகையாகும். மருத்துவ கூட்டுநிதி குறித்த விழிப்புணர்வு நோயாளிகளிடமும் மருத்துவ நிர்வாகத்திடமும் மருத்துவர்களிடமும் குறைவாகவே உள்ளது. ஆனால் தற்போது இது அதிகரித்து வருகிறது. இம்பாக்ட்குருவைச் சேர்ந்த நாங்கள் இந்த செயல்முறையில் ஒரு ஊக்கியாக செயல்பட விரும்புகிறோம்,” என்றார் பியூஷ்.
ஆங்கில கட்டுரையாளர் : ரோஷ்னி பாலாஜி | தமிழில் : ஸ்ரீவித்யா