இந்திய விண்வெளி வீராங்கனை ஆகத் துடிக்கும் தேனி உதய கீர்த்திகாவிற்கு உங்கள் உதவி தேவை!
இதுவரை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களே விண்ணுக்கு சென்றுள்ள நிலையில், வருங்காலத்தில் முதல் இந்திய விண்வெளி வீராங்கனை என்று வரலாற்றில் தடம்பதித்திட முயன்றுவருகிறார் வான்மகள் உதயகீர்த்திகா.
தேநீர் கடையில் அமர்ந்து தினசரி நாளிதழில் வாசித்த ஒரு சாதனையாளரது வாழ்க்கையோ, பேருந்தில் பயணித்த சகபயணி பயணத்தின் சலிப்பைக் குறைக்க பேசிக் கொண்டே வந்த ஒரு வெற்றியாளரின் உத்வேக கதையோ, யூ டியூப்பில் பார்த்த தொழில்முனைவரின் ஊக்கமிகு பேச்சோ...! உங்களை என்னச் செய்திடும்? ஒருமணி நேர எதிர்காலச் சிந்தனையை நோக்கி மனதை செலுத்திட வைக்கும். பிறகு..? வழக்கமான, அன்றாட வாழ்வுக்குள் மூழ்கடித்து போவீர்கள்.
ஆனால், பள்ளியில் சுனிதா வில்லியம்ஸ் பற்றி படித்த ஒரு பாடம் ஏற்படுத்திய தாக்கத்தினால் அவரைப் போலவே தானும் விண்ணில் பறப்பேன் என்ற இலக்கை ஆழ்மனதில் பதித்து கொண்டுள்ளார் உதயகீர்த்திகா. அப்போது அவருக்கு வயதோ 14.
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரன் - அமுதா தம்பதியரின் ஒரே மகள் உதய கீர்த்திகா. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் தான். எனினும், தோளில் மகளை மட்டுமின்றி அவரது கனவையும் சுமந்து, விண்வெளி நோக்கிய பயணத்திற்கான வழிதடத்தில் சிறுமுட்கள், கற்கள் ஏதுமற்ற பாதையை அமைத்து கொடுத்து வருகின்றனர். அதில், உதய கீர்த்திகா முக்கால் பயணத்துக்கும், முழுப் பயணத்துக்கும் இடையேயான இடத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார்.
உக்ரைனில் ‘ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங்’ என்ற பட்டப்படிப்பு முடித்து, விண்வெளி வீரர்களுக்கான பத்துவிதமான கடினமானப் பயிற்சிகளை முடித்து, இறுதியாய் பைலட் பயிற்சியினை மேற்கொள்ள நிதியின்றி உள்ளார். இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே விண்ணுக்கு சென்றுள்ள நிலையில், வருங்காலத்தில் முதல் இந்திய விண்வெளி வீராங்கனை என்று வரலாற்றில் தடம்பதித்திட முயன்றுவருகிறார் வான்மகள் உதயகீர்த்திகா.
கீர்த்திகாவின் வெற்றி இந்த தேசத்திற்கான வெற்றி. அதையும் தாண்டி அடுத்த தலைமுறைக்கான துவக்கம். சிற்றுாரிலிருந்து சிறகு முளைத்து பறக்கக் காத்திருக்கும் எதிர்கால சந்ததியினருக்கான தடயங்களை உருவாக்கியுள்ளார்.
விண்வெளி கனவு, உக்ரைனின் தனிமையான நாட்கள், இதயத்துடிப்பை நிறுத்த செய்யும் சாகச பயிற்சிகள் என அவர் கடந்து வந்த பாதையினை யுவர்ஸ்டோரி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
வாழ்வின் திருப்புமுனையான இஸ்ரோவின் விருது..!
சின்ன வயசுல நிலாவுக்குக் கூட்டிட்டுப் போனாத்தான் சாப்பிடுவேன்னு வீட்ல அடம்பிடிப்பேனாம். இன்னிக்கு டிரைவர் லீவுமா நாளைக்கு போகலாம்டானு அப்பா சொல்லி துாங்க வைப்பாங்களாம். அதே நினைப்பிலே காலையில் எழுந்த உடனே டிரைவர் வந்திட்டாங்களானு தான் பர்ஸ்ட் கேட்பேனாம். இன்னும், அப்பா அதை சொல்லிக்கட்டி, அப்போதே உனக்குள் விண்வெளி கனவு வந்துவிட்டதுனு சொல்வாங்க.
அன்றாடம் வானில் நிலாவை பார்க்கிறோம். அதனால், அதைப் பற்றி கேட்டேன் என்ற வரை சரி. ஆனால், செவ்வாய் கிரகத்திற்கு கூட்டிட்டு போங்க என்றும் கேட்டுள்ளேனாம். அந்த வயதில் நான் கேட்டது எனக்கு ஞாபகமில்லை. ஆனால், அதுவே கடவுளின் திட்டமாக இருந்துள்ளது என்று தான் நினைக்கிறேன்.
பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பூமியில் படைக்கப்பட்டதற்கான ஒரு காரணமுண்டு. இது எனக்காக எழுதப்பட்டிருக்கும் கடமை என்றே உணர்கிறேன், என்றுக் கூறி கனவு துளிர்த்த தருணத்தை பகிர்ந்தார். அவரது கனவு, அப்துல்கலாம் கூறியது போல் உறக்கத்தில் கண்டதல்ல. அவரை உறங்கவிடாமல் செய்த இலட்சிய கனவு. அன்றிலிருந்து, கனவை துரத்தத் தொடங்கிவிட்டார் அவர். விண்வெளித் தொடர்பான புத்தகங்களையும், செய்திகளையும் படிக்கத் தொடங்கினார்.
நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு புத்தகம் வாங்குவதற்கும் சேமிப்பு தேவைப்படுகிறதே. தாமோதரனும் புத்தகங்களை வாங்க ஒரு வேளை உணவை குறைத்து மகளுக்காக அவரது வருமானத்தை சேமித்துள்ளார்.
மதுரையில் பணிபுரிந்து வந்த தாமோதரன் வாரம் ஒருமுறை வீட்டிற்கு வரும்போதெல்லாம், கைநிறைய புத்தகங்களுடனே வருவார். கீர்த்திகாவின் மூளைக்கு தீனி போட்டன அவை. புத்தகத்தில் பொறித்த ஒவ்வொரு வார்த்தைகளும், அவர் அடைய விரும்பிய ஆகாசத்தினை கண்முன் காட்டின. கீர்த்திகாவின் கனவும் துளிர்விட்டு வளர்ந்து கொண்டேயிருந்தது.
அதுபோன்றதொரு ஒரு வாரவிடுமுறைக்கு வந்த தாமோதரன் புத்தகத்திற்கு மாறாக, ஒரு செய்தித் தாளின் துண்டினை எடுத்துவந்துள்ளார். அதிலிருந்தது இஸ்ரோ அறிவிந்திருந்த கட்டுரைப்போட்டி பற்றிய செய்தி. இது நிகழ்ந்தது 2012ம் ஆண்டு. அப்போது கீர்த்திகா 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். இன்டர்நெட் வசதியற்ற நிலையில், கட்டுரையை சமர்பிக்க அவருடைய புத்தக அறிவு பெரிய அளவு கைகொடுத்தது.
'சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விண்வெளி ஆராய்ச்சியின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான அக்கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்தார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு பரிசு விழாவிற்காக சென்றுள்ளார்.
"நான் தான் முதல் பரிசுனு சொல்லும் போது பயங்கர சந்தோஷமாக இருந்தது. சந்திராயன் 1 செயற்கைக்கோள் வடிவத்தில் விருது கொடுத்தாங்க. அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் ராக்கெட்லாம் பாக்க முடியுமானு கேட்டேன். அவுங்களும் சுத்திக் காட்டினாங்க. ராக்கெட் செய்யுறது, ராக்கெட்டின் பாகங்களையெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்தேன். பயங்கர பிரம்மிப்பா இருந்தது. எதற்காக முயற்சி பண்ணிட்டு இருக்கோமோ, அதற்குப் பக்கத்தில வந்துட்டோம் என்ற உணர்வு ஏற்பட்டது.
2014ம் ஆண்டு மீண்டும் இஸ்ரோ நடத்திய மாநில அளவிலான போட்டியில் கலந்து முதல் பரிசு பெற்று, திரும்பி மகேந்திரகிரிக்கு போனேன். அங்கிருந்த விஞ்ஞானிகள் பெரிய நகரத்திலிருந்து சிபிஎஸ்இ ஸ்கூலில் படிக்கிற மாணவர்கள் தான் வின் பண்ணுவாங்கனு நினைச்சிட்டு இருந்திருக்காங்க.
நான் அரசுப்பள்ளி மாணவி, தேனி மாதிரி சின்ன ஊரிலிருந்து வர்றேன்னு தெரிஞ்சதும் எப்படி 2 போட்டிகளிலும் வின் பண்ணிங்கனு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அப்போ தான், என்னோட கனவைச் சொல்லி, நான் என்ன படிக்கணும்னு கேட்டேன். அவுங்களும் நல்லா என்கிரேஜ் பண்ணாங்க. அவ்விரு விருதுகளும் என் வாழ்க்கையின் டெர்னிங் பாயின்ட்," என்று அவர் பகிர்வதிலேயே எதிர்கால இலக்கினை அடைவதற்கு அவர் காட்டும் தீவிரம் வெளிப்பட்டது.
-30°C குளிர்; தனிமை, மொழிப்பிரச்சினை : இத்தனைக்கும் மத்தியில் 92.5% மார்க்!
12ம் வகுப்பு முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? என்றத் தேடலில் இறங்கியுள்ளார். அதன் முடிவாய், உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிடியிலிருந்த "ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங்" எனும் சிறப்புப் பொறியியல் பட்டப்படிப்பை கடைந்தெடுத்தார். அந்நாட்டின் விமானப்படை பல்கலைக்கழகத்தில் அப்பட்டப்படிப்பிற்கான அட்மிஷினையும் பெற்றார். வாய்ப்புகளும், வழிகளும் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவரவரின் தேடலுக்கு பொறுத்தே அவை திறக்கின்றன என்பதற்கு கீர்த்திகாவே சாட்சி.
"எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. பொருளாதார ரீதியாக ரொம்பகஷ்டம் வேறு. முதலாண்டுக்கே ரூ.8 லட்சம் தேவைப்பட்டுச்சு. லோன் வாங்குவதற்கு சொந்த வீடுமில்லை. இது ஒரு பக்கமிருக்க, ஏதாச்சும் ஒன்னுனா எப்படி வர்றதுனு ஒரு பக்கம் பயந்தாங்க. இங்கேயே டிகிரி பண்ண சொன்னாங்க. நான் நாட்களை வீணாக்க விரும்பல. படிக்கிற டிகிரி கரெக்ட்டா எடுக்கணும்னு ரொம்ப தெளிவா இருந்தேன்.
வீட்லயும் புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம், நிறைய பேருடைய உதவிகளை நாடினோம். உதவிக்கேட்டு பல இடங்களுக்கு அலைவோம். சொன்னவுடன் அவர்களால் முடிந்த 500ரூபாயும் கொடுத்து உதவியுள்ளனர். இதுபோன்ற 500, 1000 என்று கொடுத்து உதவி கனவை நினவாக்கியது எக்கச்சக்கமானோர். அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் உடைத்துவிடக்கூடாது என்ற எண்ணம் உக்ரைன் வாழ்க்கையின் கடினமானப் பாதைகளையும் இலகுவாக்கியது.
2015ம் ஆண்டு கல்லுாரியில் சேர்ந்த, முதலாண்டில் அதிக சிரமங்கள் இருந்தன. அந்நாட்டில் ஆங்கிலமும் அதிகம் பேசமாட்டார்கள், உக்ரைனி மற்றும் ரஷ்யன் தான் பேசுவாங்க. குளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரி வரை மோசமான காலநிலை நீடிக்கும். கோடைக்காலத்தில் அதற்கு நேரெதிராய் இருக்கும். இதுவரை ஹாஸ்டலில் இருந்தும் பழக்கமும் இல்லை. தனிமையான நாட்கள் அவை.
நம்முடைய தேவைகள் அனைத்தையும் நம்ம தான் பாத்துக்கணும் போது, இந்த சூழ்நிலைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொள்ளவே சில மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால், என்னுடைய இலக்கினை அடைவதற்கு அந்த கல்லுாரி சரியானத் தேர்வு. ஏன்னா, எனக்கு வகுப்பு எடுப்பதே மிலிட்டரி ஆபிசர்ஸ் தான். விமானப்படை பல்கலைக்கழகம் என்பதால் ஹெலிகாப்டர், விமானப்பாகங்கள், எங்கும் காணப்படும். அச்சூழலே நல்ல உணர்வை அளித்தது.
இறுதியாண்டு படிக்கும் போதே அடுத்து என்ன? என்ற கேள்வி எனக்குள் எழுந்துவிட்டது. 2019ம் ஆண்டு தான் முதன் முதலில் இந்திய பிரதமர் விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் துவங்கப்படும்னு அறிவிச்சிருந்தாங்க. எனக்கு அதுவே பெரிய மகிழ்ச்சி. 2019ல் தான் எனக்கு கல்லுாரி முடிகின்றது. அதற்குள் என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள எண்ணினேன். இறுதியாண்டிலே போலாந்து நாட்டில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்.
அங்க சேருவதற்கு மெடிக்கல் சர்டிபிக்கேட் கேட்பாங்க. நான் 10வது படிக்கும் போதிருந்தே சாக்லேட், குளிர்பானங்கள், ஆயில் ஃபுட்ஸ் சாப்பிடாமல் உணவுகட்டுப்பாட்டில் தான் இருந்தேன். 8மணி நேரம் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றேன்.
காலையில் ஜிம்முக்கு போகனும், ஸ்விம்மிங் கிளாஸ் போகனும், அது முடிச்சு காலேஜ், விசா புராசேஸ் என ஓடிக்கிட்டேயிருப்பேன். அதற்கு மத்தியில் இறுதியாண்டு தேர்வில் 92.5% மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தேன்," என்று சொல்லும் கீர்த்திகா பல இடர்களையும் தடைகளையும் கடந்தே வெற்றியை வசப்படுத்தியுள்ளார்.
இதயத்துடிப்பை நிறுத்திவிடும் சாகசப் பயிற்சி!
போலாந்தில் இரு மாதங்கள் தங்கி, வெவ்வேறு இடங்களில் விண்வெளி வீரர்களுக்கான 10 விதமான பயிற்சிகளை பெற்றுள்ளார். நிலவுக்கு சென்றால் அந்த சூழலை கையாள உதவும் 'மூன் அனலாக் மிஷன்' பயிற்சி, 'மார்ஸியன் அனலாக் மிஷன்' எனும் செவ்வாய் கிரகத்திற்கான பயிற்சி, 'ஸ்ட்ராடோஸ்ஃபியரிக் மிஷன்', வானில் மிதந்து கொண்டே பணிகளை செய்வதற்காக 'ஸ்கூபா டைவிங்' பயிற்சி, ராக்கெட் வொர்க்ஷாப் பயிற்சியில் அவரே ஒரு ராக்கெட்டையும் உருவாக்கியுள்ளார்.
தவிர, சர்வைவல் டிரைனிங், சென்ட்ரிஃபியூஜ், ஹைபோபேரிக் சேம்பர் பயிற்சி, ஸ்கை டைவிக் செய்ய உதவும் ஏரோடைனமிக் டனல் பயிற்சி, மற்றும் ஸ்கை டைவிங் பயிற்சி என்று மிக மிகக் கடினமான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார் கீர்த்திகா. ஒவ்வொரு பயிற்சியிலும் அத்தனை அத்தனை சவால்கள் நிறைந்திருந்தாலும், அதற்காக காத்துக்கொண்டிருந்த அவருக்கோ ஒவ்வொன்றும் ஒரு சுவராஸ்ய புதையல்.
"இருப்பதிலே சென்ட்ரிஃபியூஜ் பயிற்சி தான் கடினமானது. விண்வெளி வீரராக இருக்கும் போது, பூமிக்கு எதிர்திசையில் மேல் செல்வோம். அப்போது, பூமியின் புவியீர்ப்பு விசை நம்மை கீழ்நோக்கி இழுக்கும். அதை எதிர்கொள்வதற்கான தகுதி உடலுக்கு இருக்கிறதா என்பதை சோதிக்கும் பயிற்சி தான் சென்ட்ரிஃபியூஜ். ஈர்ப்பு விசையின் காரணமாக நம் உடலில் உள்ள இரத்தம் கீழ்நோக்கி பாய்ந்து காலுக்கு சென்றடையும். மூளைக்கு இரத்தம் செல்லாது. அப்போது தசைகளுக்கு வலுசேர்த்து, அழுத்தி மூளைக்கு இரத்தத்தை போக வைக்கவேண்டும். மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் மயக்கம் ஏற்பட்டுவிடும். மிக மிக கடினமான பயிற்சி இது.
நான் பயிற்சி பெற்ற மிலிட்டரி இன்ஸ்ட்டியூட் ராணுவம் அல்லாதோருக்கு இந்த பயிற்சி கொடுத்ததே இல்லை. பல்ஸ், ப்ரஷர் லெலவ் பாக்குறதுக்கு வையர் கனெக்ஷன் கொடுத்து சீட்டில் உட்கார வைச்சிட்டாங்க. ஒரு நொடிக்கு 8 கி.மீ வேகத்தில் சென்ட்ரிஃபியூஜ் சுத்தும். கேமிரா வழியாக நம்மை கண்காணித்து கொண்டிருப்பார்கள். அப்போது என்னோட கையை துாக்கச் சொன்னாங்க. இரண்டு கையிலையும் 50 கிலோ வெயிட் கட்டிவிட்ட ஃபீல், என்னால, துாக்கவே முடியலை. ஈர்ப்பு விசையால், கன்னத்தசை எல்லாம் கீழ் நோக்கி இழுத்ததில் தொங்குது. அந்த சமயத்தில் எப்படி மூச்சிழுத்து, மூளைக்கு இரத்தத்தை கொண்டு செலுத்தவேண்டும்னு கற்று கொடுத்தார்கள்.
ராக்கெட்டில் செல்லும் போது, கீழிறங்கும் போது எவ்வாறு தாக்குபிடிக்க வேண்டுமென 3 விதமான பயிற்சிகளை அளித்தார்கள். நான்காவது லெவல் பயிற்சிக்கு அவர்களே எனக்கு அளிக்க ஒத்துகொள்ளவில்லை. நான் வற்புறுத்திய பிறகே அதற்கு சம்மதித்தார்கள்.
மற்ற மூன்றில் மூளைக்கு தான் ரத்தம் செல்லாது. இதில் இதயத்திற்கும் அதிக ரத்தம் செல்லும். வேகமாக துடிப்பு ஏற்படுவதால் இதயத்துடிப்பு நிற்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு நிமிடம் தாக்குபிடித்தாலே போதும் சொன்னாங்க. அந்த அழுத்தத்தை 1 நிமிடம் 20 நொடிகளுக்கு தாக்குபிடித்தேன். இந்த சென்ட்ரிஃபியூஜ் பயிற்சி உலகத்தில் 4 இடத்தில் தான் அளிக்கப்பட்டுவருகிறது. அதில் போலாந்தில் உள்ள சென்டிரிபியூஜ்ஜில் இந்த பயிற்சி எடுத்து கொண்ட முதல் பெண்மணியும் நீங்க தான், முதல் சிவிலியனும் நீங்கள் தான் என்று பாராட்டினார்கள்," என்று அடக்கமாக கூறினார் கீர்த்திகா.
பத்து பயிற்சிகள் முடித்தநிலையில், இதற்கு அடுத்ததாய் பைலட் பயிற்சியில் சேர்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். கனடாவில் படிப்பதற்கான அட்மிஷனும் கிடைத்துவிட்டது. பைலட் படிப்பிற்காக மொத்தம் ஆகும் செலவு ரூ.50 லட்சம். பெரும் தொகை என்பதால், உதவிகேட்டு நிற்கிறார் இந்தியாவின் எதிர்காலம். சிறகுகள் அளித்து பறக்க செய்வோம்...
இதுவரை உதய கீர்த்திகாவுக்கு ரூ.4 லட்சம் மட்டுமே கையில் உள்ளது. மேலும் அவரின் கனவு நினைவடைய அவருக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள:
அல்லது அவரின் வங்கிக் கணக்கிலும் நேரடியாக பணம் செலுத்தலாம். GPay No- 9150455245
Name: D. Udhaya Keerthika
Account No - 34887879066
State Bank of India, Theni Branch
IFSC Code: SBIN0002277