1 ரூபாய் டீ, 70 கிலோ கேக், வெங்காயம் பரிசு: களைகட்டியது சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் கொண்டாட்டம்!
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், இலவச திருமணம் என விதவிதமாய், வித்தியாசமாய் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
சூப்பர்ஸ்டார் ரஜினி எப்போதுமே தன் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டும் என விரும்புவதில்லை. ஆனால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருக்கும் ரஜினி ரசிகர்களும் நேற்று ரஜினியின் 69வது பிறந்தநாளைக் கோலாகலமாக பல்வேறு வித்தியாசமான வழிகளில் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், இலவச திருமணம் என விதவிதமாய், வித்தியாசமாய் தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
வழக்கமாக தனது பிறந்தநாளன்று தமிழகத்தில் இருப்பதை தவிர்த்து விடுகிறார் ரஜினி. இம்முறையும் தான் ஊரில் இருக்க மாட்டேன் என ரஜினி ஏற்கனவே தர்பார் பட விழாவில் அறிவித்திருந்தாலும், அவருக்கு வாழ்த்து கூற இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர். தங்களது தலைவரின் முகத்தை பிறந்தநாளன்று பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் அவர்களது முகத்தில் தெரிந்தது.
தனது கணவரை நேரில் பார்த்து வாழ்த்து சொல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சென்னை வந்துள்ள ரசிகர்களுக்கு, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்கினார். அப்போது அவர் வந்திருந்த ரசிகர்களுக்கும், வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் தங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
கேக் வெட்டிய ரஜினி
பிறந்தநாளான நேற்று ரஜினி சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் தலைவர் 168 படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். அங்கு படக்குழுவுடன் அவர் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
டிரெண்டிங்
பேரக் கேட்டாலே அதிருமுல்ல என ரஜினியின் பிறந்தநாளை சமூகவலைதளங்களில் டிரெண்டிங் செய்து அசத்தி விட்டனர் ரசிகர்கள். வாட்ஸப் டிபி, டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தங்களால் முடிந்த அளவுக்கு ரஜினி மீதான தங்களது அன்பை, வாழ்த்துக்களை வெளிப்படுத்தி சமூகவலைதளத்தையே திணறடித்து விட்டனர்.
நேற்று டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்தது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
உழைப்பாளி உணவகம்
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டது.
ரஜினியின் தீவிர ரசிகரும் சித்த மருத்துவருமான வீரபாபு இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். உணவகத்தின் பெயரைப் போலவே, வித்தியாசமாக உணவகத்தை சித்தாள் வேலை செய்யும் பெண் ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த உணவகத்தில் உழைப்பாளிகள் பயன் பெறும் வகையில் அளவு சாப்பாடு ரூ.10க்கும், அளவில்லா சாப்பாடு ரூ.30க்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ரூபாய்க்கு டீ
ரஜினியின் பிறந்தநாளுக்காக சென்னை உட்பட தனது ஐந்து கிளைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு டீயை விற்பனை செய்து அசத்தியுள்ளது ’சாய் காந்த்’ ‘Chaikanth'.
சென்னையில் தி.நகர், ஆழ்வார்பேட்டை மற்றும் துரைப்பாக்கம் கிளைகளில் இந்த சிறப்பு விற்பனை நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திலேயே 300க்கும் மேற்பட்டவர்கள் வந்து இந்த சலுகை விலையில் டீ குடித்துச் சென்றதாக மகிழ்வுடன் கூறுகிறார் அதன் நிறுவனர் சுரேஷ் ராதாகிருஷ்ணன்.
இனிப்புகளுடன் வெங்காயம்
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் டிரெண்டிங்கில் இருப்பது வெங்காயம் தான். விலையுயர்ந்த பொருளாக மாறிய வெங்காயத்தை பலரும் பரிசுப் பொருளாக தந்து வருகின்றனர்.
அந்தவகையில் புதுக்கோட்டை ரஜினி ரசிகர்களும் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், வெங்காயத்தை வழங்கி ரஜினியின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர்.
70 கிலோ கேக்
ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ். அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
‘7-ல் இருந்து 70’ வரை எனும் தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 7 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு சீமந்தம் செய்யப்பட்டது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு முன்கூட்டியே தங்க மோதிரம்-காப்பு வழங்கப்பட்டது. இதே போல், இஸ்லாமிய தம்பதி ஒன்றின் பெண் குழந்தைக்கு பரிதா என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செல்வா எனும் மாணவனுக்கு பள்ளி கல்விக்கான உதவித்தொகையும், ஸ்வேதா என்ற மாணவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசப் பட்டப்படிப்புக்கான ஆணையும், பிரதீப் எனும் பட்டதாரிக்கு அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஒரு கிறிஸ்தவ ஜோடிக்கு நிச்சயதார்த்தம், இந்து ஜோடிக்கு திருமணம் மற்றும் இன்னொரு தம்பதியினருக்கு 60-ம் கல்யாண நிகழ்வும் நடத்தப்பட்டன. இது தவிர 200 பெண்களுக்கு 3 சக்கர தள்ளுவண்டி, சேலை, இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
பின்னர் 70 கிலோ ‘கேக்’ வெட்டி, 5 ஆயிரம் வண்ண பலூன்களை பறக்க விட்டு ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளும், காலை-மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலவசத் திருமணம்
ரஜினியின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருப்பூர் மாநகர ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கொங்கணகிரி கோவிலில், 12 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரரான சத்யநாராயணா கலந்து கொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு, கட்டில், பீரோ, உள்ளிட்ட சீர் வரிசைகளை ரஜினி ரசிகர்கள் வழங்கினார்.
சச்சின் வாழ்த்து
ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரும், தமிழில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரஜினி சார், திரையில் உங்களது ஸ்டைலும், நிஜ வாழ்வில் உங்களது பணிவும் உங்களை எல்லா தர்பாரிலும் தலைவர் ஆக்குகிறது’, என சச்சின் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. அதனை வைத்து தான் இப்படி வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் சச்சின்.
ஜப்பானில் ரஜினி
தமிழகம் மட்டுமில்லாது உலகத்தின் பல பகுதிகளில் இருக்கும் ரசிகர்களும் ரஜினியின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடினர். அதிலும் குறிப்பாக ஜப்பானில் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைக் கட்டியது.
ரஜினி நடித்த முத்து படம் ஜப்பானில் மாபெரும் வெற்றி பெற்றது. அப்படம் மூலம் அங்குள்ளவர்கள் ரஜினிக்கு ரசிகர்கள் ஆகினர். எனவே ரஜினி பிறந்தநாளையொட்டி ஜப்பானின் பல பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள் பொதுமக்களுக்கு வாழை இலையில் இலவச உணவு வழங்கியும், ரஜினியின் படங்களை திரையிட்டும், ஆடிப்பாடி இனிப்புகள் வழங்கியும் ரஜினி பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.
சில ரஜினி ரசிகர்கள் பாட்ஷா பட ஸ்டைலில் ஆட்டோ ஓட்டுநர் போன்று உடையணிந்து, கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரஜினியின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவர்கள் ’தலைவர் பெஸ்டிவல்’ என்ற பெயரில் கொண்டாடினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்தனர்.
ரஜினி நன்றி
தனது பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி தங்கள் அன்பை வெளிப்படுத்தியதற்கு டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. அதில்,
“என் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி, என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிக்கை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த டிவீட்டால் அவரது ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.