காலி பாடில்கள் விற்று 10லட்சம் சேமித்து தனக்குதானே சிலை வைத்த சேலம் தொழிலாளி!
வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் கொண்டு தனது முழுஉருவ சிலையை உருவாக்கியுள்ளார் சேலத்தை சேர்ந்த குப்பை சேகரிக்கும் தொழிலாளி.
வாழ்வில் ஏதேனும் ஒரு நன்காரியத்தை செய்து, அது ஆயுசுக்கும் அனைவரது மனதிலும் நிலைத்து நிற்க செய்யவேண்டும் என்பது பலரது அவா. ஆனால், யதார்த்தில் மறக்கவியாலாத காரியத்தை எல்லோராலும் செய்திட முடிவதில்லை. இருப்பினும்,
தனக்கென்று ஒரு பெயரை உருவாக்குவதையே வாழ்நாள் லட்சியமாக கொண்ட ஒருவர், அதை அடைய வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார்!
ஆம், சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 60 வயதான முதிர்ந்த ஏழ்மையான குப்பை சேகரிப்பவரின் லட்சியம் இது. அதை நிறைவேற்றியும் விட்டார்.
சேலம் மாவட்டம் அத்தனூர்பட்டியை சேர்ந்த நல்லதம்பி, தெருவில் வீசியெறியப்படும் பாட்டில்களை சேகரித்து அவற்றை விற்ற பணத்தில் பிழைப்பை நடத்திவருகிறார். எப்பொழுதும் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர், அவருடைய வாழ்நாளின் மொத்த சேகரிப்பையும் கொண்டு அவருடைய உருவச்சிலையை அமைத்து லட்சியத்தை அடைந்துள்ளார்.
‘‘எனக்கு சிறுவயதிலிருந்தே வித்தியாசமாய் பெயரெடுக்க வேண்டும். என்னுடைய உருவச்சிலையை உருவாக்க வேண்டும் என எண்ணினேன். இன்று, நான் என் கனவை நிறைவேற்றிவிட்டேன்,'' என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் அவர்.
20 வருடங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஆனைமேடு கிராமத்தில் குடும்பம், குழந்தைகளுடன் வாழ்ந்துவந்துள்ளார். குடும்பத்துடன் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படவே, குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார். ஆனைமேடு கிராமத்திலிருந்து வெளியேறி அத்தனூர்பட்டியில் நல்லதம்பி, கொத்தானராக பணிபுரிந்து வந்துள்ளார். பிறகு, அப்பணிக்கும் செல்லாம், குப்பைகளை சேகரிக்கும் தொழிலுக்குள் இறங்கியுள்ளார்.
தெருவில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை சேகரித்து, அவற்றை எடைக்கு போட்டு சம்பாதிக்கிறார். குப்பைகளில் சேகரிக்கும் பாட்டில்களை விற்பதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.200 முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
நல்லதம்பி கொத்தனராக பணிபுரிந்த நாட்களிலிருந்தே அவருடைய லட்சியத்தை அடைவதற்கான பணத்தை சேகரித்து வந்துள்ளார். கொத்தனார் தொழிலிலிருந்து தற்போது வரை அவர் சேமித்துவைத்த ரூ.10 லட்சத்தையும் கொண்டு வாழப்பாடி - பேலூர் கிராமசிலையில் 2 நிலங்களை வாங்கியுள்ளார்.
ஒவ்வொன்றும் 1200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. நிலத்தை வாங்கியதுடன் அவருடைய உருவச் சிலையை உருவாக்குவதற்காக உள்ளூர் சிற்பிக்கு ரூ.1,00,000 அளித்து உள்ளார்.
ஒரு பீடத்தில் சுற்றி பாதுகாப்புக் கம்பிகளுடன் மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட மண்டபத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது நல்லதம்பியின் சிலை. ஏற்கனவே, சேதியறிந்த மக்கள் பலரும் ஆர்வத்துடன் சிலையை பார்வையிட்டு சென்று கொண்டிருக்க, நல்லதம்பி தனது சொந்த சிலையை பிரமாண்டமான முறையில் திறக்க திட்டமிட்டுள்ளார்.
இலக்கை அடைவதற்காக மனம் சோர்வடையாது, 20 ஆண்டுகளாக உழைத்த நல்லதம்பியின் விடாமுயற்சி, 90'ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அனைவரும் கற்றுகொள்ளவேண்டிய பாடமாகும்!
தகவல் மற்றும் பட உதவி : டைம்ஸ் ஆப் இந்தியா | கட்டுரையாளர் : ஜெயஸ்ரீ