கொரோனா சூழலில் குறைந்த முதலீட்டில் துவங்கக் கூடிய 10 சிறு தொழில்கள்!
கொரோனா சூழலுக்கு மத்தியில், வளர்ச்சி கண்டு வரும் பத்து சிறு தொழில்கள் வருமாறு:
கொரோனா பெருந்தொற்று, இந்தியாவில் மட்டும் அல்லாது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் சரிவுக்கு உள்ளாகியிருந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் இந்த சூழலிலும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கண்டுள்ளன.
சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வுக்கு மத்தியில், முகக்கவசம், சானிடைசர், கையுரை ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளன. மாணவர்கள் வீட்டில் இருந்து பயில்வது, பலரும் திறன் வளர்ச்சி பாடதிட்டங்களில் சேர்வது காரணமாக, இணைய கல்வியும் வளர்ச்சி கண்டு வருகிறது.
கொரோனா சூழலுக்கு மத்தியில், வளர்ச்சி கண்டு வரும் பத்து சிறு தொழில்கள் வருமாறு:
முகக்கவசம்
வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம் அவசியம் என மருத்துவ உலகம் வலியுறுத்தியதை அடுத்து, முகக்கவசத்திற்கான தேவை விண்ணைத்தொட்டுள்ளது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள், ரூ.20,000 முதல் ரூ.30,000 முதலீட்டில் முகக்கவச உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த சரல் டிசைன்ஸ், சானிட்டரி நாபிக்ன்ஸ் இயந்திரத்தை முகக்கவசம் தயாரிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. இந்த இயந்திரம் நிமிடத்திற்கு 40 மூன்று அடுக்கு முகக் கவசங்களை தயாரிக்கிறது.
மருத்துவ பிபிஇ உடைகள்
கொரோனா தொற்றுக்கு நடுவே மருத்துவ உடைகள் அதாவது பிபிஇ உடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. பல வர்த்தகர்கள், பிபிஇ கிட் தயாரிப்புகள் வசதியை அமைத்துள்ளனர்.
பல ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி வசதியை மாற்றி அமைத்து, உள்ளூர் மற்றும் உலகத் தேவைக்கான பிபிஇ உடைகளைத் தயாரிக்கின்றன. இன்வெஸ்ட் இந்தியா தகவல்படி, தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் சந்தை உலக அளவில் சப்ளை சைனில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இதை ரூ.7,000 கோடி வாய்ப்புள்ள துறையாக பார்க்கிறது. இந்தியா தினமும், கையுறைகள், கண்ணாடிகள், பேஸ் ஷீல்ட்கள் உள்ளிட்ட 4.5 லட்சம் (பிபிஇ) தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்கிறது.
மருத்துவ கவுன் தயாரிப்பு வசதியை ரூ.40,000ல் நிறுவலாம்.
டிஸ்போசபில் கையுறை
மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் கையுறை அணிவது அவசியம். தொற்றை தடுப்பதில் கையுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. பயன்படுத்திய பின் தூக்கியெறியக் கூடிய கையுறைகளைத் தயாரிக்க லேடெக்ஸ், குளோரின் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேவை.
ரூ.50,000 வரை முதலீடு வேண்டும்.
சானிடைசர்
தொற்றுக்கு பிறகு சானிடைசருக்கான தேவை 100 மடங்கு அதிகரித்துள்ளது. பல நிறுவனங்கள் சானிடைசர் தயாரிப்பில் கவனம் செலுத்துகின்றன. அழகு சாதன நிறுவனங்கள், அக்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் என பல வகை நிறுவனங்கள் சானிடைசர் தயாரிப்பில் ஈடுடத் துவங்கியுள்ளன. இது பல தொழில்முனைவோருக்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
“தற்போதைய நெருக்கடியை மனதில் கொண்டு, ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் லிக்விடை, பிப்ரவரியில் உற்பத்தி செய்யத்துவங்கினோம். மார்ச் மாதம் முதல் விற்பனை துவங்கியது. 18 நாட்களில் கடந்த ஆண்டு விற்றுமுதலான ரூ. 6 கோடியை எட்டினோம். தற்போதைய சூழல் இத்தகைய தேவையை உண்டாக்கியுள்ளது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரி’ இடம் பேசிய போது, PeeSafe நிறுவனர் விகாஸ் பகாரியா கூறினார்.
சோப்
கொரோனா வைரசை கொல்லக்கூடிய முக்கியப் பொருளாக சோப் விளங்குகிறது. வைரசை அகற்ற, கைகளை 20 நொடிகள் கழுவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
பலரும், ரு,20,000 முதலீட்டில் வீட்டிலேயே சோப் உற்பத்தி வசதியை அமைத்து, மூலிகை சோப், ஆயுர்வேத சோப் போன்றவற்றை முயன்று வருகின்றனர்.
டிஷ்வாஷர்
பொதுமுடக்கக் காலத்தில் நுகர்வு பழக்க நிச்சயம் மாறியிருக்கிறது. பணியிழப்பு மற்றும் ஊதிய குறைப்பு சூழலில் பலரும், ரொக்கத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும், வீட்டு வேலைக்கு ஆள் இல்லாத நிலையில், வீட்டு வேலை சுமைகளை குறைப்பதற்கு இயந்திரங்கள் உதவி தேவைப்படுகிறது.
பாத்திரங்களைக் கழுவ உதவும் டிஷ்வாஷர் இயந்திரங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இவற்றை தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருந்தாலும், இந்த துறையில் ஸ்டார்ட் அப்களும் களமிறங்கி இந்திய சூழலுக்கு ஏற்ற இயந்திரங்களை தயாரிக்க முற்படுகின்றன.
டிஷ்யூ காகிதம்
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது, டிஷ்யூ காகிதம் மற்றும் டாய்லெட் காகிதங்கள் உடனே விற்று தீர்ந்தன. மேலும் மக்கள் இவற்றை வாங்கி கையிருப்பும் வைத்துக்கொண்டனர். எனவே உற்பத்தியாளர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.
சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு காரணமாகவும் தேவை அதிகரித்தது. உற்பத்தி பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு, டிஷ்யூ காகிதங்கள், டாய்லெட் காகிதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டன.
இந்த தொழிலை ரூ.20,000 முதல் 30,000 முதலீட்டில் துவங்கலாம்.
டிஸ்பென்சர்கள்
டச்லெஸ் டிஸ்பென்சர்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன. ஆனால், அவை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பலரும் ஒரே இடத்தில் தொடுவதை தவிர்க்க இப்போது டச்லெட் டிஸ்பென்சர்கள் அதிகம் நாடப்படுகின்றன. பல தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பல சிறுதொழில் நிறுவனங்களும் இந்த துறையில் தனியே அல்லது கூட்டு முயற்சி மூலம் இறங்கியுள்ளன.
பானிப்பட்டைச்சேர்ந்த ஸ்ரீ சக்தி நிறுவனமும் இவ்வாறு கொரோனாவுக் மத்தியில் புதுமையாக்க நிர்பந்தத்திற்கு உள்ளானது. சென்சார் சார்ந்த சானிடைசர்கள் முதல் கைகளால் தொட தேவையில்லாத கை கழுவும் அமைப்பு வரை பலவற்றை தயாரித்து வருகிறது.
நிறுவனம் அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 850க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் ஆட்குறைப்பை தவிர்த்துள்ள நிறுவனம் ரூ.1.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ஆயுர்வேதா ஸ்னேக்ஸ்
இந்திய ஆயுர்வேத மருத்துவம், இயற்கை சிகிச்சை மற்றும் நோய் எதிர்ப்பை வலுவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த மருத்துவ முறையை அடிப்படையாகக் கொண்ட, மூலிகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதில் பல தொழில்முனைவோர் கவனம் செலுத்தி வருகின்றனர். குறைந்த முதலீட்டில் இதை செய்யலாம்.
இணைய பயிற்சி
கொரோனா சூழலில் கல்வி நுட்பம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இணைய கல்வி அவசியத்தை பலரும் உணர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக, இணைய கல்விக்கு உதவும் சேவைகளின் தேவை அதிகரித்துள்ளது. இணைய பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் பயிலறங்குகளும் முக்கிய வாய்ப்புகளாக அமைந்துள்ளன.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர்சிம்மன்