தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ - பங்கு விலை, பங்கீடு என A டூ Z விளக்கம்!
ஒரு பங்கின் விலை ரூ.500 - 525 வீதம் சுமார் 1.58 கோடி புதிய பங்குகளையும், அதன் முதலீட்டாளர்கள் வசம் இருந்த 12,505 பங்குகளையும் இந்த ஐபிஓ-வில் விற்பனை செய்துள்ளது.
101 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி' அண்மையில் பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் சுமார் 831.60 கோடி ரூபாயை திரட்டி உள்ளது. அதன் பங்கு ஒதுக்கீடு குறித்த விவரமும் நேற்று (செப்.12) வெளியிடப்பட்டது. சுமார் 509 கிளைகளுடன் தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் வங்கி இது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ வெளியீடு விவரம்
தனியார் துறை வங்கிகளில் தனக்கென ஒரு நற்பெயரை பெற்றுள்ள நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. கிராமம், நகரம் என இதன் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ‘ஆஃபர் ஃபார் சேல்’ முறையில் இந்த பங்குகள் ஐபிஓ விற்பனைக்கு வந்தன. இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஜூன் வாக்கில் செபியின் ஒப்புதலை பெற்றதும் வெளியானது.
செப்டம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை ஐபிஓ விற்பனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலுக்கு கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பங்கின் விலை ரூ.500 - 525 வீதம் சுமார் 1.58 கோடி புதிய பங்குகளையும், அதன் முதலீட்டாளர்கள் வசம் இருந்த 12,505 பங்குகளையும் இந்த ஐபிஓ-வில் விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. மூலதன பெருக்கம், வருங்கால வளர்ச்சி முதலியவற்றை கணக்கில் கொண்டு இதனை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. அதன் காரணமாகவே முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றிருந்ததாகவும் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஓ என்றால் என்ன?
பொதுவாக தனியார் நிறுவனங்கள் அல்லது அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு முதல் முறையாக பங்குகளை பொதுத்தளத்தில் வெளியிடுவதை தான் ஐபிஓ எனச் சொல்லப்படுகிறது. இதனை பொது பங்கு வெளியீடு என சொல்கிறர்கள்.
நிறுவன விரிவாக்கம், முதலீடு மூலதனத்தை பெருக்கவும் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுகின்றன. அதை தொடர்ந்து அந்த நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது.
மொத்தம் மூன்று வகைகளாக ஐபிஓ வெளியிடப்படுகிறது. புதிய பங்கு வெளியீடு (Fresh Issue), ’ஆஃபர் ஃபார் சேல்’ (Offer for sale) மற்றும் ’ஹைபிரிட் ஆஃபர்’ (Hybrid offer) என அது அறியப்படுகிறது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இப்போது 'ஆஃபர் ஃபார் சேல்' வகையின் கீழ் ஐபிஓ வெளியிட்டுள்ளது. இந்த வகையின் கீழ் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் தங்கள் வசமுள்ள பங்குகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பங்குகளை விற்பனை செய்ய முன்வருவர். இதன் மூலம் நிறுவனத்தின் மூலதனத்தில் மாற்றம் ஏதும் இருக்காது எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஐபிஓ முதலீடும் லாபமும்?
பெரும்பாலும் பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் ஐபிஓ-க்களுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதை சொல்ல முடியாது. சில நிறுவனங்களுக்கு வரவேற்பு தடபுடலாக இருக்கும், சில நிறுவனங்களுக்கு அது எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்கள் வெளியிடும் ஐபிஓ விலையை தொடர்ந்து அது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது அந்த தொகையை காட்டிலும் கூடுதலாக கிடைத்தால் அது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும்.
அதனை முதலீட்டாளர்கள் கணக்கிடுவார்கள். உதாரணமாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ வெளியிட்ட அந்த மூன்று நாட்களிலும் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் அந்த நிறுவனத்தின் பாரம்பரியம்.
பங்குச்சந்தை லிஸ்ட்டிங்கில் இந்த வங்கியின் பங்குகள் இடம் பெற்றதும் அதன் லாபம் கூடுதலாக இருக்கும் என்பது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு. ‘சின்ன கல்லு பெத்த லாபம்’ பஞ்சதந்திரம் படத்தில் வரும் வசனம் போல உள்ளது முதலீட்டாளர்களின் கணக்கு.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ பங்கு ஒதுக்கீடு நிலையை சரிபார்ப்பது எப்படி?
தகுதிவாய்ந்த நிறுவன வாங்குவோர் (QIB) 1.62 மடங்கும், நிறுவனம் சாரா முதலீட்டாளர்கள் (NII) 2.94 மடங்கும், சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர்கள் (RIIs) வகை 6.48 மடங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ-வை சப்ஸ்கிரைப் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ ஒதுக்கீடு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இதனை ஐபிஓ விண்ணப்பதாரர்கள் மும்பை பங்குச் சந்தையின் வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அல்லது இந்த ஐபிஓ-வின் ரிஜிஸ்டரராக அறியப்படும் லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடட் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை பார்க்கும் வழிகள் இங்கே…
>https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற தளத்தை விண்ணப்பதாரர்கள் அக்செஸ் செய்ய வேண்டும்.
>அதில் Equity ஆப்ஷனை தெரிவு செய்ய வேண்டும்.
>பின்னர், டிராப் டவுன் பாக்சில் உள்ள இஷ்யூ நேமான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.
>விண்ணப்பத்தின் எண் மற்றும் பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
>நான் ரோபோ இல்லை என்பதை சரிபார்த்த பிறகு ‘சப்மிட்’ கொடுத்தால் விண்ணப்பதாரர்கள் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்த வங்கியின் ரீஃபண்ட் இன்று (செப்.13) முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ சில புரிதல்கள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ விலை ரூ.500-525. ஒரு லாட்டில் 28 பங்குகள் அடங்கியுள்ளன. ஒரு லாட்டின் விலை ரூ.14,700. கிரே மார்க்கெட்டில் இதன் ப்ரீமியம் தொகை 5 முதல் 10 ரூபாய் வரை உள்ளதாம். கடந்த வாரம் இதன் விலை 25 முதல் 30 ரூபாய் வரை இருந்துள்ளது. பங்குச் சந்தையில் பங்குகள் பட்டியலிடுவதற்கு முன்னர் பங்குகள் பரிமாற்றப்படுவதே கிரே மார்க்கெட்.
Edited by Induja Raghunathan