'ஸ்டார்ட் அப்'கள் கிராமங்களை நோக்கிச் செல்ல வேண்டும்’: ஜோஹோ ராஜேந்திரன் தண்டபாணி
’TamilNadu Story’ : உள்ளூர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மூலம் ஸ்டார்ட் அப்களுக்கான புதிய ஐடியாக்கள் பிறக்கும் என்று, யுவர்ஸ்டோரி நடத்திய 'தமிழ்நாடு ஸ்டோரி' மாநாட்டில் வலியுறுத்தினார் ராஜேந்திரன்.
தமிழகத்தின் ஊக்கம் அளிக்கும் தொழில் சூழல் பற்றி விவாதிக்க சென்னையில் நேற்று யுவர்ஸ்டோரி சார்பில் நடைபெற்ற ’தமிழ்நாடு ஸ்டோரி’ என்ற நிகழ்ச்சியில், ’தமிழக வளர்ச்சிக்கதை- ஒரு அறிமுகம்’ எனும் தலைப்பில் கருத்தரங்குகள், விவாத மேடை மற்றும் சிறப்புரைகள் நடைப்பெற்றது.
மாநாடு தொடங்கிய உடன் சிறப்புறை நிகழ்த்திய ஜோஹோ நிறுவனத்தின் பொறியியல் பிரிவு தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி விவரித்தார்.
உலக அளவில் ஸ்டார்ட் அப் சூழலில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்த மாற்றம் தமிழகச் சூழலிலும் பிரதிபலிக்கத் துவங்கியிருக்கிறது என்றார்.
ஸ்டார்ட் அப் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பெருநகரங்களில் இருந்து கிராமப்புறப் பகுதிகளை நோக்கிச் செல்லுங்கள். அங்கு தான் தீர்வு காணவேண்டிய நம் நாட்டின் பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது பல நிறுவனங்கள் இதைச் செய்யத் தொடங்கிவிட்டன. இதுதான் இந்த மாற்றம் என்று, சுட்டிக்காட்டிய ராஜேந்திரன், இதற்கான தேவையையும், காரணங்களையும் விளக்கினார்.
மற்றவர்கள் உருவாக்கிய தரவுகளை சார்ந்து செயல்படுவதை விட, நமக்கான வாடிக்கையாளர்களுக்கான சேவையை உருவாக்குவதில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய ராஜேந்திரன், தனது அனுபவத்தில் தமிழக மக்களின் மனநிலையில் குறிப்பிட்டக்கத்த மாற்றம் நிகழந்து வருவதாக தெரிவித்தார். கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் உணரக்கூடிய இந்த மாறிவரும் மனநிலையை நான்கு முக்கிய அம்சங்களின் மூலம் அவர் விளக்கினார்.
பொருட்கள், சேவைகளை பயன்படுத்தும் பயனாளிகளாக மட்டும் இருந்த நிலை மாறி, நாம் உருவாக்குவதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளோம். நுகர்வோர் மனநிலையில் இருந்து உருவாக்குனர் (மேக்கர்) மனநிலை பெறத் துவங்கியிருக்கிறோம். ஒரு சிறந்த பொருளை உருவாக்கினால், அதை உலக அளவில் எடுத்துச்செல்ல முடியும். பெருநகரங்களில் இருந்து சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் நோக்கி செல்லத் துவங்கி இருக்கிறோம்.
பட்டங்களை தாண்டி யோசிக்க த்துவங்கியிருக்கிறோம். பல நிறுவனங்கள் கல்லூரிப்படிப்பு, டிகிரி அல்லாத விஷயங்களை எதிர்பார்க்கத் துவங்கியுள்ளன. வேலைவாய்ப்புக்கான நேர்காணலில், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் (ஹேக்) என்று நிறுவனங்கள் ஆர்வத்துடன் கேட்டு அவர்கள் திறமையை மதிப்பிடுகின்றன.
நாம் போட்டியை கடந்து செயல்படத்துவங்கியிருக்கிறோம். நிறுவனங்களிடையே போட்டி தொடர்ந்தாலும், ஒத்துழைப்பை நாடுகிறோம். ஒருவிதமான ஒன்றிணைந்த தன்மை இருக்கிறது. நாம் அனைவருமே, வாடிக்கையாளர்களுக்கு தான் சேவை செய்கிறோம் என்ற உணர்வு இருக்கிறது.
இந்த நான்கு அம்சங்களை விவரித்த ராஜேந்திரன் பொதுவாக மகிழ்ச்சியான காலகட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோரின் வர்த்தக மேற்கோள்களை குறிப்பிட்டு பேசியவர்,
எடுத்த எடுப்பில் ஒரு சேவைக்காக முழு கோடிங்கையும் செய்து விட வேண்டாம், முதல் பத்து வாடிக்கையாளர்கள் உங்கள் சேவையை உருவாக்கித்தருவார்கள் என்று குறிப்பிட்டார்.
விளம்பரங்களில், பொருளின் தரவுகள் சிறப்பு பற்றி பேசுவதை விட, வாடிக்கையாளர்களுக்கான பலனை பேசுவதே சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டவர் இதற்கு உதாரணமாக ஆப்பிள் ஐபோன்களுக்கான விளம்பரங்களை சுட்டிக்காட்டினார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொழில்நுட்ப பாட்னர்களை தேர்வு செய்யும் போது, ஏணியை விட அதை பொருத்தும் சுவரில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பில் நேரத்தை செலவிடும் நிலைக்கு மாறாக வர்த்தக வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஜோஹோ இணைந்து செயல்படும் விதத்தை விளக்கியவர், 13 மாநிலங்களில், 2,400 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்’கள் மீது நிறுவனம் தாக்கம் செலுத்தியிருப்பதாகவும், ஆயிரக்கணக்கான பயிரலரங்குகள் மூலம் வழிகாட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
பசுமைப் பாதையில் செல்வது என்பதை ஜோஹோ நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தவர், நிறுவனம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருந்து, கிராமப்புறங்களை நோக்கிச் சென்றிருப்பதை குறிப்பிட்டு, தமிழகத்தின் தென்கோடியான தென்காசி அருகே உள்ள ஒரு சிற்றூரில் நிறுவன கிளை அமைக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்தார்.
நாம் வாழும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதை முக்கியமாகக் கருதி இந்த முடிவை மேற்கொண்டிருப்பதாகவும், உலக அளவில் இந்த மாற்றம் நிகழந்து வருவதாகவும் தெரிவித்தார்.
பெரிய நகரங்களில் நெருக்கடி அதிகரித்து வருவதால், பல பெரிய நிறுவனங்கள் கிராமப்புற பகுதிகளை நோக்கிச் செல்வதாக தெரிவித்தவர், உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதன் மூலம் ஸ்டார்ட் அப்களுக்கான புதிய எண்ணங்கள் தோன்றும் என ஊக்கம் அளித்தார் ராஜேந்திரன் தண்டபாணி.
யுவர்ஸ்டோரி சென்னையில் நடத்திய ‘தமிழ்நாடு ஸ்டோரி’ மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.