தினமும் 500 பேருக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்!
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு 5 ரூபாய் விலையில் உணவு வழங்குகிறார் இந்த ஆர்வலர்!
இந்தியாவில் பலர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். இவர்களுக்கு அன்றாடம் ஒரு வேளை உணவு கிடைப்பதே கடினமாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள சுமார் 195.9 மில்லியன் பேர் இந்த நாட்டில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா போன்ற பல்வேறு மாநில அரசாங்கங்கள் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் ’அம்மா உணவகம்’, பெங்களூருவில் ’இந்திரா உணவகம்’, புவனேஷ்வரில் ’ஆஹார் யோஜனா’ போன்ற திட்டங்கள் மூலம் இந்த அரசாங்கங்கள் ஏழை மக்களுக்கு உணவளித்து வருகின்றன.
மேலும் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களும் தனிநபர்களும் ஏழை மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவுகளை வழங்கி வருகின்றனர். நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அனூப் கண்ணா ’தாதி கி ரசோய்’ என்கிற தனது முயற்சியின்கீழ் தினமும் கிட்டத்தட்ட 500 பேருக்கு உணவளித்து வருகிறார்.
நான்காண்டுகளுக்கு முன்பு இவர் தொடங்கிய முயற்சியின்கீழ் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவில் பருப்பு, சாதம், ரொட்டி, காய்கறி போன்றவை இருக்கும். இந்த சிறிய உணவகம் செக்டார் 17-ல் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும் செக்டார் 29-ல் மதியம் 12 மணி முதல் மணி வரையிலும் திறந்திருக்கும்.
நொய்டாவின் செக்டார் 29ல் கங்கா ஷாப்பிங் காம்பிளெக்ஸில் அமைந்துள்ள இந்த உணவகத்திற்கு ரிக்ஷா ஓட்டுபவர்களும் அவர்களது குடும்பங்களும் உணவருந்த வருகின்றனர். இது அனூப்பின் மகள் சாக்ஷி கண்ணாவின் திட்டமாகும். இந்த அமைப்பிற்கு அனூப் 30,000 ரூபாய் முதலீடு செய்தார். இவரது நோக்கத்தைப் புரிந்துகொண்ட பலர் நன்கொடை வழங்கத் தொடங்கினார்கள்.
’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் அனூப் இது குறித்து பேசும்போது,
”கடைக்காரர்கள் மூலப்பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்கினார்கள். குடியிருப்புவாசிகள் பலர் பிறந்தநாள், திருமண நாள் போன்ற தினங்களில் உணவு வகைகளை நன்கொடையாக வழங்குகின்றனர். இவ்வாறு மக்கள் சிறந்த முறையில் ஆதரவளிக்கின்றனர்,” என்றார்.
அனூப் செலவுகளை நிர்வகிக்கவும் உணவகத்தை நடத்தவும் மளிகைப் பொருட்களை மொத்த விற்பனை சந்தையில் இருந்து மொத்தமாக வாங்குகிறார். இதனால் சந்தை விலையைவிட பாதி விலையில் வாங்கமுடிகிறது. மேலும் ஒரு காய்கறி விற்பனையாளர் இவருக்கு பாதி விலையில் காய்கறிகளை வழங்குகிறார். இதற்கு பதிலாக அவரும் அவரது குடும்பத்தினர்களும் இங்கு உணவருந்துகின்றனர்.
உணவின் தரத்தை நிர்வகிப்பது குறித்து அனூப்பின் மேலாளர் சோனு என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,
”உணவு முறையாக தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய உணவு தயாரிக்கப்படும் இடத்தில் நான்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்கிறோம். கண்ணா இந்த கேமரா பதிவுகளை கண்காணிக்கிறார்,” என்றார்.
ஏழை மக்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். இருப்பினும் மக்கள் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக மிகக்குறைந்த தொகையான ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றார் அனூப்.
அனூப் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதுடன் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை 10 ரூபாய் விலையில் ஆடைகளை விற்பனை செய்கிறார். அத்துடன் சாத்பவனா ஸ்டோர் மூலம் புத்தகங்கள், ஷூக்கள் போன்றவற்றையும் வழங்குவதாக ’ஜாக்ரன்’ நாளேடு தெரிவிக்கிறது.
நொய்டாவில் 2017-ம் ஆண்டு ’பிரதான் மந்திரி ஜன் அவ்ஷாதி யோஜனா’ திட்டத்தின்கீழ் முதல் ’பிரதான் மந்திரி ஜன் அவ்ஷாதி கேந்திரா’ திறந்தார். தற்போது இவரது இரண்டு மருந்தகங்கள் ஏழை மக்களின் அவசர மருத்துவ தேவைக்கு சேவையளித்து வருகிறது.
ஏழை மக்களுக்கு உதவி வந்த 90 வயதான அனூப்பின் அம்மா சமீபத்தில் உயிரிழந்தார். அதன் பிறகு அவரது அஸ்தி தண்ணீரில் கரைப்பதற்கு பதிலாக செடிகள் வளர நிலத்தில் கொட்டப்பட்டதாக அனூப் தெரிவித்தார்.
கட்டுரை: THINK CHANGE INDIA