இந்தியாவில் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் நிறுவனம்!
மும்பையைச் சேர்ந்த Zigitza Healthcare இந்தியாவில் அவசர கால மருத்துவ சேவையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. 16 மாநிலங்களில் 108 மற்றும் 1298 ஆம்புலன்ஸ் சேவைகளை நிர்வகிக்கும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் விரிவடைய விரும்புகிறது.
ஷஃபி மாத்தருக்கு அன்றிரவு கடினமாகவே கழிந்தது. அவரது அம்மாவிற்கு தீவிர சுவாச பிரச்சனை ஏற்பட்டது. மன அழுத்தத்தில் இருந்த குடும்பத்தினரால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸைக் கண்டறிய முடியவில்லை. எப்படியோ நிலைமையை சமாளித்து சரியான நேரத்தில் மருத்துவமனையைச் சென்றடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் இதே போன்ற சம்பவம் நடந்தது. ரவிகிருஷ்ணாவின் அம்மா திடீரென்று நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். சில நிமிடங்களுக்குள்ளாகவே 911 வந்தடைந்தது. மருத்துவ உதவி அளித்து உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.
இந்த நண்பர்கள் இருவரும் அவர்கள் சந்தித்த சூழல் குறித்து கலந்துரையாடினர். இரு சூழல்களிலும் இருந்த வேறுபாட்டைக் கவனித்தனர். அவசர கால மருத்துவ சேவைகள் கிடைக்கப்படும் விதமும் அணுகப்படும் விதமும் மாறுபட்டிருந்தது. 2005-ம் ஆண்டில் இந்தியாவில் உடனடி அவசர கால சேவைக்கான தேவை இருப்பது தெளிவானது.
இருவரும் இது குறித்து ஆழமாக ஆராய்ந்த பிறகு Zigitza Healthcare Limited (ZHL) தொடங்க தீர்மானித்தனர். அமெரிக்காவில் உள்ள 911 சேவை மற்றும் யூகே-வில் உள்ள 999 சேவைகளுக்கு இணையாக சிறந்த சேவையை வழங்கவேண்டும் என்பதே இவர்களது நோக்கம். ரவியும் ஷஃபியும் இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்த தங்களது நண்பர்களான மனீஷ் சஷேட்டி, நரேஷ் ஜெயின், ஸ்வேதா மங்கல் ஆகியோரை இணைத்துக்கொண்டனர். அனைவரும் ஒன்றிணைந்து நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
இன்று Zigitza (108 மற்றும் 1298) நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஆம்புலன்ஸ் சேவையளிக்கும் நிறுவனமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், அவசர மருத்துவ தேவை இருப்போர் போன்றோருக்கு மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு சேவையை தரமான விதத்தில் வழங்குவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்துகிறது. ஈஎம்எஸ் வாயிலாக சரியான நேரத்தில் உதவுவதற்காக இவர்கள் பல்வேறு மாநில அரசாங்கங்களுடன் இணக்கமாக பணியாற்றுகின்றனர்.
இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 10,000-க்கும் அதிகமான ஊழியர்களுடன் விரிவடைந்துள்ளது. மூன்று சேவை மாதிரிகளின்கீழ் 16 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. ரவியும் ஷஃபியும் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.
”நாங்கள் ஆம்புலன்ஸில் ஜிபிஎஸ் ட்ராக்கிங் அமைப்பைப் பொறுத்தி முன்னோடியாக செயல்பட்டுள்ளோம். நாடு முழுவதும் ஒரு லட்சம் EMT-க்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். Zigitza தற்போது மத்தியபிரதேசம் (பல்வேறு ஆம்புலன்ஸ் சேவைகளை 108-ன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் மாநிலம்), பஞ்சாப் (பஞ்சாபில் இரண்டாவது பருவம்), ஒடிசா (இரண்டாவது பருவம்), ஜார்கண்ட், சிக்கிம் ஆகிய பகுதிகளில் பொது-தனியார் கூட்டுறவு (பிபிபி) சார்ந்த மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் அவசர கால மருத்துவ சேவைகளை நிர்வகித்து வருகிறது,” என்றார் மனீஷ்.
ஆரம்ப நாட்கள்
இக்குழுவினர் முதல் வருடத்தில் 8 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டினர். 2019 நிதியாண்டில் 450 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளது. Ziqitza Healthcare 2005-ம் ஆண்டு 10 ஆம்புலன்ஸ்களுடனும் ஆரம்ப முதலீடு இரண்டு கோடி ரூபாயுடனும் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஆம்புலன்ஸ் எண்ணிக்கையும் 3,300-ஆக அதிகரித்துள்ளது.
”நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான தேவை இருப்பதை உணர்ந்த நாங்கள் ஐந்து பேர் 2005-ம் ஆண்டு செயல்பாடுகளைத் தொடங்கினோம். 10 ஆம்புலன்ஸ்களுடன் சுயநிதியில் இயங்கினோம். நாங்கள் வளர்ச்சியடைகையில் முதலீட்டாளர் சமூகம் எங்களது செயல்பாடுகளில் ஆர்வம் காட்டியது. Acumen Funds, True North, IDFC Bank போன்றோரிடம் முதலீடு பெற்றோம். இது எங்களது வளர்ச்சிக்கு உதவியது. இந்த நிலையில் எங்களது செயல்பாடுகளை விரிவடையச் செய்ய மற்றொரு சுற்று நிதியை எதிர்நோக்கியுள்ளோம்,” என்றார் மனீஷ்.
இந்தியா முழுவதும் 1.6 கோடி பேருக்கும் மேலாக சேவையளித்துள்ளதாகவும் 44 லட்சம் கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
Acumen Fund, HDFC, IDFC, Indian Value Fund Advisors Pvt Ltd போன்றோர் Zigitza Healthcare நிறுவனத்துடன் தற்போது இணைந்துள்ள முதலீட்டாளர்களாகும்.
சவால்களை எதிர்கொள்ளுதல்
2005-ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஹெல்ப்லைனையும் ஈஎம்எஸ் சிஸ்டத்தையும் அமைப்பது கடினமாக இருந்தது. ஆரம்ப நாட்கள் குறித்து நிறுவனத்தின் சிஎஃப்ஓ மனீஷ் கூறும்போது,
“ஒருங்கிணைக்கப்பட்ட ஹெல்ப்லைன் எண் இல்லாதது இந்தியாவில் இத்தகைய சேவையை வழங்குவதில் முக்கிய சவாலாக இருந்தது. அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும்போது மக்கள் அழைக்க வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு தொலைபேசி எண்கள் இருந்தது. இதில் சில எண்கள் பத்து இலக்கங்கள் வரை கொண்டிருந்ததால் நினைவில் நிறுத்துவது கடினமாக இருந்தது,” என்றார்.
ஒருங்கிணைக்கப்பட்ட சேவையை அமைப்பது மட்டுமின்றி ஹெல்ப்லைன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றொரு முக்கிய சவாலாக இருந்தது. மாநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்க இக்குழுவினர் மத்தியப்பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டனர். மற்ற மாநில அரசாங்கங்களும் இந்த முறையைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வகைகளில் இக்குழுவினர் அவுட்ரீச் திட்டங்களை ஏற்பாடு செய்தனர். அத்துடன் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கான டயல் 108 சேவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர் ப்ரோக்ராம்களையும் (FRP) ஏற்பாடு செய்தனர்.
”நாங்கள் கடந்த 13 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் மூன்று லட்சம் பேருக்கு பயிற்சியளித்துள்ளோம்,” என்றார்.
டயல் 1298
இது கட்டண அடிப்படையில் வழங்கப்படும் சேவை ஆகும். தற்போது எட்டு மாநிலங்களில் குறுக்கு மானிய மாதிரியில் செயல்படுகிறது. ZHL ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் கட்டணம் செலுத்தும் மாதிரியில் 1298 என்கிற ஹெல்ப்லைன் எண்ணின்கீழ் 15 ஆம்புலன்ஸ்களை இயக்குகிறது. இந்த ஆம்புலன்ஸ்களில் டிஃபிப்ரிலேட்டர்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர், எலக்ட்ரோகார்டியோகிராஃபி கருவி உள்ளிட்ட நவீன உயிர் காக்கும் உபகரணங்கள் இருக்கும். இவை மிகவும் நெருக்கடியான சமயத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்பு நோயாளியின் நிலைமையை சீராக்கி ஆபத்துகளை குறைத்து உயிர் காக்க உதவும்.
ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தும் பயனாளி தேர்வு செய்யும் மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் ZHL ராஜஸ்தானில் அவுட்சோர்ஸிங் சேவையை வழங்குகிறது. தற்சமயம் இதன்கீழ் 28 ஆம்புலன்ஸ்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ
டயல் 108
இந்த இலவச அவசர மருத்துவச் சேவை மாநில அரசாங்கங்களுடனான பொது-தனியார் கூட்டு மாதிரியின்கீழ் செயல்படுகிறது.
”ZHL தற்சமயம் மும்பை, பீஹார், கேரளா, பஞ்சாப், ஒடிசா, ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் 3,300-க்கும் அதிகமான ஆம்புலஸ்களை இயக்கி வருகிறது. 9,000-க்கும் அதிகமானோர் அயராது உழைத்து இதுவரை 16 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சேவையளித்துள்ளனர்,” என்றார் மனீஷ்.
இதுமட்டுமின்றி இந்நிறுவனம் 102 ஹெல்ப்லைன் சேவைகளையும் ஒடிசாவில் வழங்குகிறது. இது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்வாய்பட்ட குழந்தைகளுக்கான ரெஃப்ரல் ட்ரான்ஸ்போர்ட் சேவை ஆகும். மேலும் 104 மருத்துவத் தொலைபேசி சேவை, சுகாதார கொள்கைகள் குறித்த விவரங்கள், குறை தீர்க்கும் வழிமுறை, தாய் சேய் தொடர் ஆய்வு திட்டத்திற்கான தரவுகள் சரிபார்த்தல் போன்றவற்றை வழங்கி சுகாதார பணியாளர்களுக்கு உதவுகிறது.
செலவுகள்
தற்போது ஓட்டுநர்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை வல்லுனர்களுக்கு (EMTs) வழங்கப்படும் சம்பளம் (40 முதல் 50 சதவீதம்), எரிபொருள் (25-30 சதவீதம்), பழுதுபார்த்தல் (5-7 சதவீதம்) உள்ளிட்டவை செலவுகளில் அடங்கும். நிர்வாகம் மற்றும் குழு தலைவர்களின் சம்பளம் ஐந்து சதவீதம். கால் செண்டர் செயல்பாடுகள் மற்றும் அலுவலக ஊழியர்களின் சம்பளம் மொத்தமாக ஐந்து சதவீதம் ஆகும்.
தற்சமயம் ஹைதராபாத்தின் GVK-EMRI மற்றும் புனேவின் BVG ஆகிய நிறுவனங்கள் ZHL போட்டியாளர்கள் ஆகும்.
”இந்தியாவின் 16 மாநிலங்களில் மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய சேவையளிப்பதில் அதிக அனுபவம்கொண்டவர்கள் நாங்கள் மட்டுமே. கார்ப்பரேட் மற்றும் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் தேவைகளுக்கு சேவையளிப்பதில் எங்களுக்குள்ள நிபுணத்துவமும் பல முன்னேற்றங்களில் முன்னோடியாகத் திகழ்வதும் போட்டியாளர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்றார் மனீஷ்.
எதிர்காலத் திட்டங்கள்
இந்நிறுவனம் வருவாயைப் பொறுத்தவரை அடுத்து வரும் ஐந்து முதல் பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 25 சதவீதம் வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 3300-க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்களை இயக்கும் அனுபவத்தையும் ஒவ்வொரு பகுதியைக் குறித்த புரிதலையும் கொண்டு நாடு முழுவதும் செயல்பாடுகளை விரிவடையச் செய்ய இக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்டார்ட் அப் PE முதலீட்டாளர்களிடமிருந்து 40 மில்லியன் டாலர் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 25 மில்லியன் டாலர் உள்நாட்டு விரிவாக்கப் பணிகளுக்கும் 15 மில்லியன் டாலர் அந்நிய நாட்டு விரிவாக்கப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இதற்கு முன்பு ZHL 2007-ம் ஆண்டும் 2010-ம் ஆண்டும் இரண்டு சுற்று நிதி திரட்டியுள்ளது. இதன் ஒட்டுமொத்த தொகை 4.5 மில்லியன் டாலர் ஆகும்.
”வருங்காலத்தில் யூஏஈ மற்றும் ஆப்ரிக்காவில் எங்களது சேவைகளை அதிகப்படுத்த விரும்புகிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் எங்களது வருவாயை நான்கு மடங்கு அதிகரிக்கச்செய்ய விரும்புகிறோம். அத்துடன் 108 மற்றும் 1033 பிரிவில் (தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் மீட்புப் பணிகள்) எங்களது செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யவும் விரும்புகிறோம்.
அடுத்த ஐந்தாண்டுகளில் பல்வேறு வணிக மாதிரிகளில் 8,000 யூனிட்களுடன் எங்களது சேவைகளை விரிவுபடுத்தவும் விரும்புகிறோம். மேலும் கார்ப்பரேட், விளையாட்டு, நிகழ்வுகள், எண்ணெய் சுரங்கம், கட்டுமானத் தொழிற்சாலைகள் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸிங் சேவைகளை விரிவடையச் செய்யவும் விரும்புகிறோம்,” என்றார் மனீஷ்.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: ஸ்ரீவித்யா