'மகளிர் உரிமைத்தொகை திட்டம்' - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? நடைமுறைகள் முழு தகவல்கள் இதோ!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், விண்ணப்பிப்பது எப்படி, என்னென்ன ஆவணங்கள் தேவை உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், விண்ணப்பிப்பது எப்படி, என்னென்ன ஆவணங்கள் தேவை உள்ளிட்ட தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்...
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் பதவியேற்ற பிறகும் பல மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது.
கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவித்தார்.
இதனையடுத்து, இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி பெண்கள் பயன்பெறும் வகையில் 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனைப் பயன்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி அரசாணையும் வெளியிடப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார், என்னென்ன நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து விவாதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் காணொளி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்துக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளவர்களுக்கான தகுதி, விண்ணப்பப்படிவம், நிபந்தனைகள் ஆகியன வெளியாகின.
பயனாளிகளுக்கான வரையறைகள் என்ன?
- 2022 செப்டம்பர் 15க்கு முன் பிறந்த 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தங்கள் ரேஷன் கடை விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயானாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பம் இயங்கிக்கொண்டிருந்தால் அவர்களும் குடும்பத்தலைவியாக கருதப்படுவார்கள்.
- பொருளாதார தகுதிக்கான வருமான வரிச்சான்றிதழ் தேவையில்லை.
- நில ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கும்?
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
- 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள்.
- ஆண்டிற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
- ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கடும் உடல் உபாதையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே அரசு உதவித்தொகை பெற்றுக்கொண்டிருந்தாலும் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது?
- ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
- குடும்பத்தில் கணவன், மனைவி இருவரது வருமானத்தையும் சேர்த்து மாதம் ரூ.20,833-க்கு மேல் இருப்பவர்கள்.
- மாநில, மத்திய அரசாங்க ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்.
- வங்கி, வாரியங்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், கூட்டுறவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற முடியாது.
- மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர் போன்ற கனரக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு கிடையாது.
- ஆண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்துபவர்களுக்கு தகுதி கிடையாது.
- ஏற்கனவே முதியோர், விதவை ஓய்வூதியம் மற்றும் அமைப்புச்சாரா நலவாரிய ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்பெற முடியாது.
விண்ணப்ப படிவம்:
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் உள்ளன. மேலும், 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை மற்றும் வாகன விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
- ரேஷன் கடை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை விநியோகிக்க வேண்டும் எனவும், அதில் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டிய தேதியை குறிப்பிட்டு தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பெண்கள் நேரடியாக ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும் என்றும், விண்ணப்பப்பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால் செல்போனை உடன் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் செயல்படும்.
- விண்ணப்பங்களை பதிவு செய்ய 10 முதல் 12 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
- விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது செல்போனுக்கு குறுச்செய்தியாக அனுப்பப்படும் என்றும், நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்ய விரும்பினால் இணையதளம் வழியாக 30 நாட்களுக்குள் செய்யலாம்.
- மக்களின் சந்தேகங்களை தீர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்?
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற ஆதார் பதிவு கட்டாயம்.
- விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் போது ஆதார், குடும்ப அட்டை, வங்கி பாஸ்புக், மின்கட்டண ரசீது ஆகியவற்றின் ஒரிஜினலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
- முகாம்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவோ, நகல் எடுக்கவோ எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மக்களின் சந்தேகங்களை தீர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது.
- ரேஷன் கடைகளில் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம ஜூலை 24ம் தேதி தொடங்குகிறது.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான டோக்கன், விண்ணப்பங்களை விநியோகிக்க ஜூலை 20 முதல் தொடங்க உள்ளது.