முன்னணி சிலிக்கான் வேலி நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் கோவை நிறுவனம்!
கோவையை சேர்ந்த கணேஷ் குமார், ஆர்.எப்..பி மென்பொருள் சேவை மூலம் நிறுவனங்கள் வர்த்தக கோரிக்கைகளை செயல்திறனோடு கையாள வழி செய்யும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்
பொதுவாக டெண்டர்களுக்கு பதில் அளிக்கும் போது, நிறுவனங்களுக்கு, உள்ளடகத்தை உருவாக்கி, சேமித்து, நிர்வகித்து, வகைப்படுத்துவது என்பது சிக்கலான நீண்ட விண்ணப்பிக்கும் செயல்முறையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக போட்டி அதிகரிக்கும் போது, ஆர்.எப்.பி எனப்படும் ரிக்வஸ்ட் பார் புரோபசல்ஸ் கோரிக்கைக்க்கு குறுகிய காலத்தில் பதில் அளிப்பது இன்னும் சிக்கலாக அமைகிறது.
இதே போல, கணேஷ் குமார் மற்றும் இணை நிறுவனர்கள் ஒரு டெண்டருக்கு விண்ணப்பிக்கும் போது, டெண்டர் கோரிக்கைக்காக நிறைய நகலெடுத்தல், காபி பேஸ்ட் ஆகியவற்றை செய்ய வேண்டியிருந்தது. இந்த தேவையில்லாத வேலைகளை நீக்க ஒரு தொழில்நுட்பs சேவை தேவை என கணேஷ் நினைத்தார். அந்த எண்ணமே 2015 ல் 'ஆர்.எப்.பி.ஐ.ஒ' (RFPIO) சேவையை உருவாக்க வைத்தது.
வழக்கமான டெண்டர் செயல்முறைக்கு மாறாக, ஆர்.எப்.பி.ஐ.ஒ சேவை ஆர்.எப்.பி க்கு தேவையான செயல்முறையை முற்றிலும் தானியங்கி மயமாக்குகிறது. இதன் மூலம் நிறுவனங்கள் கோரிக்கைகளை உருவாக்கும் செயல்முறையை குறைந்த நேரத்தில் சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. பொதுவாக பல நாட்கள் தேவைப்படும் செயலை ஆர்.எப்.பி மென்பொருள் சில மணி நேரங்களில் முடித்து தருகிறது.
கணேஷ் (36), இணை நிறுவனர்கள் கைகோர்த்தது முதல் பல விஷயங்கள் சாதகமாக அமைந்தது என்கிறார். கோவையைச்சேர்ந்த இந்நிறுவனம் இப்போது பிரெஷ்வொர்க்ஸ், பிரோவர்ஸ்டேக், அடோபி மற்றும் சீமென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சேவை அளிக்கிறது.
உலகம் முழுவதும் 40,000 பயனாளிகளை பெற்றிருப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
சேவை
ஆர்.எப்.பி.ஐ.ஒ அளிக்கும் கோரிக்கை நிர்வாகத்திற்கான மென்பொருள், ஓபன் ஏ.பி.ஐ, இரு திசை இண்டக்ரேஷன், குழுக்களிடையேயான ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களைk கொண்டிருக்கிறது.
"நாங்கள் துவங்கி மூன்று வருடம் ஆகிறது. ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ளும் விகிதம் 100 சதவீதமாக இருக்கிறது. உலக அளவிலான ஆர்.எப்.பி சேவையை உருவாக்குவதில் கோவை மக்கள் உற்சாகம் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது," என்கிறார் கணேஷ்.
இந்த காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம், சிக்கலான கோரிக்கை ஆவணங்களை கையாளும் போது அதிகமாக நேரத்தை மிச்சாமாக்குகிறது. உள்ளடக்கத்தை தானியங்கிமயமாக்க நிறுவனம், தகவல்களை கண்டெடுக்கும் நுட்பம் மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறது.
“சேல்ச் போர்ஸ், ஹப்ஸ்பாட் போன்ற சி.ஆர்.எம் மென்பொருள்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளான ஸ்லேக் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் ஆகிய சேவைகளையும் ஒருங்கிணைத்திருக்கிறோம். ஒன்லாகின் போன்ற பாதுகாப்பு அடுக்கு மற்றும் டிராப்பாக்ஸ், ஷேர்பாயிண்ட் ஆகிய சேவைகளின் ஒருங்கிணைப்பையும் பெற்றிருப்பதாக கணேஷ் சொல்கிறார்.
கோவை ஏன்?
கோவை பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை பெற்றிருக்கிறது என்கிறார் கணேஷ்.
“இந்தக் கல்விச் சூழல், வாய்ப்புகளுக்காக வேறிடம் தேடிச்செல்லும் சிறந்த திறமையாளர்களை அளிக்கிறது. இந்த வேலை பொருளாதாரத்தை மாற்ற விரும்பியதால், நிறுவனத் தலைமையகமாக கோவையை தேர்வு செய்ததாக கணேஷ் தெரிவிக்கிறார்.
”பத்தாண்டுகளுக்கு முன் இங்கே எந்த வாய்ப்பும் இல்லாததால் நான் சென்னையில் பணியாற்றினேன். பல தொழில்முறை ஊழியர்களைப்போல நானும் என் குடும்பத்தினர், நண்பர்கள் அருகே இருக்க விரும்பினேன். மக்கள் கோவை மீது மிகவும் ஈடுபாடும், பிணைப்பும் கொண்டுள்ளனர். இப்போது எங்கள் நிறுவனம் போன்றவற்றால் வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதால், மேலும் அதிக திறமையாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்புவது பார்க்க முடிகிறது,” என்றும் அவர் கூறுகிறார்.
கணேஷ் மற்றும் அவரது குழுவினர் தங்கள் சேவைக்கு சந்தை இருப்பதையும், அது எங்கே இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கின்றனர்.
“எங்களிடம் பெரிய ஐடியா இருந்ததாக சொல்ல முடியாது. இந்த சேவை எங்கள் அனுபவத்தில் இருந்து உருவானது. எங்கள் முன்னாள் சகாக்கள் சிலரும் இதே போன்ற சவாலை எதிர்கொண்டுள்ளனர். டெண்டர்களுக்கு கோரிக்கை சமர்பிப்பது உலக அளவிலானது. இதன் சவால்கள் எல்லோருக்கும் பொதுவானது,” என்கிறார் கணேஷ்.
தொடர்புகள் மற்றும் பரிந்துரைகள் மூலம் முதல் கட்ட வாடிக்கையாளர்களை பெற்ற பிறகு, நிறுவனம் இப்போது விற்பனை பிரதிநிதிகள் குழுவை பெற்றுள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்குழுவின் பிரதான நோக்கமாக இருக்கிறது.
90 பேரை கொண்ட நிறுவனம், தனது துறையில் வலுவான பயனாளிகள் குழுவை உருவாக்கியுள்ளது. சேவை மேம்பாட்டை பொருத்தவரை வாடிக்கையாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதாக இக்குழு நம்புகிறது.
“நாங்கள் வளர்ச்சி அடைந்திருந்தாலும் சில விஷயங்கள் மாறவில்லை. துவக்கத்தில் இருந்து, பதில் அளிப்பவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து, வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண சிறந்த சேவை அளிப்பதே எங்கள் நோக்கமாக இருக்கிறது என்கிறார் கணேஷ்.
சந்தையில் வளர்ச்சி
2018 ஜூலையில் நிறுவனம் 25 மில்லியன் டாலர் முதல் சுற்று நிதி திரட்டியது. சந்தைக்கு ஏற்ற சேவையை பெற்றிருப்பதாக கணேஷ் நம்புகிறார்.
“நீங்கள் 1லட்சம் டாலர் ஒப்பந்தத்திற்கு முயற்சிக்கிறீர்கள் என்றால் பதில் அளிக்கும் குழுவில் 2,000 டாலர் வரை செலவிடுகிறீர்கள். எனில் நாம் 100 டாலர் அளவிலான சந்தை பற்றி பேசுகிறோம்,” என்று கணேஷ் கூறுகிறார்.
நிறுவனம், ஊழியர்களை முதன்மையாக கருதுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஊழியர்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதில் மேலாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
“ஊழியர்கள் பணிக்காக தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர். எனவே அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு பணி வாழ்க்கை சமன் பெற வழி செய்கிறோம்,” என்கிறார் கணேஷ்.
RFPIO நிறுவனம் அதற்கு முன் இருந்திராத ஆர்,எப்.பி மென்பொருள் பிரிவை உருவாக்கியுள்ளது. இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். கோவையை, உலகத்தரமான மென்பொருள் சேவை மையமாக மாற்றியிருப்பதில் பெருமை கொள்கிறோம் என்றும் அவர் கூறுகிறார்.
ஆங்கிலத்தில்: சம்பத் புத்ரேவு | தமிழில் : சைபர்சிம்மன்