தமிழகத்தில் இருமொழிக் கொள்கை; புயல் பாதிப்பு நிதி: ஆளுநர் உரையில் என்னென்ன?
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுனரை உரையை புறக்கணித்து எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
"தமிழ் மொழியை வளர்ப்பது அரசின் கடமை. சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும்,” போன்ற பல முக்கிய அறிவிப்புகள் இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுனர் உரையில் அறிவித்தார்.
இந்தாண்டுக்கான சட்டப்பேரவைக்கூட்டம் இன்று தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை - கலைவாணர் அரங்கில் 11 மணி அளவில் கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அவை கூடியதும் ஆளுநரை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசலாம் எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து ஆளுநர் தனது உரையில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என தெரிவித்தார்.
ஆளுனர் உரையின் முக்கிய அம்சங்கள்:
- தமிழ் மொழியை வளர்ப்பது அரசின் கடமை. அதனால் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்.
- சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும்.
- பெருந்தொற்று சமயத்தில் காவல்துறையினர் ஆற்றிய பங்கிற்கு பாராட்டுகள்.
- நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்காக ரூ.5264 கோடி நிதியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
- காவிரி - குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி-தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
- கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தினார்.
- மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
- அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.
- கோவையில் கோல்டுவின்ஸ் – உப்பிலிபாளையம் இடையே ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
- தமிழகத்திற்கு இந்த அண்டு ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி. வரி கிடைத்துள்ளது.
- முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின்னர் தமிழகம் ரூ.1.06 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளது.
- தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து ஆளுநர் தனது உரையில்,
மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல், உரிய நேரத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு நிதி வழங்கியுள்ளது, என்றார். இலங்கை கடற்படை கப்பல் கொண்டு மோதியதில் நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு இலங்கை அரசை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.
“7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநரின் செயலைக் கண்டித்து கூட்டத்தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கிறது,” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.