பூச்சிக்கொல்லிகள் இல்லாத சுத்தமான விளைச்சலைப் பெற உதவும் ஸ்டார்ட் அப்!
குருகிராமைச் சேர்ந்த Barton Breeze பூச்சிக்கொல்லிகள் இல்லாத சுத்தமான காய்கறிகளை வளர்க்க முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் ஹைட்ரோபோனிக் பண்ணைகளை அமைக்கிறது.
வீட்டில் சமைத்த உணவே சிறந்தது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம். ஆனால் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் பின்பற்றப்படும் செயல்முறை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. காய்கறிகளின் விளைச்சலை அதிகரிக்க ரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனங்கள் மண்ணில் கலந்து செடிகளில் அதிகளவில் கலந்துவிடுகிறது. இதன் காரணமாக உணவு நம்முடைய தட்டை வந்தடையும் நேரத்தில் அதன் ஊட்டச்சத்தில் பாதியளவு இழக்கப்படுகிறது. அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் கலந்திருக்கும் காய்கறிகளையே நாம் உட்கொள்கிறோம்.
இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண்கிறது குருகிராமைச் சேர்ந்த 'பார்டன் ப்ரீஸ்' (Barton Breeze). 31 வயதான ஷிவேந்திர சிங் 2016-ம் ஆண்டு துபாயில் இந்த நிறுவனத்தைத் துவங்கினார். தொழில்நுட்ப புதுமைகளை விவசாயத் துறையில் புகுத்தவேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்ட பார்டன் ப்ரீஸ் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கவனம் செலுத்துகிறது. இந்த விவசாய முறையில் கனிம ஊட்டச்சத்து தீர்வுகள் பயன்படுத்தி மண்ணில்லாமல் செடிகள் வளர்க்கப்படும். இதில் தண்ணீர் பயன்பாடு குறைவு. அதேசமயம் விளைச்சல் அதிகம்.
2017-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் செயல்படத் துவங்கிய இந்நிறுவனம் பருவநிலை மாற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான உணவை வழங்க விரும்புகிறது.
தற்போது பார்டன் ப்ரீஸ் இந்தியா முழுவதும் உள்ள அதன் பண்ணைகளில் சமையல் பூக்கள், எட்டு வெவ்வேறு நிறங்களில் குடைமிளகாய், லெட்யூஸ், வெவ்வேறு வகை தக்காளி, மைக்ரோக்ரீன் உள்ளிட்ட 28 வகையான பயிர்களை வளர்க்கிறது.
துவக்கம்
ஷிவேந்திரா ஐஐஎம் அஹமதாபாத்தில் பட்டம் பெற்ற பிறகு துபாயில் உள்ள லேண்ட்மார்க் க்ரூப்பில் பணிபுரிந்தார். பின்னர் 2016-ம் ஆண்டு ஹைட்ரோபோனிக்ஸ் தொடர்புடைய சோதனை திட்டம் ஒன்றில் பணிபுரியத் துவங்கி துபாயில் இரண்டு கண்டெயினர் பண்ணை அமைத்தார். அந்த சமயத்தில்தான் விவசாய தொழில்நுட்ப சந்திப்பு ஒன்றில் வேளாண் தொழில்நுட்ப வல்லுநரான 49 வயது ரத்னாகர் ராயை சந்தித்தார்.
”இந்தியாவில் ஹைட்ரோபோனிக் மற்றும் சுத்தமான உணவிற்கான தேவை இருப்பது குறித்த எங்களது கருத்துகளை நாங்கள் பகிர்ந்துகொண்டோம். விரைவிலேயே என்னுடைய இரண்டாவது ஆய்வுப் பணியில் அவர் என்னுடன் இணைந்துகொண்டார்,” என்றார் ஷிவேந்திரா.
கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மேற்கொள்ளப்படும் விவசாய முறையில் நிபுணத்துவம் கொண்ட ரத்னாகர் இந்தியாவில் ஒரு கிளையை அமைத்தபிறகு நிறுவனத்தின் இணை நிறுவனராக இணைந்துகொண்டார்.
”விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் ரத்னாகரால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் விரைவான வளர்ச்சிக்கு எங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு தேவைப்பட்டது. அப்போதுதான் தீரஜ் எங்களுடன் இணைந்தார்,” என்றார் ஷிவேந்திரா.
35 வயதான தீரஜ் ஜோஷி இந்தியா, யூகே, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் 14 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார்.
பார்டன் ப்ரீஸ் துபாய் பண்ணைகளில் செயல்பட்டவாறே 2017-ம் ஆண்டு இறுதியில் இந்திய சந்தையிலும் நுழைந்தது. இந்நிறுவனம் ஓராண்டிற்குள்ளாகவே ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் ஆறு பண்ணைகளை உருவாக்கியது.
"எனினும் திறன் வாய்ந்த ஆப்பரேட்டர்களைப் பெறுவது சாத்தியமில்லாமல் போனது. நாங்களே பயிற்சியளித்து ஊழியர்கள் குழுவை உருவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது ஆறு முக்கிய உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் ஷிவேந்திரா.
தொழில்நுட்பம் வாயிலான தரக்கட்டுப்பாடு
பார்டன் ப்ரீஸ் பண்ணையை உருவாக்கி, அதில் செயல்பட்டு விளைச்சலை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்கிறது. இந்த முழுமையான செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் செலவைக் குறைப்பதுடன் விளைச்சலின் தரம் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்கிறது.
இந்நிறுவனம் அதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையாக தானியங்கி முறை செயல்படும் வகையில் பண்ணையை உருவாக்கியுள்ளதாக குழுவினர் தெரிவிக்கிறனர்.
"நாங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு செடியின் இலைகள் மற்றும் தண்டுகளில் ஒரு சாதனத்தைப் பொருத்திவிடுவோம். இந்த மென்பொருள் கணிணியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட செடிக்கு கூடுதல் ஊட்டச்சத்துகள் அல்லது கனிமச்சத்துக்கள் தேவைப்படும்போது அந்தத் தகவல் பயனருக்குத் தெரிவிக்கப்படும்,” என்றார் ஷிவேந்திரா.
எனினும் இந்தப் பயணம் இக்குழுவினருக்கு எளிதாக அமைந்துவிடவில்லை. “குறைவான சப்ளையர்களே இருந்தனர். எனவே சில தயாரிப்புகளை நாங்களே உருவாக்கினோம், சில தயாரிப்புகளை உருவாக்க ஒரு சில விற்பனையாளர்களை நியமித்தோம்,” என்றார்.
பார்டன் ப்ரீஸ் நிறுவனத்திற்குள்ளாகவே ஐந்து ஹைட்ரோபோனிக் தயாரிப்புகள் உருவாக்கப்படுகிறது. நியூட்ரியண்ட் ஃபிலிம் டெக்னிக் சானல், வீட்டுத் தோட்டத்திற்கு தேவையானவை, செடிகளுக்கான ஊட்டச்சத்து, நெட் பானைகள், செடி வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.
”இந்த ஸ்டார்ட் அப் தற்போது இந்தப் பொருட்களை சில்லறை வர்த்தக முறையில் விற்பனை செய்கிறது. இதன் மூலம் 15 சதவீத வருவாய் ஈட்டப்படுகிறது,” என்றார் ஷிவேந்திரா.
வருவாய் மாதிரி
பார்டன் ப்ரீஸ் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் பண்ணைகளை அதன் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைத்து உருவாக்குகிறது. இவை வருடாந்திர சேவை ஒப்பந்த அடிப்படையில் இக்குழுவினர் செயல்படுத்தி சந்தைப்படுத்துகின்றனர்.
ஷிவேந்திரா கூறுகையில்,
“முதலீடு மீதான குறைந்தபட்ச லாபம் 30 சதவீதத்துடன் வருடாந்திர சேவை ஒப்பந்தம் போடப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களே நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தைப்படுத்திக்கொள்ளலாம்,” என்றார்.
தற்போது இந்தியாவில் பார்டன் ப்ரீஸ் அமைத்த எட்டு பண்ணைகளில் இரண்டு பண்ணைகளை நிறுவனம் இயக்கி வருகிறது. இதற்காக பயிற்சிபெற்ற இரண்டு ஊழியர்களை நியமித்துள்ளது. ஒவ்வொரு பண்ணையின் நடவடிக்கைகளும் தினமும் மேற்பார்வையிடப்படுகிறது. மண் மேலாண்மை நிபுணர் வழக்கமான நடவடிக்கைகளை கண்காணிக்கிறார்.
”பண்ணையின் அளவு மற்றும் இதர காரணிகளின் அடிப்படையில் விற்பனையின் மொத்த வருவாயில் 9 முதல் 14 சதவீதம் சேவை கட்டணம் வசூலிக்கிறோம்,” என்றார் ஷிவேந்திரா. இந்த பண்ணைகளின் சராசரி அளவு 1,000 ச.மீ.
மார்க்கெட்டிங் குழு சந்தைத் தேவையை ஆராய்ந்த பின்னர் பயிரைத் தேர்வு செய்கிறது. ”நாற்று நடப்படும் அட்டவணையை மார்கெட்டிங் குழு முன்கூட்டியே பண்ணை மேற்பார்வையாளருக்கு வழங்கிவிடுகிறது. முதல் அறுவடைக்கு பிறகு செயல்பாட்டு செலவுகளுக்கான தொகை முழுவதும் பண்ணை வாயிலாகவே பெறப்படுகிறது,” என்றார் ஷிவேந்திரா.
ஹீரோ ஸ்டீல், ட்ரூ லீஃப், மில்க்பேஸ்கட், Naffaq, ஜேவிஎல் போன்றவை பார்டன் ப்ரீஸ் முக்கிய வாடிக்கையாளர்களாகும். மேலும் இந்த ஸ்டார்ட் அப் மலிவு விலையில் வீட்டில் வளர்க்கக்கூடிய கிட் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. குறைவான நேரம் மற்றும் முதலீட்டுடன் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவை வளர்த்துக்கொள்ள இந்த கிட் உதவும்.
பார்டன் ப்ரீஸ் தற்போது இந்தியாவில் எட்டு பண்ணைகளிலும் துபாயில் இரண்டு பண்ணைகளிலும் செயல்படுகிறது. கத்தாரில் ஆலோசனை வழங்குகிறது.
கட்டண விவரம்
முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் ஹைட்ரோபோனிக் பண்ணை ஒன்றை உருவாக்க ஒரு சதுர மீட்டருக்கான கட்டணம் கிட்டத்தட்ட 2,500 ரூபாய். பாலிஹவுஸ் கட்டுமானத்திற்கான கூடுதல் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு 1,400 ரூபாய். ”பண்ணையின் அளவு அதிகரிக்கையில் கட்டணம் குறையும்,” என்றார். பாலிஹவுஸ் உட்பட தானியங்கி முறையில் செயல்படும் பண்ணை ஒன்றை உருவாக்க இரண்டு மாதம் அவகாசம் தேவைப்படும்.
இந்நிறுவனம் 2018-ல் 300 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2017-ம் ஆண்டு முதல் 1.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
”எங்களது விரிவாக்க திட்டங்களின் அடிப்படையில் 800 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 2019 நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்றார் ஷிவேந்திரா.
ஆரம்பத்தில் சுயநிதியில் இயங்கினாலும் தற்போது ஒவ்வொரு பண்ணையின் செயல்பாட்டு செலவுக்கான தொகையும் அங்கு விளையும் விளைச்சலை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படுகிறது.
சந்தை கண்ணோட்டம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
Stratistics MRC தகவல்படி உலகளவிலான ஹைட்ரோபோனிக்ஸ் சந்தை 2023-ம் ஆண்டில் 724.87 மில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 முதல் 2023 இடையேயான காலகட்டத்தில் வளர்ச்சி விகிதம் 18.1 சதவீதம் இருக்கும். தற்சமயம் கோவாவைச் சேர்ந்த BitMantis Innovation, ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த Junga FreshnGreen மற்றும் சென்னையைச் சேர்ந்த ஃப்யூச்சர் ஃபார்ம்ஸ் போன்ற ஸ்டார்ட் அப்கள் ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயப் பிரிவில் செயல்பட்டு வருகிறது.
”இருப்பினும் பார்டன் ப்ரீஸ் வெறும் ஹைட்ரோபோனிக் பண்ணை உருவாக்கும் நிறுவனம் மட்டுமல்ல. இது ஒரு விவசாயியாகவும் சில்லறை வர்த்தகராகவும் செயல்படுகிறது,” என்கிறார் ஷிவேந்திரா.
இதன் முழுமையான தீர்வு உற்பத்தி மற்றும் சேவையின் தரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் சந்தையில் உள்ள மற்ற செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் இறுதி செலவு 30 சதவீதம் வரை குறையவும் உதவுகிறது.
பார்டன் ப்ரீஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களின் மொட்டை மாடிகளில் தானியங்கி முறையில் செயல்படும் பண்ணைகளை உருவாக்க விரும்புகிறது.
“வாடிக்கையாளர்களுக்கு பூச்சிக்கொல்லிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களில்லாத சுத்தமான ஃப்ரெஷ்ஷான உணவு நேரடியாகக் கிடைக்க இது உதவும்,” என்றார் ஷிவேந்திரா.
ஆங்கில கட்டுரையாளர்: தெபோலினா பிஸ்வாஸ் | தமிழில் : ஸ்ரீவித்யா