வயதானவர்களுக்குத் தேவையான பிரத்யேக தயாரிப்புகளை விற்கும் ’Seniority'
சீனியர் சிட்டிசன்களுக்கு தேவைப்படும் மருத்துவம், ஆரோக்கியம், சமையலறைப் பொருட்கள், பொழுதுபோக்கு என பல்வேறு பொருட்களை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வழங்குகிறது.
தபன் மிஷ்ரா, ஆயுஷ் அகர்வால் இருவரும் தொடங்கிய ’சீனியாரிட்டி’ ‘Seniority' ஸ்டார் அப் முதியோர்கள் பிரிவில் செயல்படுகிறது. இது மின்வணிக வளர்ச்சி அதிகம் கவனம் செலுத்தாத பகுதி ஆகும்.
இளம் தலைமுறையினர் அதிக ஆதிக்கம் செலுத்தும் இந்திய நாட்டில் இன்றைய நவீன தலைமுறையினருக்கான பிரத்யேகத் தீர்வுகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
அதேசமயம் இளம் நபர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் விரைவாக முதிர்ச்சியடைந்து வருகிறார்கள் என்கிற உண்மையையும் மறுப்பதற்கில்லை. 2050-ம் ஆண்டில் 34 கோடிக்கும் அதிகமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என அரசாங்கத் திட்டங்கள் தெரிவிக்கின்றன. சிறந்த சுகாதார பராமரிப்பு, மேம்பட்ட வாழ்க்கைத் தரம் போன்ற காரணங்களால் முதியோர்களின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே தபன், ஆயுஷ் இருவரும் முதியவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் ஷாப்பிங் தளத்தை உருவாக்கத் தீர்மானித்தனர். 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புனேவைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் மருத்துவம், ஆரோக்கியம், சமையலறைப் பொருட்கள், பொழுதுபோக்கு என பல்வேறு பிரிவுகளின்கீழ் 6,000 பொருட்களைத் தொகுத்து வழங்குகிறது.
இந்த ஸ்டார்ட் அப் அதன் வலைதளம் மூலமாகவும் புனே, கோயமுத்தூர், பிவாடி மற்றும் சென்னையில் உள்ள அதன் சில்லறை வர்த்தக ஸ்டோர்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க விரும்புகிறது.
முயற்சியின் துவக்கப்புள்ளி
மூன்றாண்டுகளுக்கு முன்பு ஆயுஷிற்கு இந்த எண்ணம் உதித்துள்ளது. அந்த சமயத்தில் அவர் மும்பையைச் சேர்ந்த RPG குழுமத்தின் ஒரு பகுதியான CEAT ஸ்பெஷாலிட்டியின் மார்க்கெட்டிங் முயற்சிகளை நிர்வகித்து வந்தார்.
இந்தக் குழுமம் அதன் வென்ச்சர் கேப்பிடல் முயற்சியான RPG வென்சர்ஸ் மூலம் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கான புதுமையான கான்செப்ட் உருவாக்குவது குறித்து தீவிரமாக ஆராய்ந்தது. அப்போதுதான் சீனியாரிட்டி தொடர்பான எண்ணம் உதித்துள்ளது. RPG க்ரூப் இந்த ஸ்டார்ட் அப்பிற்காக 6 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.
”அனைவரும் இளம் தலைமுறையினருக்கான தேவைகளை பூர்த்திசெய்வதில் கவனம் செலுத்திய நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் முதியோர்களின் தேவைகள், வாழ்க்கைமுறை, அவர்களைப் பற்றிய சமூகத்தின் கண்ணோட்டம் போன்றவற்றில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொண்டோம்,” என்றார்.
”இந்தியாவில் தற்போது 120 மில்லியனுக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். இவர்கள் நவீன தொழில்நுட்பம் குறித்து நன்கறிவார்கள். ஆன்லைனில் பொருட்களை வாங்குகின்றனர். தங்களுக்காகவும் தங்களது ஆரோக்கியத்திற்காகவும் செலவு செய்ய விரும்புகின்றனர்,” என்றார் ஆயுஷ்.
ஆயுஷ் தனது அம்மாவுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு சீனியாரிட்டி முயற்சியில் ஈடுபடுவது குறித்த உறுதியான முடிவெடுத்தார். ஆயுஷின் அம்மா ஆடைகள், முக்கிய பொருட்கள், மருந்துகள் என அனைத்தையும் ஆஃப்லைனில் சென்று வாங்குவதைக் கண்ட ஆயுஷ் நாட்டில் இந்தப் பிரச்சனைக்கு ஸ்டார்ட் அப்கள் தீர்வு காண முற்படவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.
”நாம் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சியடைந்து வரும் நிலையிலும் நமது பெற்றோர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில் புதுமை படைக்கவில்லை என்பதை அவருடனான கலந்துரையாடல் எனக்கு உணர்த்தியது,” என்றார்.
கவனம் செலுத்தப்படாத பகுதியில் சேவையளித்தல்
ஆயுஷ் தனது திட்டத்தை உறுதிப்பத்திக்கொண்ட பிறகு சீனியாரிட்டிக்கான குழுவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
”மின்வணிக நிறுவனத்தை அதன் செயல்பாடுகளும் லாஜிஸ்டிக்ஸ் நடவடிக்கைகளுமே தீர்மானிக்கும் என்பதால் அந்தப் பகுதியில் அனுபவம் மிக்கவர் தேவைப்பட்டார். VoxPop க்ளாத்திங் செயல்பாடுகளுக்கு தலைமை வகித்து வந்த தபன் ஆழ்ந்த அனுபவம் கொண்டவராக இருந்தார். அனைத்தும் சரியாக அரங்கேறியது,” என்றார்.
சீனியாரிட்டி நிறுவனத்தின் குழுவில் தற்போது 170-க்கும் அதிகமானோர் உள்ளனர். வணிகத்தை முறையாக எடுத்துச்செல்ல முதல் மூன்று மாதங்கள் வணிக முன்மொழிவின் பல்வேறு வடிவங்களை சோதனை செய்தனர்.
வென்டார்களை இணைத்துக்கொள்ளுதல், குழுவில் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ளுதல், துறைசார் தலைவர்களை சந்தித்து கருத்து பெறுதல், முதல் சில ஒப்பந்தங்களை முடித்துவைத்தல் உள்ளிட்டவற்றில் இந்த ஸ்டார்ட் அப் கவனம் செலுத்தியது.
முதியோர்களின் வாழ்க்கைமுறை தேவைகளுக்கு பலர் சேவையளிக்காத சூழலில் முதியோர் பராமரிப்பு போன்ற பிரிவு குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாதது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக ஆயுஷ் குறிப்பிட்டார். பிராண்டின் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மற்றுமொரு சவாலாக இருந்தது.
”இதற்கு முன்பு யாரும் கவனம் செலுத்தாத பகுதியில் முற்றிலும் புதிய பிரிவுகளின்கீழ் எங்களது பிராண்ட் செயல்படுகிறது. எனவே எது சரி, எது சரியல்ல என்பதைப் புரிந்துகொள்ள தொடர்ந்து ஆழமாக ஆராய்ந்து வருகிறோம்,” என ஆயுஷ் விவரித்தார்.
நடக்க உதவும் உபகரணங்கள், மசாஜர்கள், வலி நிவாரணிப் பொருட்கள், புத்தகங்கள், இசை, தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் என முதியோர்களின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ற பொருட்களின் தொகுப்பை ’சீனியாரிட்டி’ வழங்குகிறது.
வளர்ச்சி
சீனியாரிட்டி முதியோர்களை இலக்காகக் கொண்டே சேவையளித்தபோதும் முதியோர்களைப் பராமரிக்கும் இளம் வயதினரும் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
”25-40 வயதைச் சேர்ந்தவர்களுக்கு சேவையளிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர்களே தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு மருந்துகளும் பரிசுப்பொருட்களும் வாங்குகின்றனர். மீண்டும் தொடர்ந்து எங்களது சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்கள் எங்களது ஒட்டுமொத்த வருவாயில் 40 சதவீதமும் ஆஃப்லைன் வருவாயில் 60-70 சதவீதமும் பங்களிக்கின்றனர்,” என்றார் ஆயுஷ்.
முதியோர் பராமரிப்பில் கவனம் செலுத்தும் கோவைகேர் பிராண்டுடன் இணைந்து இக்குழு கோயமுத்தூரில் அதன் முதல் ஸ்டோரைத் திறந்தது. தற்போது சீனியாரிட்டிக்கு ஏழு ஆப்ஃலைன் ஸ்டோர்கள் உள்ளது.
வருவாயைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் 15 சதவீதம் வளர்ச்சியடைந்து வருவதாக இந்த ஸ்டார்ட் அப் தெரிவிக்கிறது.
”ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் திட்டமிட்டதிற்கும் கூடுதலாகவே வளர்ச்சியடைந்து வருகிறோம். இரண்டாண்டுகளில் 30 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளோம். சராசரி ஆர்டர் மதிப்பு 1,200 ரூபாய். தினமும் 1,000 முதல் 1,300 ஆர்டர்களைக் கையாள்கிறோம். ஒரு மாதத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எங்களது வலைதளத்தைப் பார்வையிடுகின்றனர்,” என்றார் தபன்.
மின்வணிக காலகட்டம்
மின்வணிக ஜாம்பவான்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இந்தியாவில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோரின் கவனத்தை ஈர்ப்பதில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சிறிய பிரிவுகளில் கவனம் செலுத்தும் மின்வணிக நிறுவனங்களும் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இதுவரை ஆராயப்படாத பகுதியான முதியோர் பராமரிப்புப் பிரிவில் போட்டி காணப்படுகிறது. தற்சமயம் Beautiful Years, Senior Shelf, Silver Talkies போன்ற ஸ்டார்ட் அப்கள் முதியோர்களை மையப்படுத்தி செயல்படுகிறது. முதியோர் பராமரிப்புத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும் விரிவடைந்து வருவதாகவும் 2020-ம் ஆண்டில் 1.4 மில்லியன் நபரைச் சென்றடையும் என்றும் IBEF அறிக்கை குறிப்பிடுகிறது.
வருங்காலத் திட்டம்
”சுமார் 120 மில்லியனுக்கும் அதிகமான முதியோர்கள் இருப்பதாக கருதப்படும் இந்தியாவில் நாங்கள் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே சென்றடைந்துள்ளோம். எனவே வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்பத் தளம் போன்றவற்றில் முதலீடு செய்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தயாரிப்புகளை வழங்க விரும்புகிறோம்,” என்றார் தபன்.
முதியோர்கள் மற்றும் அவர்களது பராமரிப்பவர்களின் அனைத்து தேவையளிக்கும் ஒரே இடத்தில் சேவையளிக்கவேண்டும் என்பதில் இந்த ஸ்டார்ட் அப் தற்போது கவனம் செலுத்துகிறது. ஆயுஷ் கூறுகையில்,
“ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் நாங்கள் கவனமாக ஆராய்ந்து தரமான தயாரிப்புகளை எங்களது சில்லறை வர்த்தக பிராண்டின்கீழ் அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறோம். உலகளவிலான பிரபல பிராண்டுகளுடன் பிரத்யேக பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுவதுடன் முன்னணி தயாரிப்புகளை எங்களது தொகுப்பில் இணைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கவும் விரும்புகிறோம்,” என்றார்.
மின்வணிக வலைதளத்தில் முதலீடு செய்து வரும் இந்த ஸ்டார்ட் அப் விரைவில் அதன் வாடிக்கையாளர்களுக்கு செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா