'இங்கு கிரிப்டோ ஏற்றுக் கொள்ளப்படும்' - டீக்கடை நடத்தும் விரக்தி அடைந்த இளைஞர்!
பெங்களூருவில் டீ கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் தனது கடையில் பருகும் தேநீருக்கான விலையை கிரிப்டோ கரன்சி மூலம் வசூலித்து வருவது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் டீ கடை வைத்திருக்கும் இளைஞர் ஒருவர் தனது கடையில் பருகும் தேநீருக்கான விலையை கிரிப்டோ கரன்சி மூலம் வசூலித்து வருவது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் உள்ள ஒரு டீ ஸ்டால் உரிமையாளர் தனது டீக்கடையில் கிரிப்டோகரன்சியை செலுத்தலாம் பிளக்ஸ் மூலம் அறிவிப்பு வைத்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிரிப்டோ ஏற்கும் டீ கடை:
20 வயதான சுபம் சைனி, பெங்களூருவின் மாரத்தஹள்ளி பகுதியில் ‘ஃபிரஸ்ட்ரேடட் ட்ராப் அவுட்’ (விரக்தியடைந்த டிராப்அவுட்) என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார். பெரிதாக கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வசதி இல்லாததால், தற்காலிகமாக சாலையோரத்தில் டீகடை நடத்தி வரும் இவர், கல்லூரி காலத்தில் இருந்தே கிரிப்டோ டிரேடிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதற்காக 2020ம் ஆண்டு தான் தனது BCA செமிஸ்டரி படிப்பையும் பாதியில் நிறுத்தினார். ஆரம்பத்தில் அவர் போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்த ரூ.1.5 லட்சம் 1000 சதவீதம் உயர்ந்து 30 லட்சமாக உயர்ந்தது. ஆனால், இந்தியாவில் 2021ம் ஆண்டு ஏப்ரல் சரிவை சந்தித்ததால், சுபம் நஷ்டமடைந்தார். இதனால் அவரது கையில் வெறும் 1 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
அப்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி டீக்கடை நடத்தக்கூடாது என முடிவெடுத்தார். அந்த யோசனையில் இருந்து உதயமானது தான், ‘ஃபிரஸ்ட்ரேடட் ட்ராப் அவுட்’ (The Frustrated Drop-out) தேநீர் கடை.
தற்போது தனது கடையில் தேநீர் குடிக்கும் 20 பேர் வாரத்திற்கு கிரிப்டோ கரன்சி மூலமாக பணம் செலுத்துவதாக அறிவித்துள்ளார். டாலரில் பெறப்படும் தொகையை இந்திய பணமாக மாற்ற, ஃபேக்ஸ்புல் கிரிப்டோ பிளாட்பார்மை பயன்படுத்தி வருகிறார்.
சரி கிரிப்டோகரன்சி மூலமாக பணம் வசூலிப்பதால் நல்ல லாபம் கிடைக்கு என்றும் நினைத்துவிடாதீர்கள், பிரபல இணைய தளத்திற்குள் அளித்துள்ள பேட்டியில்,
“பரிவர்த்தனை செய்யப்படும் கிரிப்டோவை நான் இப்போது இந்திய ரூபாயாக மாற்றினால், எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் நான் குறிப்பிட்ட எதிர்காலத்தை நம்புகிறேன், அதனால்தான் நீண்ட கால, அதிக ஆதாய நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த கிரிப்டோ சொத்துக்களை சேமித்து வைத்திருக்கிறேன்,” என்கிறார்.
எதிர்காலத் திட்டம்:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அரசு பல்வேறு வகையான முயற்சிகளை செய்து வந்தாலும், கிரிப்டோ பரிவர்த்தனைகளை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், பெங்களூரு போன்ற மெட்ரோ நகரத்தில் தேநீர் கடை நடத்தும் இளைஞர் ஒருவர் “இங்கு கிரிப்டோ பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்...” என அறிவித்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"நான் தினமும் மூன்று முதல் நான்கு கிரிப்டோ கட்டணங்களைப் பெறுகிறேன். வாடிக்கையாளர் பணம் செலுத்துவதற்கு வசதியாக இருப்பதைப் பொறுத்து நான் பல பரிமாற்றங்களைப் பயன்படுத்துகிறேன்,” என்கிறார்.
சாலையோரத்தில் டீக்கடை நடத்தினாலும் சைனின் கனவுகளும், லட்சியமும் மிகப்பெரியதாகவே இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய கஃபே சங்கிலியை உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய கனவு. அதுவும் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே கொண்டு, பசுமையான தேநீர் கடைகளை உருவாக்க வேண்டும் என்பதே சைனின் லட்சியமாகும்.
”உலகின் மிகப்பெரிய பசுமை நிறுவனமாகவும், கஃபே சங்கிலியாகவும் மாற வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும், இது நமது மண்ணில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தும், இதன் மூலம் நமது சுற்றுச்சூழலைக் காப்பாற்றி மேலும் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்," என்று இவரது அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.
இந்தியர்கள் அனைத்து கிரிப்டோ வருவாய் மற்றும் லாபத்தின் மீது 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் ஒரு சதவீத டிடிஎஸ் வசூலிக்கப்படும் என்ற விதிமுறையை ஜூலை 1ம் தேதி நடைமுறைப்படுத்தியது.
இதனால் இந்திய வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு சரிய ஆரம்பித்தது. இந்திய பரிவர்த்தனைகளான WazirX, CoinDCX, BitBNS மற்றும் Zebpay ஆகியவற்றின் சராசரி தினசரி பரிவர்த்தனை அளவு $5.6 மில்லியனாகக் குறைந்துள்ளது ( தோராயமாக ரூ.44 கோடி), இதற்கு முன்னதாக ஜூன் வரை, இந்த அளவு சுமார் $10 மில்லியன் (சுமார் ரூ. 80 கோடி) இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி
வங்கி வேலை கிடைக்கலனா என்ன; டீக்கடை நடத்தி வெற்றி பெற்ற ‘கிராஜுவேட் சாய்வாலி’