கணவரின் திடீர் மரணம்; பிசினஸை தொடர்ந்து 12 கோடி டர்ன்ஓவர் ஆக்கிய சாரதா பிரசாத்!
சொந்த முதலீட்டில் 45 ஊழியர்களுடன் கணவர் நடத்தி வந்த அவுட்சோரிசிங் நிறுவனம் அவரின் திடீர் மறைவினால் ஸ்தம்பிக்க, அதை நிலைநிறுத்திய சாரதாவின் நம்பிக்கை கதை..!
Thursday August 06, 2020,
4 min Read
எதிர்பாரா சூழலின் முடிவால் நடைமுறை அனுபவமற்றொருவருக்கு தொழில்நுட்ப நிறுவனத்தை நிர்வாகிக்கும் பொறுப்பு கிட்டுகிறது. அந்நிறுவனத்தை நம்பியிருப்பதோ 45 குடும்பங்கள். இப்படியான சூழலில், பெரும்பாலானோருக்கு நிறுவனத்தை நிலை குறித்து எதிர்மறை கருத்துகளே மேலோங்கும். ஆனால், பொறுப்பை ஏற்றவரோ மொத்த பாசி ட்டிவிட்டியையும் தன்னக்கத்துக்குள் அடக்கி, 10 ஆண்டு இறுதியில் 12கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டும் நிறுவனமாய் மாற்றினார். அவர் பெயர் சாரதா பிரசாத். சென்னையில் இயங்கி வரும் ‘Redisolve Software Pvt.Ltd’ எனும் அவுட்சோர்சிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.
இணையம் மற்றும் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்கள் ஆண்டுதோறும் வளர்ந்து வருவதால், இணைய வணிகத் துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அவுட்சோர்சிங்.
அவுட்சோர்சிங் என்பது ஒரு நிறுவனத்தின் வேலையை வேறு எந்த நிறுவனமோ அல்லது தனிநபரோ செய்து அளிக்கும் ஒரு தொழில்முறையாகும். இது கணக்கியல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப உதவி, வாடிக்கையாளர் சேவைகள், மென்பொருள் மேம்பாடு போன்ற ஒரு நிறுவனத்தின் எந்தவொரு பணியாகவும் இருக்கலாம்.
இதில், சாரதாவின் Redisolve நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைய வணிக நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள், வெப்சைட் பிராசஸ், இ-மெயில் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட ஆன்லைன் சாட்டிங் தகவல் பரிமாற்றம், ஆன்லைன் ஷாப்பிங், உணவு ஆர்டர் செய்வது, டிக்கெட் புக் செய்வது உட்பட பல்துறை நிறுவனங்களின் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் அனைத்துப் பணிகளையும் செய்துகொடுக்கிறது.
100 ஊழியர்களுடன் பயணிக்கும் சாரதா, பகுதிநேரமாக நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி க் கொடுத்துள்ளார்.
சென்னையில் பிறந்த சாரதா, படித்து வளர்ந்ததோ சேலத்தில். மணவாழ்வு அமைந்ததோ அமெரிக்காவில். படித்தது எம்.ஏ எக்கனாமிக்ஸ். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அப்பாவின் விருப்பத்தினால் ஜெர்மன் மொழியும் கற்றுள்ளார் சாரதா.
திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில். அங்கு, பிரபல ரெடிங்டன் நிறுவனத்தில் கணவர் ஆபரேஷன் ஹெட்டாக பணியாற்றிட, சாரதாவும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றியுள்ளார். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் பெண்களுக்கு தங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கான ஏற்பாடு செய்துதரும் பணி அது.
அவ்வனுபவங்கள் பிசினஸ் குறித்த புரிதலை ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளன. கணவரின் நெடுநாள் பிசினஸ் ஆசை, 15 வருட வெளிநாட்டு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 2002ம் ஆண்டு இந்தியா திரும்பியுள்ளனர்.
எதிர்பாரா அதிர்ச்சி சம்பவம்; சாரதா வாழ்வில் நுழைந்த பிசினஸ்!
‘‘கணவர் சொந்தமாய் பிசினஸ் ஆரம்பிக்கணும்னு விரும்பினார். அதே சமயம், அம்மா அப்பாலாம் இந்தியாவில் இருந்ததால், குழந்தைகளுக்கும் அவர்களது அன்பு கிடைக்கும்னு நாங்க இந்தியாவுக்கு திரும்பினோம். அமெரிக்காவிலிருந்த வீட்டை விற்றதில் கிடைத்த பணத்தை இன்வெஸ்ட் செய்து ‘Redisolve software’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவருக்குத் தேவையான உதவிகளை செய்து கொண்டு, குழந்தைகள் படித்த ஸ்கூலில், விடுப்பிலிருந்த டீச்சருக்கு பதிலா நான் சப்ஸ்டியூட் டீச்சராக வொர்க் பண்ணேன், என்று பகிரத்தொடங்கினார் சாரதா.
“எப்பவும்போல காலையில கிளம்பி குழந்தைகளுடன் ஸ்கூலுக்கு போயிட்டேன். வீடு திரும்பியதும் அதிர்ச்சி. கணவருக்கு திடீர்னு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு வீட்டிலயே இறந்துவிட்டார். அப்போ அவருக்கு 47 வயது தான். ரொம்பவே ஃபிட்டான, ஹெல்தி பெர்சன். எங்க எல்லோருக்குமே ரொம்ப பெரிய ஷாக். அச்சமயத்தில் நிறுவனத்தை கையிலெடுக்கும் பொறுப்பு ஒருபக்கம். தனியாளாய் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு வேறு.
ஒவ்வொரு மனிதரக்குமே வித்தியாசமான வாழ்வு. எனக்கான வாழ்வில் நடந்த துன்பத்தையும், அதன்பிறகான கடினமான பாதையும் எனக்கு அளிக்கப்பட்ட சவாலாக எடுத்து கொண்டேன். அதே நேரத்தில், நான் ஒருத்தினு என்னைப்பத்தி மட்டுமே யோசிக்க முடியாது. எங்க நிறுவனத்தை நம்பி 45 குடும்பங்களிருந்தன. அதுமட்டுமின்றி என் குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கணும்னு விரும்பினேன்.
‘பெண்கள் நினைத்தால் எதுவும் நிகழ்த்துவர்' என்பதை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமென நினைத்தேன், என்று இப்போதும் நம்பிக்கை குன்றா வார்த்தைகளை உதிர்த்தார் சாரதா.
கணவர் நிறுவனத்தை நிர்வாகித்த சமயத்தில் பக்கபலமாயிருந்ததாலும், முதுகலை பட்டம் பொருளாதாரத்தில் பெற்றிருந்ததாலும் வணிகம் சார்ந்த நுண்ணறிவு சாரதாவிற்கு தியரிட்டிக்கலாக அத்துப்படி. ஆனால், பிராக்டிக்கல் அனுபவமற்றவர். அதனால், தொடக்கத்தில் நிறுவனத்தை நிர்வகிப்பதில் சிரமங்களை சந்தித்துள்ளார்.
ஆயினும், நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்து கேட்டு கற்று கொள்வதில் தயக்கம் காட்டாமல், நோட்ஸ் எடுத்து படித்துள்ளார். ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரது திடீர் இல்லாமையை, எவரும் சதாகமாக பயன்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சாரதாவும் அத்தகைய ஏமாறுதல்களையும், கடினமான பாதைகளையும் கடந்து வந்துள்ளார்.
என் நிறுவனமே எனது குடும்பம்! அதற்கான இன்ஸ்பிரேஷன் இந்திராநூயி...
‘‘எங்களது நிறுவனம் 24 x7நேர வேலை செய்யும் முறையைக் கொண்டது. அதனால், சிங்கிள் பேரன்ட்டாக குழந்தைகளையும், நிறுவனத்தையும் ஒருசேர கவனமாக கையாளவேண்டிய கட்டாயம்.
இரவு, பகல் பாராது குடும்பம், ஆபிஸ்னு மாறிமாறி ஓடி உழைத்தேன். ஆனால், நிறுவனத்துக்குள் பல ஏமாற்று வேலைகளும் நடந்தேறிக் கொண்டிருந்தது. நிறுவனத்தினுள்ளே எல்லா வேலையும் நடக்கும், ஆனால் அதற்கான பணம் மட்டும் என்னை வந்தடையாது. உங்க கணவர் இப்படித்தான் சொல்லியிருக்காரு, இப்படிதான் செய்துள்ளார் என்று ஏமாற்றப்பட்டேன். அப்போது தான், ஒரு மனிதரை முழுமையாய் நம்பிவிடக்கூடாது என்பது புரிந்தது. அச்சமயங்களில், நிறுவன நிர்வகிப்பிற்கு புத்தகவாசிப்பு பெரும் உதவியாக இருந்தது.
அப்போது, எங்கள் நிறுவனத்திற்கு மூன்று கஸ்டமர்கள் மட்டுமே இருந்தது. தொடர் உழைப்பில் புதிய புராஜெக்ட்களை பெற்றேன். எங்களுடன் இணைந்தே ஊழியர்கள் வளருவதற்கு எவ்விதத்தில் எல்லாம் உதவி செய்யலாம் என்றும், தொடர்ந்து செயலாற்றுவதற்கு எப்படியெல்லாம் ஊக்குவிக்கலாம் என்பதில் அதிகம் கவனம் செலுத்தினேன்.
கார்ப்பரேட் சூழலுக்குள் ஊழியர்களைத் தள்ளிவிடாமல், அவர்களுக்கு பெஸ்ட் பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் இலவசமாக கொடுத்தேன். நாம் ஒரு நிறுவனத்தை நடத்துகிறோம். கண்டிப்பாக லாபகரமானதாக இயக்குவது முக்கியம். ஆனால், நான் அதில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. ஊழியர்களின் வளர்ச்சியோடு சேர்ந்து நிறுவனமும் வளரவேண்டும். ஊழியர்களுக்கு போனஸ் தவிர்த்து இன்ஸன்டிவ் ப்ரோகிராம் கொண்டு வந்தோம்.
பெண் ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வதுடன் வேலையிடத்திற்கு வரும் நபர்களிடமிருந்தும் பாதுகாப்பளிப்பது நிர்வாகத்தின் கடமையாகும். அதனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழியர்களிடம் பணிசார்ந்து மட்டுமே இல்லாது, அவர்களது சூழலறிந்து தேவைகளை நிவர்த்தி செய்வதில் அதிகக் கவனம் செலுத்தும் பெப்சி நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவான இந்திரா நூயி தான் என் இன்ஸ்பிரேஷன்.
என் கம்பெனி ஊழியர்கள் எனக்கு பேமிலி மெம்பர்ஸ் மாதிரி. ஒரே பிபிஓ கம்பெனியில் ஒருவர் 10 வருஷமாக தொடர்ந்து வேலை பண்றது கஷ்டம். என்கிட்ட அப்படியாப்பட்ட ஊழியர்களும் இருக்காங்க. 16 வருஷமா எங்களை மட்டும் நம்பியுள்ள க்ளைன்ட்டும் இருக்காங்க. அதுவே ரொம்ப சந்தோஷம்.
எங்களது வாடிக்கையாளரான ‘சென்னை ஆன்லைன்.காம்' எனும் ஆன்லைன் பத்திரிகை நிறுவனத்தை விலைக்கு வாங்கிவிட்டோம். இப்போது அதுவும் நல்லமுறையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது,'' என்றார் மகிழ்வுடன் அவர்.
கொரோனா கால வணிகம்!
‘‘வாடிக்கையாளர் நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாப்பது எங்களது முதல் கடமை. அதனால், கம்பெனிக்குள் செல்போன் உபயோகிக்கக் கூடாது. எந்தத் தகவல்களும் ஊழியர்கள் கொண்டு செல்லமுடியாத வண்ணம் பாதுகாப்பு அம்சங்களுடன் நிறுவனத்தை இயக்கி வருகிறோம்.
இப்போ, இந்த கொரோனா நேரத்தில் வீடுகளில் இருந்து பணிபுரிவதால், தகவல் பாதுகாப்பிற்கான அத்தனை வழிமுறைகளையும் முதலில் செய்தோம். அதுவும் இல்லாமல், ‘வொர்க் ஃப்ரம் ஹோம்' முறை எங்களுக்கு புதிது. அதனால், வேலை நாட்களை அட்டவணைப்படுத்துவது தொடங்கி ஊழியர்களுக்கு லேப்டாப், டாங்கிள் எல்லாம் கொடுத்து வீடுகளுக்கு செல்லும் வரை கண்காணித்தோம். தொடக்கத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இப்போது பழக்கப்படுத்தி கொண்டாயிற்று, என்று கூறி முடித்தார் சாரதா.