ஒரு தென்றல் புயலாகி கோடிகளைக் குவிக்கும் ஷைனீல்!
அப்பா பேச்சை மீறி வேலையை விட்ட ஷைனீல், பல சவால்கள், நஷ்டங்களைத் தாண்டி கோடி ரூபாய் மதிப்பு நிறுவனம் நிறுவிய கதை!
தனது முயற்சியில் பல நெருக்கடிகள் சந்தித்த போதிலும், ஷைனீல் டில்வானி 2016ஆம் ஆண்டு 'தி ஹவுஸ் ஆஃப் ஆர்ட்டிசன்ஸ்' (THOR) என்ற தனது நிறுவனத்தைத் தொடங்கினார். 12,000 ரூபாய் முதலீட்டுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் கொண்ட நிலையில், வருடத்திற்கு 2 கோடிக்கு மேல் வருவாய் பதிவு செய்கிறது.
ஷைனீலுக்கு பள்ளி பருவத்திலிருந்தே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் அவரது தந்தையோ பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் படித்துவிட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறியவர். அவர் தன் மகளும் தன்னைப் போலவே வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் தந்தையின் ஆசைபடி அவர் மும்பையின் நார்சீ மோஞ்சீ கல்லூரியில் மேலாண்மை படிப்பில் சேர்ந்தார்.
ஆனால் தொழில் மீது உள்ள ஆசையினால் படிக்கும் போதே ஆடம்பர சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்புக்கான பொருட்களை விற்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20. கல்லூரி படிப்பை முடித்து தன் தந்தையின் ஆசைக்காக மேல் படிப்பு படித்துவிட்டு ஆடை உற்பத்தி நிறுவனமான அர்விந்தில் 2015ல் வேலைக்கு சேர்ந்தார் ஷைனீல்.
சொந்தத் தொழில் துவங்கும் ஆசையினை விடாமல், அவர் வேலைக்கு செல்லும்போதே சொந்த தயாரிப்புகளை ‘ஷைனீல்’ என்ற பெயரிலேயே விற்பதையும் தொடர்ந்தார். வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதும் அவர் அர்விந்திலிருந்து வேலையை விட்டு வெளியேறினார். அவர் தந்தையின் அறிவுரைகளை மீறி அவர் வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழிலில் முழு நேரமாக இறங்கினார்.
ஆரம்பத் தடங்கல்கள்
4 மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய அளவுக்கு சேமிப்பு இருந்தவுடன் ஷைனீல் தனது வேலையை ராஜினாமா செய்தார். ஆனால் விதி அவரின் வாழ்க்கையில் விளையாடி, நாளொன்றுக்கு 20 ஆர்டர்கள் விற்றுக்கொண்டிருந்ததிலிருந்து மாதம் ஒன்றுக்கு 20 ஆர்டர்கள் விற்கத் தொடங்கினார். இந்த நிலை அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடித்தது.
அந்த கடினமான காலத்தை நினைவு கூருகையில்,
“நான் எப்பொழுதும் சோகமாகவே இருப்பேன். மனநல புத்தகங்கள் நிறைய வாங்கிப் படித்தும் பயனில்லை. ஒரு வேளை என் பெற்றோரை மீறி நான் வேலையை விட்டதன் பலனோ என்று நானே என்னைக் கடிந்து கொள்வேன்,” என்று கூறுகிறார் ஷைனீல்.
அவரது மனதை மாற்ற அன்றைய காதலன் (இன்றைய கணவர் மற்றும் தொழிலில் பார்ட்னர்) வருண் அரோரா, மலைகளுக்கு அவரைக் கூட்டிச் சென்றார். அவர்கள் அந்த விடுமுறையில் தங்கியிருந்த இடம் தரம்சாலாவின் அரண்மனையில். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாட்களில் அந்த அரண்மனையின் முன்னாள் மஹாராஜாவை சந்தித்தார். ஷைனீலின் தயாரிப்புகள் மீது ஆர்வம் காட்டிய மஹாராஜா, அவரிடமிருந்து சில மாதிரிகளைப் பெற்றார். இரண்டு வாரங்கள் கழித்து ஷைனீலுக்கு மஹாராஜாவின் மருமகனின் திருமணத்திற்கு பொருட்கள் தயாரிக்கும்படி ஆர்டர்கள் வந்த்து.
“அதன் பிறகு வரிசையாக பல அரண்மனை திருமணங்களுக்கு பிரத்யேகமாக தனிப்பட்ட முறையில் பொருட்கள் தயாரித்தேன். படிப்படியாக எனது வாடிக்கையாளர் பட்டியலில் 17 அரசக் குடும்பங்கள் சேர்ந்தன. எனது ஆடம்பர அழகு எண்ணையில் 24 காரெட் தங்கம் உள்ளது. எண்ணெய் பேக் செய்யப்பட்ட அட்டையிலும் 24 காரெட் தங்கம் இருந்தது உச்சக்கட்ட ஆடம்பரம்,” என்கிறார் ஷைனீல்.
டியோர், எஸ்டே லாடெர் மற்றும் குச்சி போன்ற சர்வதேச பிராண்டுகளும் ஆடம்பர பொருட்களை தயாரித்தாலும் அவை ’ரசாயனம்’ கலந்தே வரும். ஆனால் இவரின் தயாரிப்புகள் அனைத்தும் முற்றிலும் இயற்கையானவை, அதுதான் அரசக் குடும்பங்களிடையே இந்த தயாரிப்புகளின் மவுசை பெருக்கியது.
“ஒவ்வொரு பொருளும் தனித்துவம் வாய்ந்தது. நான் ஒரே மாதிரியான பொருட்களை தயாரிக்காமல் ஒருத்தருக்கு ஒன்று என தயாரித்தேன். அதனால் அவை விலை உயர்ந்த்தாகவே இருந்தது.” என்கிறார்.
அந்த மாதிரிப் பொருட்களுக்கு ஷைனீல் 100 சதவிதம் முன் பணம் பெற்று தான் வேலை துவங்குகிறார். அரசக் குடும்பளுக்கு மட்டுமே செய்த பொருட்களை பொது மக்களுக்கும் கொண்டு சேர்க்க அவர் அக்டோபர் 2016ல் இந்த வியாபாரத்தை இணையதளத்திற்கு கொண்டு செல்ல ஆசைப்பட்டார். ஆனால் அந்த முடிவை அரசக் குடும்பத்தினர் வரவேற்கவில்லை.
“அவர்களுக்கென தனிப்பட்ட பொருட்கள் தயாரித்து தருவதாக வாக்குக் கொடுத்த போதிலும், வலை தளத்தை பாதுகாத்து வைத்திருந்த போதிலும், அரசக் குடும்பத்தினரிடம் எந்த மனமாற்றமும் இல்லை. அதனால் வியாபாரத்தை மேலும் தொடர முடியாமல் போய்விட்டது.”
திருப்புமுனை
ஆரம்பித்த வியாபாரம் சரியாக போகாமல் போக, வேறு தொழில் ஏதேனும் ஆரம்பிக்க யோசித்து கொண்டிருந்த போது, மும்பை விமான நிலையத்தில் டபுல்யூ எச் ஸ்மித் கடையில் செதுக்கப்பட்ட யானை ஒன்றை கண்டார். அந்த யானையின் விலை ரூபாய் 2000 முதல் ரூபாய் 4000 விற்றன. அதே போல் ஒரு யானையை அவர் சரும மற்றும் முடி பராமரிப்புப் பொருட்களை பேக் செய்யும் ஒரு மர கைத்தொழிலாளியின் வீட்டில் கண்டது நினைவுக்கு வந்தது.
அவை ஒன்று 22 ரூபாய்க்கு அவர்களிடமிருந்து வாங்கப்படுவதாக அந்த கைத்தொழிலாளி கூறினார். ஷைனீல் அவரை அதே போல் ஆறு யானைகள் செதுக்கக் கேட்டு அதை தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து கருத்துகளை கோரினார்.
அவர்கள் கொடுத்த விமர்சனம் மிகவும் சிறப்பாக இருந்ததன் காரணமாக, ஷைனீலின் தற்போதைய நிறுவனம் “தி ஹவுஸ் ஆப் ஆர்டிசன்ஸ் (The house of Artisans) 2016ல் பிறந்தது. தனது சொந்த முதலீட்டான ரூபாய் 12,000 கொண்டு துவங்கி, இன்று 2 கோடிக்கும் மேல் வருவாய் வரும் அளவுக்கு பெருகி, மரத்தில் செதுக்கப்பட்ட சேகரிப்புகள் தவிர மற்றவைகளும் விற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது இவரது நிறுவனம். வாடிக்கையாளர்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் தனது தயாரிப்புகளை விற்கிறது.
“எனது தயாரிப்புகளை பேக்கேஜ் செய்ய நான் கைத்தொழிலாலர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டேன், ஏனெனில் பெரும்பாலான சப்ளையர்கள் இது போன்ற சிறிய அளவில் மாற்றங்கள் செய்வதில்லை,” என்கிறார் ஷைனீல்.
கைத்தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க ஷைனீல் பல கிராமங்களுக்கும் பல நகரங்களுக்கும் சென்றார் 18 மாதங்களுக்கு. ஸ்பெயின், ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா, யூ ஏ ஈ, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள சிறப்பு கடைகள் மற்றும் உணவகங்களுடன் தொடர்பு கொண்டார். அவர்களுக்கும் மரம், முத்து, ஆடை, உலோகம் மற்றும் பீங்கானால் ஆன பொருட்களை வினியோகிக்க ஆரம்பித்தார்.
தொடங்கிய ஆறே மாதத்தில், THOA தனது முதலீட்டை திரும்ப எடுத்துவிட்டு, ஒரே வருடத்திற்குள் லாபம் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டது. தற்போது பெரும்பாலான வியாபாரம் வெளிநாட்டிலிருந்து வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.
குருகிராமில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாது நேபால் மற்றும் துனீசியாவில் உள்ள கைவினைத்தொழிலாளர்களுடனும் இணைந்து செயல்படுகிறது.
“துனீசியா, உலகிலேயே மிகக் கடினமான ஆலிவ் மரத்திற்கு பெயர் பெற்றது. ஆலிவ் எண்ணை வாசனையுடன் இருக்கும் அந்த மரத்தை பதப்படுத்தத் தேவையில்லை. நேபால் மூங்கில் நெசவுக்கு பெயர் பெற்றது. ஆதலால் இதை நாங்கள் அந்தந்த ஊர்களிலிருந்தே வாங்குகிறோம்., என்கிறார் ஷைனீல்.
தனித்துவம்
THOA-ன் தனித்துவம் அதில் இருக்கும் குறைபாடுகள், என்கிறார் ஷைனீல்.
“எங்களின் தயாரிப்புகளில் இரண்டு அம்சங்கள் மேலோங்கி இருக்கின்றன. அவை அனைத்தும் கைத்தொழிலாளர்களால் செய்யப்பட்டவை, அவை அனைத்திலும் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். அது தான் எங்கள் அடையாளம்,” என்கிறார்.
அவரது நிறுவனம் குறிப்பாக எந்த ஒரு தொகுப்பிலும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்கிறார். “வீட்டு அலங்காரம், சமையல் மற்றும் உண்ணும் அறை, தனிப்பட்ட அணிகலன்கள் மற்றும் பிரத்தியேக தயாரிப்புகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். கையினால் செய்யப்பட்தாக இருக்க வேண்டும், இயற்கையில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் ஏதேனும் ஒரு குறைபாடுடன் இருக்க வேண்டும், இவை தான் எங்களின் விதி. ஆகையால் எங்கள் தயாரிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கிறது.”
அவரது நிறுவனத்தின் மற்றுமொரு தனி அம்சம் என்னவென்றால் அவருடன் தொடர்புள்ள அனைத்து கைத்தொழிலாளர்களும் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அதற்கும் ஒரு பின்-கதை உள்ளது. முதலில் ஷைனீல் இந்த கைத்தொழிலாலர்களை தனது நிறுவனத்திற்கு வேலை செய்ய அணுகிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்களுக்கு மூன்று மடங்கு பணம் கொடுத்த போதிலும் அவர்கள் ஷைனீலுடன் வேலை செய்ய வரவில்லை.
“எங்களுக்கு சேட்டு தினமும் வேலைத் தருகிறார். ஒரு நாள் நீங்கள் எங்களை விட்டுவிட்டால் அந்த சேட் எங்களுக்கு மறுபடியும் வேலை தர மாட்டார் என்றார்கள்.”
அப்போது தான் அவர்களுக்கு சம்பளம் தருவது பற்றி ஷைனீல் முடிவு செய்தார். அவர்களுக்கு மாதம் முழுக்க வேலை இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களுக்கு சம்பளம் உறுதியாகக் கொடுக்கப்படும். மாதம் ரூபாய் 5000 முதல் ரூபாய் 25000 வரை அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படும். இவ்வாறு அறிவித்தவுடன் இரண்டு கைத்தொழிலாளர்கள் அவருடன் வேலை செய்ய முன்வந்தனர்.
இன்று அவருடன் 22 கைத்தொழிலாளர்கள் தவிர எட்டு பேர் கொண்ட குழு இணைய தளத்தில் விற்பது, கணக்கெப்பு, வியாபாரத்தை பெருக்குதல், தேவைக்கு ஏற்ப பொருட்களை பெருக்குதல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பணிபுரிகிறது.
2018ஆம் ஆண்டில் ஷைனீலின் கணவர் வருண், மஹிந்திரா காம்விவாவில் இருந்து தனது வேலையை விட்டுவிட்டு மனைவியுடன் தொழிலில் சேர்ந்து விட்டார்.
எதிர்காலம்
“குறைபாடுகளின் மதிப்பு அறிந்து அதைக் கொண்டாடி, மற்றவர்களிடமும் அதை எடுத்துச் சொல்லும் ஒரே எண்ணம் கொண்ட ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் ஷைனீலின் நோக்கம். எதிர்காலத்தில் மக்கள் வந்து அந்த தயாரிப்புகளை உணர்ந்து அதை கைத்தொழிலாளர்களிடம் கற்றுக் கொள்ளும் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது ஷைனீலின் கனவு.
மேலும் சமகால ‘நகர்புற’ கைத்தொழிலாளர்களையும் ஈடுபடுத்த திட்டம் வைத்துள்ளார். அதனால் புதிய வடிவங்கள் மற்றும் புதிய எண்ணங்கள் உருவாக்க முடியும் என்கிறார்.
ஆங்கிலத்தில்: ரமார்கோ | தமிழில் : கெளதம் தவமணி