சோப்பு நுரையில் வழுக்கிக் கொண்டே ஃபுட்பால் விளையாட்டு!
ஐந்து நண்பர்கள் சென்னையில் தொடங்கிய ’வீகென்ட் கேட்வே’
இன்றைய இளைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளம் நல்ல வேலை இருந்தாலும் மற்றவர்களுக்காக உழைக்கின்ற நெருடல் இருக்கின்றதே தவிரே பணி வாழ்க்கையில் திருப்தி இல்லை. பல பொறியாளர்கள் வேலையின்மையால் சுய தொழிலை கையில் எடுத்தாலும் சிலர் நாம் சொந்தமாக ஓர் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் தொழில் முனைவர்கள் ஆகின்றனர்.
அப்படி தங்களுக்கான ஓர் அங்கீகாரம் இருக்க வேண்டும் என்று ஐந்து நண்பர்கள் இணைந்து சென்னையில் ’Blazze சோப்பி ஃபுட்பால்’ துவங்கியுள்ளனர்.
சோப்பி ஃபுட்பாலா? அது என்ன? சாதாரண மைதானத்தில் விளையாடும் கால்பந்து ஆட்டத்தை சோப்பு நீரால் நிரப்பி, வழுக்கும் தரையில் ஆடுவதே சோப்பி ஃபுட்பால். இது சில காலங்களாக இருந்து வந்தாலும் தற்பொழுது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. இந்த சிறிய விளையாட்டு எப்படி நிறுவனமாக பயனளிக்கும்? இதில் வளர்ச்சியுள்ளதா? என்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார் துணை நிறுவனர் சந்தோஷ்.
“பிஸினஸ் துவங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், நாங்கள் ஐடி துறையில் இருந்ததால் எங்களைச் சுற்றி உள்ளோருக்கு பயன்படும் ஒரு அமைப்பை அமைக்க முடிவு செய்தோம். வாரம் முழுவதும் பணியில் இருக்கும் அவர்களுக்கு வார இறுதி கேட்வே ஆக எங்கள் நிறுவனம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்,” என்கிறார்.
வணிகம் துவங்க வேண்டும் என்றதும் ஆன்லைனில் பல ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உதவும் வண்ணம் விளையாட்டு தளம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் அது சாதரணமாக கிரிக்கெட் நெட் கேம், பேட்மிட்டன் கோட் போன்று இருக்கக் கூடாது, புத்துணர்வாக புதியதாக மக்களை ஈர்க்கு வண்ணம் அமைய வேண்டும் என்று வெளிநாடுகளில் சற்று பிரபலமாக இருக்கும் சோப்பி ஃபுட்பாலை கையில் எடுத்தனர்.
கோவையைச் சேர்ந்த 5 சிறு வயது நண்பர்களான சந்தோஷ், அருண் பால், பாலா, அண்ணாமலை, சுஜித் ஆகியோர் தங்கள் பொறியியல் படிப்பை முடித்ததும் இணைந்து தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தனர். தங்கள் படிப்பு முடிந்ததும் ஒருவர் பணியில் அமர, மற்றவர் மேல் படிப்பு என சில ஆண்டுகள் நகர, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கள் தொழில்முனைப்பு கனவை நினைவாக்க வேண்டும் என்று தங்கள் சேமிப்பை வைத்து இதைத் துவங்கியுள்ளனர்.
“பொறியியல் படிப்பை முடித்து 4 வருடம் பணிபுரிந்தோம் அதில் இருந்த சேமிப்பை வைத்து தான் முதலீடு செய்தோம். இன்றும் பார்ட்டைம் ஆக பணி செய்துக்கொண்டுதான் இருக்கிறோம்.”
ஐடி ஊழியர்களுக்கு அலுவலகம் அருகில் இருக்க வேண்டும் என்று சோளிங்கநல்லூரில் 14000 சதுர அடி இடத்தை எடுத்து 18 லட்சம் வரை செலவு செய்து இந்த விளையாட்டுத் திடலை அமைத்துள்ளனர். ஆனால் எடுத்தவுடன் பெரிய வரவேற்பை இவர்கள் நிறுவனம் பெறவில்லை.
“புதியதாக துவங்க வேண்டும் என்று நினைத்தோம் அதனால் இவ்விளையாட்டைப் பற்றி பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. இந்த விளையாட்டை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவே சில கால அவகாசம் தேவைப்பட்டது,” என்றார் சந்தோஷ்.
இதனால் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் சந்தைப்படுத்தினர், அதிலிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாக தெரிவிக்கிறார் சந்தோஷ். சோப்பி ஃபுட்பால் புக்கிங்கை மட்டும் வைத்து மக்களை ஈர்க்க முடியாது என்று பிறந்தநாள் விழா கொண்டாட்டம், டெக்கத்லான் அமேசான் போன்ற கார்ப்பரெட் நிறுவனங்களுக்கு டோர்னமென்ட், கெட்டுகெதர் போன்ற நிகழ்வுகளை நடத்துகின்றனர். மேலும் இடைவெளியில் சோப்பி கிரிக்கெட், கேரம், டக் ஆஃப் வார் போன்ற விளையட்டை விளையாடவும் வசதிகள் செய்து வைத்துள்ளனர்.
“தினச் செலவுகள் என்று பார்த்தால் குறைவு தான். அதனால் மாதத்திற்கு நல்ல லாபம் கிடைக்கிறது. வார நாட்களில் புக்கிங் குறைவு என்றாலும் அது வார இறுதியில் மொத்தமாக வந்து சமம் செய்யப்படுகிறது,” என்கிறார்.
சோப்பி ஃபுட்பாளுக்கு 5000 சதுரடி மட்டுமே பயன்படுத்தியதால் மீதி 7000 சதுரடியில் மற்றொரு வித்தியாச விளையாட்டை இணைக்கும் சிந்தனையில் உள்ளது இந்த நண்பர்கள் கூட்டம். இந்தியாவிலே எங்கள் திடல் தான் மற்ற சோப்பி ஃபுட்பால் திடல்களை விட பெரியது என தெரிவிக்கிறார் சந்தோஷ்.
இது மட்டுமல்லாமல், போர்ட்டபிள் ஃபுட்பால் தளத்தையும் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறுவனங்களுக்கு வாடகைக்கு எடுத்துச் செல்கின்றனர்.
“ஓராண்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, மேலும் இந்த கேம் மக்களுக்கு முழுவதுமாக தெரிந்துவிட்டால் சில ஆண்டுகளில் போட்ட முதலை எடுப்பதோடு நல்ல லாபமும் எடுக்கலாம்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
சிறந்த நிறுவனம் அமைக்க முதலீடு நல்ல யோசனை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லும் யுக்தி இவையெல்லாமே அவசியம். அதை சரிவர சரியான வழியில் செய்து வருவதால் நண்பர்களின் இம்முயற்சி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.