அறையில் பூட்டிவைத்து தாக்கப்பட்டேன்; 2லிட்டர் தண்ணீர் மட்டுமே; வாழ்க்கையை நம்பிக்கையோடு வெற்றி கொண்ட பெண்!
நம் அனைவருக்கும் சந்திரம்மா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்திரம்மா. இவர் தன் வாழ்வில் சந்தித்த சவால்களையும், கடந்துவந்த கரடு முரடான பாதைகள் குறித்தும் விவரிக்கிறார். உண்மையில் நம் அனைவருக்கும் சந்திரம்மா மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!
நான்கு சகோதரிகள், ஒரு சகோதரனுடன் கர்நாடகா மாநிலம் தும்கூரில் வளர்ந்தேன். பிறகு, என் பெற்றோர் பட்டு வளர்ப்பு தொழிலில் பணியாற்றுவதற்காக, மாங்காடி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தனர். பட்டு வளர்ப்பு நிறுவனத்தில் என் பெற்றோருக்கு வேலை கிடைத்ததும், என் சகோதரிகளும் அங்கேயே வேலைக்குச் சேர்ந்தனர். நானும் அவர்களுடன் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அப்போது நான் 2வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
எனது முதல் நாளில், யூனிட்டில் உள்ள தொழிலாளர்கள் நூலை எவ்வாறு பிடிப்பது, எப்படி சுருட்டுவது மற்றும் முறுக்குவது என்பதை எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். அன்று மாலை என் பெற்றோரிடம், எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. நான் இனி அங்கு போக மாட்டேன் என்று கூறினேன். அவர்கள் நான் சொன்னதை கேட்டார்கள், ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை.
1996 ஆம் ஆண்டில், என்னுடைய டீன்ஏஜ் பருவத்தில், யுனிசெஃப், ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கர்நாடக அரசாங்கத்தின் கூட்டு முயற்சியின் மூலம் நான் அங்கிருந்து மீட்கப்பட்டேன். பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டு மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
தையல் பயிற்சியையும் மேற்கொண்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை நீடிக்கவில்லை.
எனக்கு 15 வயதில் திருமணம் நடைபெற்றது. மம்தா என்ற பெண் குழந்தையும் இருக்கிறாள். இருப்பினும் சில நாட்களில் பாம்பு ஒன்று கடித்ததில் என் மகள் இறந்துவிட்டாள். என் மகள் இறந்த அந்த வீட்டில் இனியும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். மகாடி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்தோம். அங்கு ஆலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தோம்.
நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது. வாரத்திற்கு 600 ரூபாய் ஊதியம் தருவார்கள். எனது மகன் வேணுகோபாலின் பிறப்புதான் அந்த நேரத்தில் நிகழ்ந்த ஒரே சாதகமான விஷயம். ஆனால் மகிழ்ச்சி எப்போதும் என் வாழ்க்கையில் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறது. என் தாய்க்கு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, என் தந்தை அதிக அளவில் குடிக்க ஆரம்பித்திருந்தார்.
என் அம்மாவுக்கு சிகிச்சையளிக்க நாங்கள் பணம் பெற வேண்டியிருந்தது, எனவே என் சகோதரி கிரிஜாமாவும், நானும் எங்கள் சிறுநீரகங்களை ஒரு சட்டவிரோத மோசடி மூலம் விற்றோம். முழு செயல்முறையிலும் நான் பயந்தேன். ஆனால் எங்களுக்கு பணம் தேவைப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பெறுநருக்கு உயிர்வாழ உண்மையில் ஒரு சிறுநீரகம் தேவை என்ற எண்ணம் எங்களை ஆறுதல்படுத்தியது.
இது தவறான விஷயம் என்பதை நான் இப்போது உணர்கிறேன். அந்த ஆபரேஷன் தவறாக செய்யப்பட்டது. முந்தையதை சரிசெய்ய மற்றொரு ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. காவல்துறையினர் இறுதியாக இந்த மோசடியைக் கண்டுபிடித்தபோது, ஆயிரக்கணக்கான ஏழை மக்கள், அவர்களில் 80 சதவிகிதம் பெண்கள், தங்கள் சிறுநீரகங்களை விற்றுவிட்டதைக் கண்டறிந்தனர். ஆனால் அம்மாவுக்கு சிகிச்சையளிக்க நாங்கள் முயற்சித்த போதிலும், எனக்கு 24 வயதாக இருந்தபோது அவர் இறந்துவிட்டார்.
இந்த நேரத்தில், என் கணவர் என்னைக் கைவிட்டுவிட்டார். என் குடும்பத்தினர் என்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளும்படி சமாதானப்படுத்தினர். எனது இரண்டாவது மகன் ஹேமந்த் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார். ஆனால் பணம் இன்னும் ஒரு பிரச்சினையாக இருந்தது, நானும் என் சகோதரியும் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் ஒரு பட்டு வளர்ப்பு பிரிவில் வேலை செய்ய ஒப்புக்கொண்டோம். எங்களுக்கு முன்பணமாக ரூ.50,000 வழங்கப்பட்டது.
அப்போது நடந்த சம்பவத்துக்கு நாங்கள் எங்களை தயார்படுத்திருக்கவில்லை. அது மிகவும் கொடுமையானதாக இருந்தது. நான் ஒரு சிறிய அறையில் பூட்டப்பட்டிருந்தேன், மிகக் குறைந்த உணவு தான் எங்களுக்கு வழங்கப்படும். குளிப்பதற்கு, குடிப்பதற்கு, இன்ன பிற தேவைகளுக்கென ஒவ்வொரு இரவும் வெறும் இரண்டு லிட்டர் தண்ணீர் மட்டும் தான் கொடுப்பார்கள்.
அந்த சூழல் காரணமாக என் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டன. நான் ஓட முயன்றேன், ஆனால் பிடிபட்டு கடுமையாக தாக்கப்பட்டேன். ஆனால், என் சகோதரியால் தப்பிக்க முடிந்தது, என்னைக் காப்பாற்ற அவள் எல்லாவற்றையும் செய்வாள் என்று எனக்குத் தெரியும்.
ஒரு நாள், நான் பூட்டியிருந்த அறைக்கு வெளியே பெரும் சத்தத்தை கேட்டேன். சகோதரி கிரிஜம்மா என் பெயரை அழைப்பதைக் கேட்க முடிந்தது. இது கற்பனை என்று தான் நினைத்தேன். ஆனால் நான் அவளை மீண்டும் சத்தம்போட்டு கூப்பிட்டேன். அந்த அறை கதவு திறக்கப்படும் சத்தத்தை நான் கேட்டேன். காவல்துறை, தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் அரசாங்க நிருபர்கள் உள்ளிட்ட பலரும் அறைக்குள் நுழைந்தனர்.
என்னை அங்கிருந்து அழைத்துச் செல்ல என் சகோதரியும் அவரது கணவரும் பல்வேறு நபர்களை அணுகி வருவதை நான் பின்னர் அறிந்து கொண்டேன். இறுதியாக, அவர்கள் சர்வதேச நீதி ஆணையத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்தார்கள். அவர்கள் என்னைக் காப்பாற்றுவதாக உறுதியளித்தனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் எனக்கு வெளியீட்டு சான்றிதழ் மற்றும் ஆரம்ப மறுவாழ்வு காசோலை ரூ.20,000 வழங்கப்பட்டது.
நான் இப்போது ஒரு சுதந்திரப் பெண்ணாக இருக்கிறேன். என் இரண்டாவது கணவரும் சமீபத்தில் காலமானார். நானும் என் மகன்களும் உறுதியாக இருக்கிறோம். அறுவை சிகிச்சை காரணமாக என்னால் நீண்ட நேரம் நிற்க முடியாது. அது கஷ்டமாக இருப்பதால், என் வாழ்வை சிறப்பாக மாற்றும் ஒரு வேலையை நிச்சயம் கண்டுபிடிப்பேன் என நம்புகிறேன்.
ஒருபோதும் பட்டு வளர்ப்புப் பிரிவில் பணிபுரியக்கூடாது என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன். நான் முதன்முதலில் பட்டு நூல்களைத் தொட்டபோது எனக்கு எட்டு வயதுதான். உங்களுக்குத் தெரியுமா? ஆனால், என் வாழ்க்கையில் ஒருபோதும் பட்டுபுடவையை உடுத்தியதில்லை.
எத்தனை துன்பங்கள் வந்தாலும், நம்பிக்கையுடன் எதிர்த்து நிற்பது தான் வாழ்க்கையை இன்னும் உறுதியாகவும் அழகாகவும் மாற்றுகிறது.
கட்டுரை: யுவர்ஸ்டோரி | தமிழில்: மலையரசு