ஏப்ரல் 6 தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை விதிமுறைகள் என்ன?
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு. தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டத்தில் நடைப்பெறும் என அறிவிப்பு வந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டத்தில் நடைப்பெறும் என அறிவிப்பு வந்துள்ளது.
இதுதொடர்பான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முன்னதாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட மாநிலத் தலைமை செயலாளர், அனைத்து அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், அரசின் பல்துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் டெல்லி திரும்பி அடுத்தகட்ட ஏற்பாடுகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட்டனர். நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த வாரம் அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தர்மேந்திர சர்மா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:
வேட்புமனு தாக்கல் - மார்ச் 12
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - மார்ச் 19
மனு மீதான பரிசீலனை - மார்ச் 20
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 22
வாக்குப்பதிவு - ஏப்ரல் 6
வாக்கு என்ணிக்கை - மே 2ம் தேதி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது. கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.”
- ஒரு கட்சி, மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
- அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
- வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.
- வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரபூர்வ ஏஜென்டாகவோ இருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்லலாம்.
- உரிய ஆவணங்களின்றி அதிகளவில் பணம், தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், பரிசுப்பொருட்களை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும்.
- பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.
- கட்சித்தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவை மூடி மறைக்கப்படும், என்றார்.
தமிழத்தில் மொத்தம் 88,936 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.