[TechSparks 2020] 'மக்களுக்கு உதவுவதே என் வாழ்க்கையின் விதி’ – சோனு சூட்!
விடாமுயற்சியும் நோக்கத்தில் சிதறாத கவனமும் இருப்பது முக்கியம் என்பதே தொழில்முனைவோர்களுக்கு சோனு சூட் வலியுறுத்தும் கருத்தாகும்.
பாலிவுட் நடிகர் சோனு சூட் திரைத்துறையில் பணியாற்றும் நோக்கத்துடனேயே மும்பை நகருக்கு மாற்றலானார். இருப்பினும் அவரது பாதை திசை மாறியது. மக்கள் நலனில் தீவிரமாகப் பங்களிக்கத் தொடங்கினார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது புலம்பெயர் தொழிலாளர்கள் பெருந்திரளாக சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்தனர். சோனு சூட் இவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுத்தார். மக்களிடமிருந்து இவருக்குக் கிடைத்த அளவு கடந்த அன்பைத் திருப்பி செலுத்தும் விதமாக சமூகப் பணிகளில் ஈடுபட விரும்பினார்.
“திரைப்பட வாய்ப்புகள் இருந்தாலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதிலேயே என் முழு கவனமும் உள்ளது. அறுவை சிகிச்சைகள் போன்ற மருத்துவ உதவிகள், வேலை வாய்ப்புகள், கல்வி உதவி என மக்களின் தேவைக்கேற்ப உதவுவதில் எனக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது,” என்று மெய்நிகர் வடிவில் நடைபெற்ற டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் சோனு சூட் குறிப்பிட்டார்.
”திரைப்பட நடிகர் ஆகவேண்டும் என்பதுதானே உன் லட்சியம், பிறகு ஏன் இதுபோன்ற செயல்களில் நேரத்தை வீணாக்குகிறாய்?’ என்று என் நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. ஆனால் இதுதான் என்னுடைய கடமை என்கிற புரிதல் எனக்கு ஏற்பட்டது,” என்றார்.
இவர் தனது பயணத்தில் இன்றைய நிலையை எளிதாக எட்டிவிடவில்லை. ஏராளமானோர் இவரது முயற்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தனர். இவை எதுவும் சோனுவிற்கு தடையாக இருக்கவில்லை. ஒருவருக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது இயற்கைதான் என்று இளம் தொழில்முனைவோர்களிடம் தெரிவித்தார்.
“உங்கள் திறன், தீர்மானங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது உங்களுக்கே சந்தேகம் ஏற்படக்கூடும். ஆனால் விடாமுயற்சியும் நோக்கத்தில் சிதறாத கவனமும் இருக்கவேண்டியது அவசியம்,” என்றார்.
சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதிகள் செய்து கொடுத்து உதவியபோதுதான் தன் வாழ்க்கையில் மேற்கொண்டு பல உதவிகள் செய்யவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களிடம் எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்டுள்ளார். வேலை கிடைத்ததும் வருவோம் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.
இந்த பதில் வேலை வாய்ப்புக்கான போர்டல் தொடங்கும் யோசனையைத் தூண்டியுள்ளது. அதன்படி பணி வாய்ப்பு தேடுவோரையும் பணியமர்த்துவோரையும் இணைக்கும் தளத்தை உருவாக்க விரும்பினார்.
சோனுவின் வலைதளமான Pravasi Rojgar கட்டுமானம், மொபைல் பழுது பார்த்தல், டெய்லரிங், ஆட்டோ பழுது பார்த்தல், ஹெல்த்கேர் போன்ற பல்வேறு பிரிவுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவுகிறது.
“நாங்கள் Pravasi Rojgar அறிமுகப்படுத்தியபோது பணியமர்த்தும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஆர்வம் காட்டினார்கள். இன்று 1.5 லட்சம் பேர் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனங்களில் வேலையில் சேர உதவியுள்ளோம்,” என்கிறார் சோனு.
நம்மால் முடிந்த வகையில் குறைந்தபட்சம் ஒரே ஒரு நபரின் வாழ்க்கையை மேம்படுத்த உதவேண்டும் என்பதே டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் அவர் வலியுறுத்திய வெண்டுகோள் ஆகும்.