'தீவிரவாதம் நம் அன்பை முறிக்கக்கூடாது' - தேவாலயத்துக்கு நடைப்பயணம் சென்ற இஸ்லாமியர்கள்!
கடந்த வாரம் இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் உலகையே அதிர வைத்தது. ஈஸ்டர் நாள் அன்று கிறிஸ்துவர்கள் கூடும் தேவாலையங்கள், பொது இடங்களில் தீவிரவாதிகள் ஏற்படுத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல் 300க்கும் மேலான உயிரை மாய்த்தது. இதனைத் தொடர்ந்து உலகளவில் பல எதிர்ப்பு வந்தது முக்கியமாக இஸ்லாமியர்களை எதிர்த்து.
இலங்கையில் நடந்த தாக்குதல் முஸ்லாம் தீவிரவாதிகளால் நடத்தப்படுவதாக செய்திகள் வந்ததால் பொதுவாக அம்மக்களை நோக்கிய கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால் தாங்களும் உலக அமைதிக்காகக் குரல் கொடுப்பவர்களே என்று உணர்த்தும் வகையில் முஸ்லிம் சமுதாய மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சிலர் செய்யும் இந்த கொடூரச் செயலை தாங்கள் ஒருபோதும் ஆமோதிக்கவில்லை என்றும் கூறினர்.
இலங்கை தாக்குதலுக்கு தங்கள் வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் முஸ்லீம்கள் தேவாலயங்களை நோக்கி அமைதி நடை நடந்தினர். மலேசியா, ஹைதராபாதை தொடர்ந்து சென்னை அண்ணா நகர் முஸ்லீம்கள் ஜாவத்தின் மசூதியில் இருந்து அண்ணா நகர் புனித லூக்ஸ் தேவாலயத்தை நோக்கி அமைதியாக நடந்து சென்று தங்கள் வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த இஸ்லாம் மக்கள் சிலர்.
தங்கள் கையில் “தீவிரவாதம் நம் அன்பை முறிக்கக் கூடாது” என்ற பலகையை கையில் ஏந்திச் சென்றனர். கிறிஸ்த்துவர்கள் அதிகம் கூடும் ஞாயிறு அன்று 100க்கும் மேலான இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் மசூதியில் இருந்து பலகைகளை ஏந்தி தேவாலயம் வரை நடைப் பயணம் மேற்கொண்டனர்.
இவர்களை பரந்த மனதுடன் புனித லூக்ஸ் தேவாலயமும் வரவேற்று அவர்களை உள்ளே அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து மஸ்ஜித் ஜாவத்தின் செயலாளர் மற்றும் நீதிபதியுமான இப்ராஹீம் கலிஃபுல்லா கிறிஸ்துவ மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
முஸ்லிம்கள் அமைதியை நாடுவதாகவும், தாக்குதலுக்கு தாங்கள் வருந்துவதாகவும் தெரிவித்தார். இந்தத் தீவிரவாதத் தாக்குதல் தங்களின் சகோதரத்துவத்தை முறித்து விடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மதங்களைத் தாண்டி இருசார் மக்களும் ஒரு சேர அன்போடு இருந்தது மனதை நெகிழ வைத்துவிட்டது. இச்சம்பவத்தை அங்கிருந்த கிறிஸ்துவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர அது வைரலாக வலம் வந்தது.
அன்புக்கும் சகோதரத்துவத்துக்கும் எதுவும் தடையில்லை என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. வன்முறையை விட அன்பே வெல்லும்!