ஆர்கானிக் சோப்பு வணிக வருவாயைக் கொண்டு ஏழைக் குழந்தைகள் கல்வி கற்க உதவும் சமூக பணியாளர்!
2017-ம் ஆண்டு முதல் தனது ஆர்கானிக் சோப்பு வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆதரவற்ற குழந்தைகள் கல்வி கற்க உதவி வருகிறார்.
நாட்டின் வளர்ச்சிக்குக் கல்வி முக்கியம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் இன்றைய காலகட்டத்திலும் எண்ணற்ற இளைஞர்களைக் கல்வி சென்றடைவதில்லை. பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி இல்லாமை, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் நிலை போன்றவை இதற்குக் காரணமாகிறது.
எனினும் மணிப்பூரைச் சேர்ந்த ஜூன் ரோஸ் வாஃபி போன்றோர் இந்த நிலைமையை மேம்படுத்துவதில் பங்களித்து வருகின்றனர். சமூக பணியாளர் மற்றும் தொழில் முனைவரான ஜூன், ஆதரவற்ற குழந்தைகள், குறிப்பாக ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள் கல்வி கற்க உதவி வருகிறார்.
ஜூன் 2017ம் ஆண்டு ஆர்கானிக் சோப்பு தயாரிப்பு வணிகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். இயற்கை எண்ணெய் சாறு, பழச்சாறு, எலுமிச்சை, ரோஜா, ஆலோவெரா போன்ற மூலிகைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு சோப்பு தயாரிக்கிறார். இவை Luxury Soothe என்கிற பிராண்டின்கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சோப்பு 150-250 ரூபாய் என்கிற விலையில் கிடைக்கிறது. வெவ்வேறு வடிவங்களில், அளவுகளில், நறுமணங்களில் கிடைக்கிறது. வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் சோப்புகள் ரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் அவை சருமத்திற்கு உகந்ததல்ல. இந்த காரணத்தினாலேயே சோப்புத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக ஜூன் தெரிவிக்கிறார்.
ஜூன் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தினார். உடனே இவரது தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த வணிகத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயை ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு வழங்குகிறார். ஏஎன்ஐ உடனான உரையாடலில் ஜூன் கூறும்போது,
“ஏழ்மை நிலையில் இருப்பினும் பலர் புத்திசாலிகளாக இருப்பதைப் பார்க்கிறேன். பெற்றோரால் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய முடியாமல் போகும் காரணத்தால் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர். அத்தகைய குழந்தைகள் கல்வி கற்க என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்,” என்றார்.
ஜுன் இவ்வாறு சமூக நலனில் பங்களிப்பது இது முதல் முறையல்ல. இவர் 1989ம் ஆண்டு ஜிபி மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்ததில் இருந்து சமூக நலனில், குறிப்பாக பெண்கள் நலனில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவே அவர் மாநில மகளிர் ஆணையத்தில் இணைய வழிவகுத்தது. சட்டரீதியான அமைப்புடன் பணியாற்றுவதில் ஒரு பகுதியாக உரிமை மறுக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA