காற்று மாசைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்புக் கருவி கண்டுபிடித்துள்ள குழு!
காற்று மாசுபாடு பிரச்சனைக்கான தீர்வுகளில் ஒன்றுதான் இந்த பாசி சார்ந்த காற்று சுத்திகரிப்பான்.
உலகில் அதிகம் மாசுபட்ட 10 நகரங்களில் ஏழு நகரங்கள் இந்தியாவில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பது குருகிராம். அதைத் தொடர்ந்து காஸியாபாத் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் பசுமைப் போர்வையை மேம்படுத்துவது, மின்சார ரயில்களை இயக்கி, காற்று மாசைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
காற்று மாசுபாடு பிரச்சனைக்கான தீர்வுகளில் ஒன்றுதான் பாசி சார்ந்த காற்று சுத்திகரிப்பான். பஞ்சாபின் லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக்கழகம் மற்றும் மொகலியின் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) ஆகியவை ஒருங்கிணைந்து இந்த காற்று சுத்திகரிக்கும் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியானது காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களை 98 சதவீதம் மட்டுப்படுத்தும். அதுமட்டுமின்றி ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும். இதனால் கருவி பொருத்தப்படும் பகுதியின் உட்புறம் சுவாசிக்க உகந்த பகுதியாக மாற்றப்படும்.
இது எப்படி செயல்படுகிறது? பாசியில் உள்ள நுண்ணுயிரிகள் மூலம் சூரிய ஒளி, தண்ணீர், கார்பன்டையாக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தின் ஸ்டார்ட் அப் பிரிவின் தலைவர் நவீன் லுத்ரா கூறும்போது,
“சந்தையில் காற்றை சுத்திகரிக்கும் பல்வேறு கருவிகள் கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் கார்பன் மற்றும் HEPA ஃபில்டர்கள் கொண்டு மாசுகளை ஃபில்டர் செய்கிறது. ஆனால் எங்கள் மாணவர்களின் இந்த புதிய முயற்சி மாறுபட்டது. இந்தத் தயாரிப்பு வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு வர உள்ளது,” என்றார்.
சந்தையில் கிடைக்கும் வழக்கமான காற்று சுத்திகரிக்கும் கருவிகள் போலல்லாமல் இந்த கருவிக் கடற்பாசி நிரப்பப்பட்ட கண்டெயினரைப் கொண்டுள்ளது. இது உட்புற காற்றை தூய்மையாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் ஆக்சைடு உள்ளிட்ட தொழில்துறை சார்ந்த நச்சுத்தன்மை கொண்ட வாயுக்களை திறம்பட நீக்குகிறது. அத்துடன் ஃபில்டர் செய்யப்பட்ட காற்றில் ஆக்சிஜனை உட்செலுத்துகிறது.
இதன் துணை தயாரிப்பாக பயோமாஸ் தயாரிக்கப்படுகிறது. இவற்றை எஃப்எம்சிஜி, மருந்து உள்ளிட்ட துறைகளுக்கு ஒரு கிலோ 800 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யலாம்.
விண்வெளி ஆராய்ச்சி கண்டு உந்துதல் பெற்ற இக்குழு விண்வெளியில் பாசி மூலம் ஆக்சிஜன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தயாரிப்பின் முன்வடிவம் உருவாக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான பயன்பாடு குறித்து துறை சார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். OX-C, மேம்பட்ட வெர்ஷனான OX-C 2.0 ஆகிய தயாரிப்புகள் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் விலை முறையே 18,000 மற்றும் 25,000 ரூபாய் ஆகும்.
லவ்லி ப்ரொஃபெஷனல் பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு பிடெக் படிக்கும் மாணவர்களான ஆனந்த் குமார் ராஜ்புட், தீபக் தெப் மற்றும் மொகலி IISER பிஹெச்டி ஸ்காலர் ரவ்னீத் யாதவ் ஆகியோர் இந்த ஆய்வு மேற்கொண்டனர். லவ்லி ப்ரொஃபஷனல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் மைக்ரோபயாலஜி துறை உதவி பேராசிரியர் நவீன் லூத்ரா டாக்டர் ஜஸ்டின் மற்றும் மொகலி IISER உதவி பேராசிரியர் டாக்டர் ஏ சுனிலா பாடீல் ஆகியோர் இக்குழுவை வழிநடத்தியுள்ளனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA