மூங்கிலைக் கொண்டு பிளாஸ்டிக்கின் மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் ஸ்டார்ட் அப்!
நான்கு பொறியாளர்களால் 2017-ம் ஆண்டு துவங்கப்பட்ட 'Beco' நிறுவனம் மூங்கில் கூழ் மற்றும் சோளமாவினால் ஆன பாலிமர்கள் கொண்டு சமையலறை டவல் மற்றும் குப்பை சேகரிக்கும் பைகளைத் தயாரிக்கிறது.
இந்தியாவில் தினமும் 25,940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 2017-ம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இதில் பாதியளவு பிளாஸ்டிக் பேக்கேஜ் செய்வதற்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாகும்.
பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இவை முறையாக அப்புறப்படுத்தப்படாத நிலையில் நச்சுநிறைந்த ரசாயனங்கள் மண்ணில் கசிகிறது. திறந்தவெளியில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேறுகிறது. பிளாஸ்டிக் விலங்குகளுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து விளைவிக்கிறது.
மும்பை, கேரளா, அந்தமான் நிகோபார் தீவு போன்ற பகுதிகளை ஒட்டியுள்ள நீர்நிலைகள் உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்துள்ளதாக TERI அறிக்கை தெரிவிக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் அழிவைக் கண்ட ஆதித்யா ருயா, அனுஜ் ருயா, அக்ஷய் வர்மா, புனீத் பத்ரா ஆகிய நான்கு பொறியாளர்களும் 2017-ம் ஆண்டு மும்பையில் Beco நிறுவனத்தைத் துவங்கினர். இந்த ஸ்டார்ட் அப், குப்பை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பைகள், சமையலறை டவல்கள், டிஷ்யூ ரோல் போன்ற பொருட்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மலிவு விலையில் வழங்குகிறது.
ஸ்டார்ட் அப் பயணம்
அனுஜ், ஆதித்யா இருவரும் சகோதரர்கள். இவர்கள் மும்பையில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பிட்ஸ் பிலானி மாணவரான புனீத் பத்ரா ஆதித்யாவின் நண்பர். அக்ஷய் வர்மா ஆதித்யாவின் சிறுவயது நண்பர். சௌபாட்டி மற்றும் ஜுஹு கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணியில் இவர்கள் குழுவாக ஈடுபட்டிருந்தபோது அங்கு குவியும் குப்பையின் அளவைக் கண்டு அதிர்ந்தனர்.
”இந்த கடற்கரைகளில் குவிக்கப்படும் கழிவுகளைக் கண்டு எங்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஆரம்பத்தில் இது குறித்து அதிகம் யோசிக்கவில்லை. ஆனால் ஆதித்யா உறுதியாக இருந்தார். அக்ஷயைத் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். விரைவிலேயே Beco பயணம் துவங்கியது,” என்றார் நிறுவன உறுப்பினர் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளரான புனீத் பத்ரா.
நிறுவனத்தின் தயாரிப்புகள் மூங்கில் கூழ் மற்றும் சோளமாவினால் ஆன பாலிமர்கள் கொண்டு தயாரிக்கப்படவேண்டும் என்கிற முக்கிய கருத்தினை பொருள் அறிவியல் படித்த அக்ஷய் முன்வைத்துள்ளார்.
மூங்கில் வெப்பமண்டலப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது என்று ஐக்கிய நாடுகளின் 2018 அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலான மரங்களுடன் ஒப்பிடுகையில் மூங்கில் விரைவாக வளர்கிறது. அத்துடன் குறைவான தண்ணீரே தேவைப்படும்.
ஓராண்டு ஆய்விற்குப் பின்னர் Beco 2018-ல் பதிவு செய்யப்பட்டது. மூங்கில் பாலிமர் கொண்டு பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய பொருட்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கும் ஒரே பிராண்ட் Beco தான் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.
Beco ஆரம்பத்தில் டிஷ்யூ பேப்பர், குப்பை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பைகள் ஆகியவற்றை தயாரிப்பதில் முக்கிய கவனம் செலுத்த விரும்பியது. ஆனால் இந்நிறுவனம் அதன் வழிகாட்டிகளின் ஆலோசனைப்படி கிச்சன் டவல், கழிவறையில் பயன்படுத்தும் ரோல், டூத்பிக் போன்ற பொருட்களைத் தயாரிக்கவும் மூங்கிலைப் பயன்படுத்தத் தீர்மானித்தது.
Origami, Paeseo, ஜான்சன் & ஜான்சன் போன்ற நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் போட்டியாளர்களாகும்.
“எங்கள் தயாரிப்பு விரைவாக அதிகளவில் விற்பனையானது,” என்கிறார் புனீத்.
மூலப்பொருளின் சிறப்பம்சம்
சீனா, மஹாராஷ்டிரா, வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் வளரக்கூடிய மோசோ மூங்கிலை இந்நிறுவனம் பயன்படுத்தியது. இந்த வகை மூங்கிலை மறுபயன்பாட்டிற்கு உகந்த மூங்கில் துணியைத் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இது சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நூறு சதவீதம் உரமாகக்கூடியது. மூங்கிலால் தயாரிக்கப்பட்ட சமையலறை டவல் துவைக்கக்கூடியது.
மக்காத மைக்ரோஃபைபர் துணி போலல்லாமல் நூறு முறை வரை பயன்படுத்தலாம். தற்சமயம் சுயநிதியில் இயங்கி வரும் Beco அடுத்தகட்ட செயல்பாடுகளைத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைக் கண்டு அதன் பொருட்களை பேக் செய்ய பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என இந்நிறுவனம் தீர்மானித்தது. அதற்கு பதிலாக மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பேப்பரைப் பயன்படுத்துகிறது.
சந்தை மற்றும் வருவாய்
இந்நிறுவனம் ஏற்கெனவே மும்பையில் 1,500-க்கும் அதிகமான ஸ்டோர்களில் விற்பனை செய்து வருகிறது. அமேசான், Nykaa போன்ற மின்வணிக தளங்களிலும் செயல்படுகிறது. அடுத்த மார்ச் மாதம் Beco 5,000-6,000 ஸ்டோர்களில் செயல்படவும் புனே, ராஜ்கோட், அஹமதாபாத் போன்ற சந்தைகளில் நுழைய மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் முழுவதும் விரிவடைய விரும்புகிறது.
”சில்லறை வர்த்தக பிராண்டாக நிறுவுவதே எங்களது முக்கிய நோக்கம். எங்களது மாத விற்பனை அளவு 2.5 லட்ச ரூபாய். பி2பி மற்றும் நிறுவனங்கள் வாயிலான விற்பனைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளோம். இந்த மாத விற்பனை 4.8 முதல் 5 லட்ச ரூபாய் வரை இருக்கும்,” என்றார் புனீத்.
பிராண்ட் மற்றும் தயாரிப்பு குறித்து கடைகளில் விழிப்புணர்வை அதிகப்படுத்திய இந்நிறுவனம் அதன் தயாரிப்புகள் சிறப்பான விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதில் சவால்களை சந்திக்கிறது.
சந்தையில் கிடைக்கும் ஆர்கானிக் தயாரிப்புகள், மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறின்றி Beco அதன் ஒரு சில தயாரிப்புகளைத் தவிர மற்றப் பொருட்களுக்கு சந்தையில் நிலவும் விலை வரம்புகளுக்கு இணையாகவே விலையை நிர்ணயித்துள்ளது.
”சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விலை மலிவான பொருட்களையே மக்கள் வாங்குகின்றனர்,” என்றார் புனீத்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் எதிர்காலம்
Beco நிதி உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மக்கும் தன்மை கொண்ட டயாப்பர்கள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது. முழுமையாக உரமாகி மக்கக்கூடிய சோளமாவு பாலிமர்களால் தயாரிக்கப்பட்ட குப்பை சேகரிக்கப் பயன்படுத்தும் பைகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் 120 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் பங்களித்துள்ளதாகவும் 75 சதவீத கார்பன் அடிச்சுவடுகளை குறைத்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் மாற்றம் என்பது நுகர்வோர் தரப்பில் இருந்து வெளிப்படவேண்டும்.
”நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து சிறப்பான மாற்றுப்பொருட்களை பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் தடை என்பது தவிர்க்கமுடியாதது. பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கியெறியக்கூடிய பொருட்களை நாம் நீக்கிவிட முடியாது. இந்தத் துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: அன்யா ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா