Techsparks 2019: திரைத்துறை, தொழில் முனைவு குறித்த நடிகை டாப்சி பன்னுவின் பார்வை!
டெக்ஸ்பார்க்ஸ் 2019 நிகழ்வில் பாலிவுட் நடிகை டாப்சி பன்னு பொறியியல் படிக்க தீர்மானித்தது குறித்தும் ஸ்டார்ட் அப் மற்றும் நடிகர்கள் இடையே இருக்கும் தொடர்பு குறித்தும் நடிப்புத்துறையைத் தேர்வு செய்தது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷுடன் அறிமுகமாகி, பின்க் திரைப்படத்தில் மினல் அரோராவாகவும், சமீபத்தில் பத்லா திரைப்படத்தில் நைனாவாகவும் அறிந்திருப்பீர்கள். ஆனால் பாலிவுட் நடிகை மற்றும் தேசிய திரைப்பட விருது வென்றவரான டாப்சி பன்னு சராசரி ஹீரோயினைக் காட்டிலும் கூடுதல் சிறப்புமிக்கவர்.
பல்வேறு சவால்களை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு, சுய உந்துதலுடன் செயல்படும் பெண்ணான டாப்சி யுவர்ஸ்டோரியின் முக்கிய நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா உடனான ஃபயர்சைட் அரட்டையில் டாப்சி மென்பொருள் பொறியாளராக இருந்தது, திரை நட்சத்திரமாக உருவானது, சமீபத்தில் தொழில்முனைவில் ஈடுபட்டது என தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
தொழில்முனைவோர்கள் போன்றே நடிகர்களும் பரிச்சயமில்லாத புதிய பகுதியில் கால் பதித்து, வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு, நிராகரிப்புகளை எதிர்த்துப் போராடவேண்டிய சூழல் உள்ளது என்றார் பி.டெக் பட்டதாரியான டாப்சி. இவர் ’தி வெட்டிங் ஃபேக்டரி’ என்கிற திருமண திட்டமிடல் நிறுவனத்தைத் தொடங்கி தொழில்முனைவில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பிட்ட பட்ஜெட்டில் தனித்துவமான அனுபவங்களை வழங்க இவர் தனது நண்பர் ஃபராஜ் பர்வரேஷ், சகோதரி ஷகுன் பன்னு ஆகியோருடன் இணைந்து இந்நிறுவனத்தை நிறுவியுள்ளார். தொழில்முனைவோர் போன்றே நடிகர்களும் தோல்வியை சந்திக்கின்றனர். சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோமா என கேள்வி எழுப்பிக்கொள்கின்றனர் என்றார் டாப்சி. இருப்பினும் வாழ்க்கையில் ஏற்றங்கள் போன்றே இறக்கங்களும் முக்கியம் என்றும் இவர் குறிப்பிடுகிறார். இவர் Pune 7 Aces பேட்மிட்டன் அணியின் உரிமையாளர் ஆவார்.
”வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் இரண்டுமே முக்கியம். நீங்கள் இறக்கத்தை சந்திக்காமல் போனால் உங்களால் ஏற்றத்தை ரசிக்கமுடியாது. எது உங்களை காயப்படுத்தவில்லையோ அதுவே உங்களை வலுவாக்குகிறது,” என்று ஒரு பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு வயது முதலே எனக்கு இந்த கருத்தில் நம்பிக்கை உண்டு,” என்றார் டாப்சி.
இது உண்மைதான். டாப்சி ஒவ்வொரு புதிய முயற்சியை மேற்கொள்ளும்போதும் கூடுதல் வலுபெற்றவராகவே மிளிர்கிறார். கடந்த பத்தாண்டுகளில் அவர் தனக்கு வசதியான ஒரு வட்டத்தை விட்டு வெளியேறி பல்வேறு புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு சிறப்பித்து வருவதைப் பார்க்கமுடிகிறது.
”உங்களுக்கு வசதியான ஒரு வட்டத்தை விட்டு நீங்கள் வெளியேறவில்லையெனில் நீங்கள் ஒரு சிறந்த நடிகராக உருவாகமுடியாது,” என்றார் நடிகையாகவும் தொழில்முனைவோராகவும் செயல்படும் டாப்சி.
கல்லூரி நாட்களில் முதலில் மாடலாக செயல்பட்ட இவர் இன்று 42-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுதவிர இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையில் வெளியாக உள்ள ’சாண்ட் கீ ஆங்க்’ உட்பட இவரது ஐந்து திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளது.
”நான் ஒவ்வொரு முறை தோல்வியை சந்திக்கும்போதும் ஒரு திரைப்படம் எனக்கு அதிர்ஷ்ட்டம் இல்லாத காரணத்தால் தோல்வியடைந்தது என்று கூறப்படும்போதும்’ அவர்கள் முன்பு என்னுடைய திறனை நிச்சயம் வெளிப்படுத்துவேன்’ என்று எனக்குள் கூறிக்கொள்வேன்,” என்றார் டாப்சி.
டாப்சி தன் வாழ்க்கையில் இதையே பின்பற்றியுள்ளார். இவர் யாருடைய பரிந்துரையும் இன்றி திரைத்துறையில் நுழைந்துள்ளார். பள்ளி நாட்களிலோ அல்லது கல்லூரி நாட்களிலோ நாடகங்களில் நடித்த அனுபவமும் இவருக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அவருக்கு தடையாக இருக்கவில்லை.
”முறையாக மதிப்பீடு செய்யாமல் நான் எந்த ஒரு வாய்ப்பையும் மறுத்ததில்லை. இது நிச்சயம் எளிதாக இருக்கவில்லை. இன்றளவும் பாரபட்சமான நடத்தை, செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ளுதல் போன்ற காரணங்களால் நான் நிராகரிக்கப்படலாம். நான் நிறைய தவறுகள் செய்துள்ளேன். அவற்றால் நான் தோற்றுப்போவதற்கு பதிலாக அவற்றில் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன். இந்த நம்பிக்கை உணர்வே நான் தொடர்ந்து செயல்பட உதவிவுகிறது,” என்றார் டாப்சி.
விரைவில் திரைக்கு வர இருக்கும் ’சாண்ட் கீ ஆங்க்’ திரைப்படத்தில் டாப்சி பிரகாஷி தோமர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் பூமி பட்னேகர் உடன் இணைந்து நடித்துள்ளார். பூமி பட்னேகர் இதில் சந்திரோ தோமராக நடிக்கிறார். இது உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த உலகின் மிகவும் வயதான துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இதில் வயதான கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்காக டாப்சியை பலர் விமர்சனம் செய்தனர். அனுபவமிக்க நடிகர்களே இத்தகைய கதாப்பாத்திரத்தை ஏற்கவேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இத்தகைய விமர்சனங்களை சிறப்பாக கையாண்டார் டாப்சி.
சமூக ஊடகங்களில். “நாம் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கவேண்டாமா? எதிர்மறை எண்ணங்களை எப்போதும் சுமந்துகொண்டு அதன் காரணமாக ஆபத்துகளை துணிந்து எதிர்கொள்ளத் தயங்கலாமா? இது வியப்பாக உள்ளது. மாற்றத்தைக் கொண்டு வர தங்களுக்கு வசதியான ஒரு வட்டத்தில் இருந்து வெளியேறி துணிந்து செயல்படுபவர்களுக்கு நாம் தோள் கொடுக்கத் தவறலாமா?” எனக் கேள்வியெழுப்பினார்.
டாப்சி தனது சமீபத்திய ப்ராஜெக்ட் குறித்து கூறினார். இரண்டு பெண்கள் அடங்கிய இந்த ப்ராஜெக்ட் குறித்து கேட்டபிறகு இதில் பங்களிக்க சம்மதம் தெரிவித்ததற்காக தனது சக நடிகையான பூமி பட்னேகரை பாராட்டினார். பலர் இறுதி நேரத்தில் விலகிக்கொண்டனர். மற்றொரு பெண்ணுடன் சமமாக திரையைப் பகிர்ந்துகொள்வதைப் பலர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக இரண்டு கதாப்பாத்திரங்களில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
டாப்சிக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம் இருக்கும்போதும் இந்தத் தொழில் சற்று பயங்கரமானது என நம்புகிறார்.
"நடிகர்களாக நாங்கள் மக்களை மகிழ்விக்கவேண்டும். எங்களை விரும்புபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே எங்கள் தொழில் தொடர்ந்து செயல்படும். இதில் வெளியில் இருந்து இணைந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்களையே முதலீடு செய்துகொண்டு பிராண்டை உருவாக்கிக் கொள்கிறோம். பெரும்பாலானோர் துறைக்கு வெளியில் வருவதால் சிக்கல் அதிகமாகவே உள்ளது,” என்றார்.
ஆபத்துகள், தோல்விகள், சவால்கள் போன்றவை இருப்பினும் ஒரு புதிய தொடக்கத்திற்கான நேரம் நிச்சயம் உண்டு என்று 2,000-க்கும் அதிகமான பார்வையர்களிடம் கூறினார் டாப்சி. இறுதியாக,
பெரும்பாலான நேரங்களில் தோல்வி என்பது நம்மை நெருங்காது என்கிற மாயையில் நாம் வாழ்கிறோம். ஏதோ தவறு நடக்கிறது என்பதை கவனிக்க மறுத்துவிடுகிறோம். நம் வாழ்க்கையில் மிகப்பெரிய தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், நாம் மீண்டும் புதிதாக தொடங்கவேண்டும் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்கள்: தெபோலினா பிஸ்வாஸ், டென்சின் பெமா | தமிழில்: ஸ்ரீவித்யா