ஆகாயத்தாமரை கொண்டு மலிவு விலை சானிட்டரி நாப்கின்களை உருவாக்கிய மாணவர் குழு!
இந்த நாப்கின்கள் வழக்கமான சானிட்டரி பேட்களைக் காட்டிலும் 12 மடங்கு அதிக தண்ணீரை உறிஞ்சக்கூடியதாக இருக்கும். இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவை உரமாகிவிடும்.
இன்றளவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாதவிடாய் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. மாதவிடாய் சுகாதாரத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. இது குறித்து சமூகத்தில் மக்களிடையே வெளிப்படையாக பேசப்படுவதில்லை. மாதவிடாய் சுகாதார மேலாண்மை வசதி இல்லாத காரணத்தால் ஆண்டுதோறும் 23 மில்லியன் சிறுமிகள் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்கின்றனர். மாதவிடாய் சுகாதாரம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அனைத்துவிதமான ஆரோக்கிய சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
கிராமப்புறங்களில் பெரும்பாலான பெண்களுக்கு சானிட்டரி பொருட்கள் கிடைப்பதில்லை. அவற்றின் வகை குறித்தும் பயன்படுத்தவேண்டிய வழிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு அதிகம் தெரிந்திருப்பதில்லை. எனவே இவர்கள் துணி பேட்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இது சுகாதாரமானதல்ல.
கிராமப்புறத்தில் உள்ள பெண்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண முற்பட்டுள்ளனர் கேரளாவில் உள்ள அஹமத் குரிக்கல் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள். இந்த மாணவர் குழு ஆகாயத்தாமரைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி நாப்கின்களை உருவாக்கியுள்ளனர். இந்த நாப்கின்கள் வழக்கமான சானிட்டரி பேட்களைக் காட்டிலும் 12 மடங்கு அதிக தண்ணீரை உறிஞ்சக்கூடியதாக இருக்கும்.
ஆகாயத் தாமரை நீரில் காணப்படும் உலகின் மோசமான களைச்செடி ஆகும். இவை விரைவாக பெருகி நீர்பரப்பில் அடர்ந்த அடுக்குகளாக உருவாகிவிடும். இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது.
மாணவர்களின் உயிரியல் ஆசிரியரான சரத் கேஎஸ் இந்தத் திட்டத்திற்கு வழிகாட்டுகிறார். ஆகாயத்தாமரை குறித்து என்டிடிவி உடனான உரையாடலில் அவர் குறிப்பிடும்போது,
“உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஏற்கெனவே ஆகாயத் தாமரைகளைக் கொண்டு கோஸ்டர்கள், விளக்குகள், தரைவிரிப்புகள் போன்ற பொருட்களை உருவாக்கி வருகின்றனர். எப்படி மாறுபட்ட கண்டுபிடிப்பை உருவாக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. கழிவுகளைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு பொருளை உருவாக்க விரும்பினோம். சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கத் தீர்மானித்தோம்,” என்றார்.
ஈ அஸ்வதி, பிவி ஹென்னா சுமி, எஸ் ஸ்ரீஜேஷ் வாரியர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆகாயத்தாமரையில் இருந்து சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்தனர்.
கதீஜா நர்கீஸ் என்கிற சுற்றுச்சூழலியலாளருடனும் உள்ளூர் மக்களுடனும் இக்குழுவினர் முதலில் பேசினர். அதன் பிறகு இவர்களது பள்ளியில் ஆய்வக சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவில் உள்ள ரண்டதானி, கெழ்மரி, எர்கரா ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அத்துடன் ஆகாயத்தாமரை படர்ந்திருந்த நான்கு குளங்களையும் ஆய்வு செய்தனர். சரத் இது குறித்து விவரிக்கையில்,
“சானிட்டரி நாப்கின் பயன்பாடு மற்றும் அப்புறப்படுத்தப்படும் விதம் குறித்து புரிந்துகொள்வதே இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இருந்தது. மாணவர்கள் இது குறித்த புரிதலுக்காக சுகாதார நிபுணர்களுடன் உரையாடி சுமார் நூறு வீடுகளில் சிறியளவில் கணக்கெடுப்பு நடத்தினர். இதன்படி 71% வீடுகளில் சானிட்டரி நாப்கின்களே பயன்படுத்தப்பட்டது. 97% பேர் ப்ளாஸ்டிக் சார்ந்த சானிட்டரி நாப்கின்களையே பயன்படுத்துவதும் தெரியவந்தது. மேலும் 48% பேர் இந்த நாப்கின்களை எரித்துவிடும் நிலையில் 11% பேர் ஃப்ளஷ் செய்து விடுகின்றனர். அனைவரும் மக்கும் தன்மை கொண்ட பேட்களை தயாரிக்கவேண்டும் என்பதும் அவற்றை பயன்படுத்துமாறு மக்களை வலுயுறுத்தவேண்டும் என்பதும் இந்த ஆய்வின் மூலமாக தெளிவானது,” என்றார்.
இத்திட்டத்தின் இறுதி கட்டத்தில் மாணவர்கள் ஆகாயத்தாமரைகளை சேகரித்து, சுத்தப்படுத்தி, கட் செய்து, கிருமிகள் இல்லாதவாறு சுத்தம் செய்து செடியின் தண்டுகளையும் காட்டனையும் கொண்டு உறிஞ்சும் லேயரை தயாரிக்க வேண்டியிருந்தது. உறிஞ்சும் லேயரும் மேற்பரப்பிலும் கீழ்பகுதியிலும் காட்டன் சேர்க்கப்பட்டு தேன்மெழுகு கொண்டு சீல் செய்யப்பட்டது. அதன் பிறகு இக்குழுவினர் பேடை புற ஊதா கதிர்கள் கொண்டு சுத்தப்படுத்துகின்றனர்.
வணிக ரீதியாக சந்தையில் அறிமுகமாகாத இந்த சானிட்டரி நாப்கினுக்கான காப்புரிமை பெறப்படவில்லை. அப்புறப்படுத்தப்படக்கூடிய இந்த பேடின் விலை 3 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவை உரமாகிவிடும் என்றும் தெரிவித்தார் சரத்.
இந்த கண்டுபிடிப்பிற்காக இக்குழுவினர் பாராட்டுகளைப் பெற்றதுடன் கேரளாவின் மலப்புரம் துணை மாவட்ட பள்ளி அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசையும் வென்றுள்ளனர் என ’மாத்ருபூமி’ தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA