சபரிமலையில் பெண்கள் வழிபடுவதை எதிர்த்த போராட்டக்காரர்களை எதிர்த்து நின்று கர்ஜித்த நிஜ உலக சிங்கம்!
சபரிமலையில் இரண்டு பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததை எதிர்த்து கேரளாவில் நடைபெற்ற தீவிர போராட்டங்களை அடுத்து போலீஸார் ஒருவர் போராட்டக்காரர்களை எதிர்த்து வன்முறையைத் தடுத்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.
சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி வெளியானது. அன்று முதல் கேரளா போராட்டக் களமாகவே மாறி வருகிறது. இந்தப் புனித தலத்திற்குச் செல்ல முற்படும் பெண் பக்தர்களுக்காக இந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு போலீஸ் ஒருவர் மாநில பேருந்தை சேதப்படுத்த முயன்ற போராட்டக்காரர்களை துணிச்சலுடன் எச்சரித்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நிஜ உலகின் சிங்கம் என்று பாராட்டுகளை பெற்ற அந்த நபர் மோகன் ஐயர். இவர் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே பணி நியமனம் செய்யப்பட்டு உதவி ஆய்வாளராக உள்ளார். இவர் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடாமல் துணிச்சலுடன் எதிர்த்துள்ளார். அந்த வீடியோவில்,
“உங்களில் யாருக்காவது துணிச்சல் இருந்தால் வாகனத்தை தொட்டுப்பாருங்கள்,” என்று சொல்வதைக் கேட்க முடியும்.
சமீபத்தில் பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர். இதனை எதிர்த்து பல போராட்டக்காரர்கள் பொதுப் போக்குவரத்து வாகனங்களைத் தாக்கினர். அத்துடன் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தினர்.
நியூஸ்18 உடனான நேர்காணலில் உதவி ஆய்வாளர் மோகன் ஐயர் கூறுகையில்,
"முதலில் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை. போராட்டக்காரர்கள் பேருந்தின் மீது கல் எறிவதாகவும் ஓட்டுனரை தாக்குவதாகவும் மிரட்டினர். எனவே எங்கள் பகுதியில் பேசும் பாணியில் பேசினேன். இது போல் நடப்பது வாடிக்கைதான். உடனே போராட்டக்காரர்களை கலைந்து சென்றனர்,” என்றார்.
மோகன் ஐயரின் துணிகர செயலுக்காக கேரள மாநில போக்குவரத்து கழக (KSRTC) நிர்வாக இயக்குனர் தச்சனகரி அவரைப் பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கியதாக ’ஒன் இண்டியா’ தெரிவிக்கிறது.
கட்டுரை : THINK CHANGE INDIA