பெண்கள் இயக்கும், 100 எலக்ட்ரிக் ஆட்டோக்களை துவக்கி வைத்தார் தமிழக முதலமைச்சர்!
சூரிய மின்சக்தி ஆட்டோக்கள் மற்றும் மின் ஆட்டோக்களை தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் இயக்கும் 13 வகையான சூரிய மின்சக்தி மற்றும் 100 மின் ஆட்டோக்களை தமிழகத்தில் அறிமுகம் செய்து கொடி அசைத்து துவக்கி வைத்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்திற்கு முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பை ஈர்க்கும் வகையில் முதல்வர் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் பலனாக இந்த திட்டம் அமைவதாக இது தொடர்பான தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி, துபாயின் எம் ஆட்டோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, சார்ஜிங் மையங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகள் அமைக்க அரசு உதவி செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி செயல்பாடுகளை துவக்க எம் ஆட்டோ முதல் நிறுவனமாக உரிமம் பெற்றது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி உற்பத்தி செய்யும் இந்த ஆட்டோக்கள் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, அவசர கால அழைப்பு பட்டன் ஆகியவற்றை கொண்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள் இவற்றை இயக்க உள்ளனர்.
இதன் அறிமுக விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.ஆட்டோ தலைவர் மன்சூர் அலிகான் மற்றும் நிர்வாக இயக்குனர் யாஸ்மின் ஜவஹர் பங்கேற்றனர்.
இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் செய்த முதல்வர் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, ரூ.8,835 கோடி முதலீடுகளுக்கான சம்மதத்தை பெற்று வந்தார். இவை, 35,520க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அவசர கால சேவையை வலுவாக்கும் வகையில் கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி 118 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த போது, எம்.வீரலட்சுமி நாட்டின் முதல் ஆம்புலன்ஸ் டிரைவர் எனும் சிறப்பை பெற்றார்.
செய்தி- பிடிஐ | தமிழில்-சைபர்சிம்மன்