[Tech30] ஒரே ஆண்டில் லாபம் ஈட்டத் துவங்கிய ஸ்டார்ட் அப் துவக்கிய கல்லூரி நண்பர்கள்!
யுவர்ஸ்டோரி டெக் 30 பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான, பிகாயி 2019 ஏப்ரலில் துவங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் லாபம் ஈட்டத்துவங்கியுள்ளது.
ராய்பூரைச்சேர்ந்த சோனாக்ஷி மற்றும் கர்நூலைச்சேர்ந்த அசுடோஷ் சிங், ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கழகத்தில் (IIIT) பயின்ற போது 2011ல் சந்தித்துக் கொண்டனர்.
கல்லூரி முடித பிறகு, சோனாக்ஷி ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மென்பொருளாலராக பணியாற்றத் துவங்கினார். அசுடோஷ் கனடா சென்று, அமெரிக்காவை தலைமைகமாகக் கொண்ட ஜெனிபிட்ஸ் மற்றும் டிவிட்டர் இணை நிறுவனர் ஜேக் டோர்சியின் ஸ்கொயர் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இருவரும் பணியில் திருப்தி அடைந்தாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தனர். தங்கள் வேலை எளிதானதாக, சவால் இல்லாததாக உணர்ந்தனர். அடுத்து என்ன என யோசித்துக்கொண்டிருப்போம் என இந்த கால கட்டம் பற்றி சோனாக்ஷி நினைவு கூறுகிறார்.
இருவரும் தொழில்நுட்ப நிறுவனத்தை துவக்க விரும்பினார். கைவசம் சில ஸ்டார்ட் அப் யோசனைகளையும் வைத்திருந்தனர் என்றாலும், எந்த பிரச்சனையை கையில் எடுத்துக் கொள்வது எனத்தெரியவில்லை.
பின்னர் துணிச்சலாக 2018ல் வேலையை விட்டு விலகினர். ஏனெனில் வேலையில் தொடர்ந்தால் ஸ்டார்ட் அப்பை துவக்கும் எண்ணம் செயல்வடிவம் பெறாது என நினைத்தனர்.
2018 ஆண்டு இறுதியில் சோனாக்ஷி தனது சொந்த ஊரான ராய்பூருக்கு சென்ற போது, அவருக்கு சரியான யோசனை உண்டானது. அங்கு அவரது குடும்பம் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டிருந்தது. சொந்தமாக மளிகைக் கடையும் வைத்திருந்தனர்.
இந்த மளிகைக் கடையில் தான், சோனாக்ஷி மற்றும் அசுடோஷ் இணைந்து உருவாக்கிய பிகாயி (Bikayi) ஸ்டார்ட் அப்பிற்கான விதை உருவானது. நிறுவனம் ஓராண்டுக்குள் 2 மில்லியன் டாலர் நிதி திரட்டி, லாபகரமாகவும் மாறியுள்ளது.
அசுடோஷ், வணிகக் குடும்பத்தில் இருந்த வந்தவரில்லை. அவரது அம்மா ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரது தந்தை அரியானா மாநில நீர்ப்பாசனைத்துறையில் பணியாற்றுகிறார்.
மளிகைக் கடையில் இருந்த ஊழியர்கள் வாட்ஸ் அப்பில் ஆர்டர் பெற்று, பொருட்களை வழங்கி கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு நேரம் ஆனது. இது பற்றி சோனாக்ஷி, அசுடோஷுடன் பேசினார். இருவரும் சேர்ந்து தேடிய போது ஷாப்பிபை சேவையை கண்டறிந்தனர்.
இந்நிறுவனம் வணிகர்கள் ஆன்லைன் கடைகளை நடத்த உதவியது. ஆனால், இந்த வாய்ப்புகள் எளிதாக இருக்கவில்லை என்கிறார் சோனாக்ஷி.
“2019 மார்ச்-ல், நாமே ஏன் இதை உருவாக்கக் கூடாது என பேசினோம். ஆர்டர் மற்றும் பொருட்கள் பட்டியல் நிர்வாகத்தில் உதவ விரும்பினோம். வணிகர்கள் தங்கள் பொருட்களை எளிதாக பட்டியலிடக்கூடிய செயலியை உருவாக்க தீர்மானித்தோம். ஃபேஸ்புக்கில் வணிக குழுக்களில் இந்த செயலி பற்றி தெரிவித்தோம்,” என்கிறார் சோனாக்ஷி.
2019 ஏப்ரல் 1ம் தேதி, வணிகர்கள் எளிதாக ஆன்லைன் கடைகளை அமைக்க உதவும் பிகாயி செயலியை துவக்கினார். வாட்ஸ் அப்பில் இ-காமர்சை மேற்கொள்வதற்கான எல்லா வசதிகளும் இதில் அளிக்கப்பட்டன.
“மளிகைக் கடை, ஒட்டுமொத்த விற்பனை, உற்பத்தியாளர், ரெஸ்டாரண்ட் என வாட்ஸ் அப்’பில் செயல்படும் எவரும் எங்கள் முதன்மை வாடிக்கையாளர்.” என்கிறார் சோனாக்ஷி.
பிகாயி இலவச மற்றும் கட்டணச்சேவைகளை அளித்து வருகிறது. கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,999 முதல் ரூ.7,999 என அமைகிறது. கட்டணச்சேவையில் தள்ளுபடி கூப்பன்கள் போன்ற வசதிகள் உண்டு.
லாபம் ஈட்டுதல்
இணை நிறுவனர்கள் தங்கள் தனிப்பட்ட சேமிப்பான ரூ.7 லட்சம் கொண்டு ஸ்டார்ட் அப்பை துவக்கினர். 2020 ஜூலை வரை, இணை நிறுவனர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் நிர்வாகி மற்றும் இளம் பொறியாளர் ஆகியோர் தான் நிறுவனத்தில் இருந்தனர்.
ஜனவரி மாதம் முதல் நிறுவனத்தை லாபம் ஈட்ட வைக்க முடிந்தது. கடந்த மாதம், அமெரிக்க இசைத் தயாரிப்பாளர் டுவோ சைன்ஸ்மோகர்ஸ், மண்டிஸ் வென்சர்ஸ், ஒய் காம்பினேட்டர் மற்றும் பயனீர் பண்ட் உள்ளிட்ட சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர் நிதி பெற்றதாக அறிவித்தது.
மேலும் நிறுவனம், ஒய் காம்பினேட்டர் ஸ்டார்ட் அப் திட்டத்தில், இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 14 ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஸ்டார்ட் அப் திட்டம் இந்த ஆண்டு மெய்நிகர் வடிவில் நடைபெற்றதாலேயே பிகாயி இதில் பங்கேற்றது.
பிகாயி சேவை மூலம் வணிகர்கள் தினமும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் செய்கின்றனர். கொரோனா பல வர்த்தகங்களை பாதித்தாலும், இந்நிறுவனம் இந்த நெருக்கடியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“பால் சிறிய கடைகள் எங்கள் வசதியை பயன்படுத்தத் துவங்கியதால் வளர்ச்சி அதிகரித்துள்ளது,” என்கிறார் சோனாக்ஷி.
ஜூலையில் 25,000 வணிகர்களை தனது மேடையில் கொண்டிருந்த நிலையில் செப்டம்பரில் 85,000 வணிகர்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஒரு லட்சம் வணிகர்கள் எனும் எண்ணிக்கையை தொட திட்டமிட்டுள்ளது. இந்த காலத்தில் நிறுவன வருவாயும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
நிறுவனம் தனது ஊழியர்கள் எண்ணிக்கையையும் பத்தாக அதிகரித்துளது. இந்த எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. 2021ல் இந்த வசதியை சர்வதேச அளவில் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் இந்த செயலி 60 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. மாதந்தோறும் 3.5 மில்லியன் பயனாளிகள் வருகை தருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
அமேசான் போட்டி
நிறுவனத்திற்கு போட்டி என பார்த்தால், அமேசான், ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் போன்ற பெரு நிறுவனங்கள் களத்தில் உள்ளன. சிறிய கடைகள் டிஜிட்டல் வடிவில் செயல்படுவதற்கான சூப்பர் ஸ்டோர் வசதியை அமேசான் ஜூன் மாதம் அறிவித்தது. ஜியோமார்ட் நிறுவனமும் மளிகைக் கடைகளை டிஜிட்டல்மயமாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஜியோமார்ட் டிஜிட்டல் வணிக்கத்திற்காக வாட்ஸ் அப்புடனும் இணைந்து செயல்படுகிறது.
ஆனால், பிகாயி இந்த போட்டி கண்டு அச்சம் கொள்ளவில்லை. இது தொடர்பான கேள்விக்கு,
“பெசோஸ் அல்லது அம்பானியை பார்த்து நாங்கள் அஞ்சவில்லை. அவர்கள் பெரிய நிறுவனங்களாக இருக்கலாம் ஆனால் வணிகர்களை ஈர்ப்பது என்பது எளிதல்ல,” என்று சோனக்ஷி பதில் அளிக்கிறார்.
”தனது சேவையை போன்றே போட்டியாளர்களும் வழங்கத்துவங்கும் போது தாங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுவோம் என்றும் அவர் சொல்கிறார்.
கட்டுரை தொகுப்பு: சைபர்சிம்மன்