[ஸ்டார்ட் அப் பாரத்]- உதவி ரோபோக்கள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்கு உதவும் புதுமை ஸ்டார்ட் அப்கள்...
நம்முடைய 'ஸ்டார்ட் அப் பாரத்' தொடரில், இந்தியா முழுவதும் உள்ள சிறிய நகரங்களில் இருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலவற்றை அறிமுகம் செய்கிறோம். இந்தியாவில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதற்கான சுயேட்சை முயற்சியான ஐகிரியேட் திட்டத்தில் இவை உருவாயின.
இந்திய கிராமங்களில் வாழ்கிறது என்கிறோம். ஆனால் இன்று இந்தியா அதாவது பாரதம், ஸ்டார்ட் அப் கனவுகளில் வாழ்கிறது. லட்சியங்கள் அதிகரித்துள்ள அதே நேரத்தில், புதுமையாக்கமும், மாற்றத்தை ஏற்படுத்தும் வேட்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஸ்டார்ட் அப் செயல்பாடுகள் கவனத்தை ஈர்க்கின்றன.
'ஸ்டார்ட் அப் பாரத்'ன், இந்தப் பதிப்பில் சிறிய நகரங்களில் இருந்து தொழில்முனைவு பயணத்தை துவங்கியிருக்கும் சில நிறுவனங்களை அறிமுகம் செய்கிறோம். இந்த நிறுவனங்கள், ஆரவ்ம் உள்ள தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வழிகாட்டும் திட்டமான இண்டர்நேஷனல் செண்டர் பார் எண்டர்பிரேனர்ஷிப் அண்ட் டெக்னாலஜி (ஐகிரியேட்) iCreate திட்டத்தில் ஊக்குவிக்கப்படுபவை. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹுவால் துவக்கி வைக்கப்பட்டது.
Photom : சோலார் பேனல்களை சுத்தம் செய்யும் ரோபோக்கள்
ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள மண்ட்லா கிராமத்தில் 2017 ல் ஹிம்மத் சிங்கால் ’போட்டோம்’ (Photom) உருவாக்கப்பட்டது. சோலார் மின் திட்டங்களுக்கான ரோபோ தூய்மையாக்கல் அமைப்பை இந்த ஸ்டார்ட் அப் உருவாக்குகிறது. சோலார் பேன்கள் மீது படியும் தூசு அதன் செயல்திறனை பாதிக்கிறது. எனவே அவற்றை தண்ணீர் உற்றி ஊழியர்கள் சுத்தம் செய்ய வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாலும், ஊழியர் செலவு அதிகரிப்பதாலும், தற்போது பின்பற்றப்படும் சுத்தம் செய்யும் முறை செலவு மிக்கதாக இருக்கிறது.
“தண்ணீர் அல்லது ரசாயனம் இல்லாமல் நாங்கள் பேனல்களை சுத்தம் செய்கிறோம். இது முழுவதும் உலர் அமைப்பு. மேலும் எரிசக்தியை மிச்சமாக்கி, இழப்பை பூஜ்ஜியமாக்கலாம்,” என்கிறார் ஹிம்மத்.
போட்டோம் ஏற்கனவே ஐகிரியேட்டிடம் இருந்து சமபங்கு விதை நிதி பெற்றுள்ளது. நிறுவனத்தில் 8 ஊழியர்கள் உள்ளனர். கிராமத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஹிம்மத், இங்கிலாந்து அரசின், ராயல் அகாடமி ஆப் இஞ்னியிரஸ் பார் லீடர்ஸ் இன் பெலோஷிப்பிற்கு அழைக்கப்பட்டார். இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 15 தொழில்முனைவோர்களில் அவரும் ஒருவர்.
போட்டோம், இரண்டு முதல் நான்கு மீட்டர் கொண்ட ஐந்து ரோபோ மாதிரிகளை உருவாக்கியுள்ளது. குஜராத்தில் முன்னோட்ட திட்டத்தை துவங்கி, சோலார் மைய சான்றிதழ் பெற்ற பிறகு வர்த்தக சேவையை துவக்க உள்ளது.
Labouradda: குடிபெயர்பவர்களுக்கு வேலை வாய்ப்பு
இந்து பூஷன் அஸ்தனா, சித்தார்த் அஸ்தனா மற்றும் விபூதி மோகன், 2017ல் லக்னோவில் ’லேபர் அட்டா’வை (Labouradda) துவக்கினர். திறன் இல்லாத தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் இந்த ஸ்டார்ட் அப் செயல்படுகிறது.
“தினக்கூலி தொழிலாளர்கள் தினமும் காலை வேலைத்தேடி, சிறிய நகரம் அல்லது நகரின் மையப்பகுதிக்கு வருவதை பார்த்தோம். தினமும் வேலை தேடுவதில் அவர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரத்தை வீணடிக்கின்றனர். அவர்களிடம் போன் இல்லை. அப்படியே போன் இருந்தாலும் அதை வீட்டில் வைத்து விடுகின்றனர். எனவே அவர்களுக்காக ஒரு செயலி, இணையதளம் மற்றும் கால் செண்டரை உருவாக்கினோம். பெரும்பாலான தொழிலாளர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் அவர்கள் தங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் தேவைப்படும் நேரத்தில், அவர்கள் எங்கள் செயலிக்கு வருகின்றனர். உடனே எங்கள் கால் செண்டரில் இருந்து தொழிலாளர்களை தொடர்பு கொள்கிறோம்,” என்கிறார் சித்தார்த்.
“அதே நேரத்தில் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது, எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் அவர்கள் தயாராக இருப்பதை புரிந்து கொள்கிறோம். வேலைவாய்ப்புடன் அவர்களை இணைத்து, எங்கே செல்ல வேண்டும் என சொல்கிறோம்,” என்கிறார் அவர்.
லேபர் அட்டா முதலில் பைசாபாத்தில் துவங்கியது, இப்போது இந்த ஸ்டார்ட் அப், லக்னோ, கான்பூர் உள்ளிட்ட உத்தர பிரதேசத்தின் 9 நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
சோலார் லேப்ஸ்: பேனல்களின் செயல்திறன்
சோலார் லேப்ஸ் (Solar Labs) 2017 ல் துவங்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜி.ஐ.எஸ் நுட்பங்கள் மூலம் நாட்டில் சோலார் மின்சக்தியை பரவலாக்குவது தான் அதன் நோக்கம்.
“மக்கள் எப்போது வீட்டுக் கூரை மீது சோலார் பேனல்கள் பதிக்க இருந்தாலும், இந்த மென்பொருள், எத்தனை பேனல்கள் பதிக்கலாம், எத்தனை கிலோவாட் உற்பத்தி செய்யப்படலாம் போன்ற தகவல்களை கணக்கிட்டு சொல்கிறது. வரத்தக நோக்கிலான ஆய்வு தவிர, நிறுவனம் சுற்றுச்சுழல் ஆய்வையும் அளித்து, குடியிருப்புவாசிகள் மின்சகதியை கிரிட்டிற்கு விற்று வருமானம் பெறவும் வழி செய்கிறது,” என்கிறார் தி சோலார் லேப்ஸ் இணை நிறுவனரான சித்தார்த் கங்கல்.
“சோலார் இபிசி நிறுவனங்கள் பெரும்பாலும் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இவை எங்களிடம் அறிக்கை பெற்று அதை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கின்றன,’ என்கிறார் அவர்.
ஹரியானாவின் அம்பாலாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், சித்தார்த் கங்கல், அங்குஷ் ஜிண்டால், அஸ்வின் ஏ, அபய் சிங் மற்றும் தேவாந்த் பச்சர்வாரால் துவக்கப்பட்டது.
குஜராத்திற்கு மாறியது பற்றி கேட்டால், “குஜராத் அதிக சோலார் வாய்ப்புகளை கொண்டுள்ளது மற்றும் மாநில அரசு அதிக ஆதரவு தருகிறது என்கிறார் சித்தார்த்.
இந்த ஸ்டார்ட் அப் குஜராத் மற்றும் தில்லியில் ஐந்து வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. பல சோலார் இபிசி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு கடிதத்தில் கைஎழுத்திட்டுள்ளது.
Krishisagar : விவசாயிகளுக்கு உதவி
2017 ல் நிகில் பாசரியால் துவக்கப்பட்ட கிரிஷிசாகர், (Krishisagar) மகராஷ்டிராவின் துலேவில் பதிவு செய்யப்பட்டது. தற்போது ஐகிரியேட்டில் அடைக்காக்கப்படும் இந்த ஸ்டார்ட் அப், விவசாய விற்பனைக்கான பி2பி மேடையை உருவாக்கி வருகிறது. பி2பி விவசாய விற்பனையின் பெரும் பகுதி வாட்ஸ் அப் குழுக்கள் அல்லது மொபைல் போனில் நிகழ்ந்து வரும் நிலையில், கிரிஷிசாகர், விவசாயிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கு லாகின் வசதி கொண்ட மேடையை அளிக்கிறது.
“விவசாயிகளுக்கு பொதுவாக உடனடி விலை நிலவரம் தெரிவதில்லை. பெரும்பாலும் அக்கம் பக்கத்தில் உள்ள வணிகர்களையே சார்ந்திருக்கின்றனர். எங்கள் மேடைக்கு வரும் போது விவசாயிக்கு, நாடு முழுவதும் பல்வேறு விவசாயப் பொருள்களுக்கான விலை தெரிகிறது,” என்கிறா நிகில்.
வாங்குபவரின் விலை கோரிக்கையை விவசாயி ஏற்றுக்கொண்டதும் அதை நிறைவேற்றுகிறார் என்கிறார் நிகில். இந்த ஸ்டார்ட் அப் ஏற்கனவே துலேவில் மாதிரி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 500 பேருக்கு மேல் இதில் பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் மேடைத்தவிர, வாங்குபவர்களின் நம்பகத்தன்மை மற்றும் வேளாண் செய்திகளையும் வழங்குகிறது.
Naka Foods: ஆரோக்கிய உணவு
நகா புட்ஸ் (Naka Foods), மைசூரு விவிஐஇடி பொறியியல் பட்டதாரியான கவுசல் ஆராத்யாவால் துவக்கப்பட்டது. நகர்புற வாழ்க்கைக்கு ஏற்ற பலவகை ஸ்னேக்ஸ்களை நிறுவனம் அளிக்கிறது.
“2015 ல் அடைக்காக்கப்பட்ட பிறகு, எங்கள் பணியை துவக்கி ஐகிரியேட்டிடம் இருந்து விதை நிதி பெற்றோம். மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு கழக (CFTRI) விஞ்ஞானிகளுடன் இணைந்து எங்கள் முதல் தயாரிப்பை உருவாக்கினோம். பின்னர், ஸ்னேக்ஸ்மார்ட் வெண்டிங் மிஷினுடன் இணைந்து 70 ஐடி நிறுவனங்களில் சோதனை செய்து பார்த்தோம்,” என்கிறார் கவுசல்.
வர்த்தக நிறுவன ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதால் உணவுக்கு இடையே பசி எடுக்கும் போது வேறு தேர்வுகள் இல்லாததால் ஆரோக்கிமில்லாத ஸ்னேக்சை சாப்பிடுவதால் இந்த பிரிவில் நல்ல வாய்ப்பு உள்ளது என அவர் நம்புகிறார்.
"இன்னொரு பக்கத்தில் பார்த்தால், 72 சதவீத வர்த்தக ஊழியர்கள் இதயம் மற்றும் வாழ்வியல் நோய்களுக்கு இலக்காகும் வாய்ப்பு உள்லது. இதற்கு தீர்வாக ’4PM Bar’ ஐ வழங்குகிறோம். இது சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த, வசதியான உணவாகும். இது போன்ற புதுமையான பொருட்கள் மூலம் நகர்ப்புற இந்தியர்கள் வாழ்வியல் மேம்படுத்த விரும்புவதாக அவர் கூறுகிறார்.
இவர்களின் ’4PM Bar’ வர்த்தக நிறுவனக் கடைகள் மற்றும் காபி மையங்களில் கிடைக்கும். நம்முடைய உணவில் இல்லாமல் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்பைருலினா சூப்பர் உணவை இது கொண்டிருக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சமீர் ரஞ்சன் | தமிழில்: சைபர்சிம்மன்