’தமிழக பட்ஜெட் 2020’ - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
தமிழக அரசின் இந்த நிதிநிலை ஆண்டிற்கான பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
அதிமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் தமிழக பட்ஜெட் 2020 மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் 15வது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கையை 10வது முறையாக துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.
இன்றைய பட்ஜெட்டில் என்னென்ன ஸ்பெஷல். இதோ உங்களுக்காக :
- 2019-20 ஆம் ஆண்டில் தமிழத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதம் இருக்கும்.
- 2020-21 -ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்.
- நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ 22,226 கோடி.
- கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு மற்றும் அனைத்து வடிகால்களின் சுற்றுச்சூழல் 4 5,439.76 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும்.
- பேரிடர் மேலாண்மைக்கு 1,360 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்கும் பணிக்காக ரூ. 100 கோடி நிதி.
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ. 12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு.
- அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுவிட்டது. நீர்பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
- காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்புக் கால்வாய் அமைக்கப்படும்.
- ரூ.70 கோடி செலவில் தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பூங்காக்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- அம்மா உணவகம் திட்டத்திற்கு நிதியளிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் 'இலாப நோக்கற்ற' சிறப்பு வாகனத்திட்டம் செயல்படுத்தஅரசு முடிவு செய்துள்ளது.
- பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் வேளாண் செயலாக்க மையங்களை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளன.
- தமிழகக் காவல்துறைக்கு ரூ.8876 கோடி. தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி நிதி ஒதுக்கீடு.
- மீன்வளத்துறைக்கு ரூ. ₹1,229.85 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு.
- சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி நிதி.
- வேளாண்துறைக்கு ரூ.11,894 கோடி நிதி ஒதுக்கீடு.
- முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒன்றுக்குக் கட்டுமானச் செலவு ரூ.2.10 லட்சமாக உயர்வு.
- பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
- உள்ளாட்சிகளுக்கு ரூ.6,754 கோடி நிதி ஒதுக்கீடு. கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.
- 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
- நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும்.
- பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்குத் தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு.
- தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவதற்கு ரூ.1,200 கோடி நிதி.
- மாநில சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி, தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழகத்தில் விரைவில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்.
- வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
- 2020-21ம் நிதியாண்டில் முத்திரைத் தாள் வரியானது 1 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5,000 மிகாமல் வரி வசூலிக்கப்படும்.
• மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்புத்
தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின்
ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
• கொரோனோ வைரஸ் பாதுகாப்புத் திட்டங்கள் தயாராக உள்ளன. சுகாதாரத்
துறையானது போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடிகளை வாங்கி இருப்பு
வைத்துள்ளது.
• திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க அரசு
திட்டமிட்டுள்ளது.