ஏட்டுக்கல்வி மட்டுமல்ல பாட்டனின் விவசாயத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்கள்!
மாணவர்களுக்கு புத்தகங்களில் இருக்கும் பாடங்கள் மட்டுமின்றி வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத் தருகின்றன பள்ளிகள். அப்படி என்ன செய்து காட்டி இருக்கின்றனர்?
பெற்றோரால் இந்த உலகிற்கு அறிமுகமாகும் குழந்தைக்கு உலகத்தையே கற்றுத் தரும் முக்கியப் பங்காற்றுகின்றனர் ஆசிரியர்கள். படிப்பில் மட்டுமே நம்பர் 1 மாணாக்கரை உருவாக்கும் பள்ளிகளை விட மனிதநேயம், நற்பண்புகள், பழக்க வழக்கங்களைக் கற்றுத் தந்து நமது அடையாளத்தை தொலைத்து விடாத மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளே இன்றைய தேவையாக இருக்கிறது.
பாடக்கல்வியோடு களக்கல்வியும் அவசியம் என்பதால் கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகள் பல வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.
வேளாண்மை செழித்தால் தான் மனிதனின் வாழ்க்கைச் சுழற்சியில் தடை இருக்காது. விவசாயம் காப்போம் என்று கூறும் நாம் விவசாயம் செய்வோம் என்று உறுதி எடுப்பதில்லை. மற்ற தொழில்களைப் போலவே விவசாயமும் ஒரு லாபம் தரக்கூடிய தொழில் மட்டுமின்றி உலகத்தில் உள்ள எல்லா மக்களும் உயர்வாக போற்றக்கூடிய தொழில் என்பதை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது சிவகங்கையை சேர்ந்த தனியார் பள்ளி.
மாணவர்களை வயல்வெளிக்கு அழைத்து சென்று விவசாயம் பற்றிய புரிதலை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பள்ளி
நாம் உண்ணும் ஒவ்வொரு சோற்றிலும் நமது பெயர் எழுதப்பட்டிருக்கிறது அந்த உணவை வீணாக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்வதுண்டு. எளிதில் தூக்கி வீசப்படும் உணவு எப்படி உற்பத்தி செய்து நமது தட்டிற்கு சாப்பாடாக வருகிறது என்பதை மாணவர்களின் மனதில் பதிய வைத்தல் மிகவும் அவசியம்.
400 மாணாக்கர்களை விவசாய நிலங்களுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் அங்கு உணவு தானியங்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, ஆடு, மாடு கோழி வளர்ப்பு எப்படி செய்யப்படுகிறது என்பதெல்லாம் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. இறுதியாக சேற்றில் இறங்கி ஆசிரியர்களும் மாணவர்களும் நெல் நாற்றுகளை நடவு செய்துள்ளனர்.
நாற்று நடும் போது தாங்கள் நட்டு வைக்கும் இவை நன்கு வளர்ந்து நெல்மணிகளைத் தர வேண்டும் என்று இயற்கையை வணங்கி மாணவர்கள் விவசாயத்தின் அருமை பெருமைகளை மண் தொட்டு புரிந்தனர்.
வளர் பருவத்தில் மாணவர்கள் மத்தியில் விவசாயம் பற்றி விதைக்கப்படும் விதையானது வளர்ந்த பிறகு அவர்கள் மனதில் விவசாயத்திற்கென அவர்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையாவது உருவாக்க வேண்டும் என்பதே பள்ளி நிர்வாகத்தின் நோக்கம்.
சிவகங்கை பள்ளியைப் போன்றே மழலையர் பள்ளி ஒன்று சின்னஞ்சிறு பிள்ளைகளை வயல்வெளியில் சேற்று மண்ணோடு சேர்ந்து விளையாடி நாற்று நடவைத்திருக்கிறது. சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு ஒரு பக்கம் வாழ்த்துகளும், மற்றொரு பக்கம் விளம்பரத்திற்காக பள்ளி செய்யும் செயல் என்ற சர்ச்சைக் கருத்துகளும் வெளிப்படுகின்றன.