2 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு தற்காப்புக் கலையை கற்றுத் தந்துள்ள இளைஞர்!
தற்காப்புக் கலையில் பல்வேறு வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள 27 வயது அபிஷேக் யாதவ், மக்கள், குறிப்பாக பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உதவும் வகையில் ’என் பாதுகாப்பு என் கையில்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
26 வயதான கருணா திரிபாதி 2015ம் ஆண்டு லக்னோவில் தனது நண்பர்களுடன் தசரா பண்டிகை கண்காட்சியில் இருந்தார். அவர்களுடன் பல்வேறு ஸ்டால்களுக்குச் சென்றார். இந்தப் பெண்கள் வீடு திரும்பும்போது ஐந்து நபர்கள் குழுவாக இவர்களை வழிமறித்து தொல்லை கொடுத்தனர்.
கருணா சுதாரித்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிட்டார். அவரது சமயோஜித புத்தியும் ’என் பாதுகாப்பு என் கையில்’ என்கிற திட்டத்தின் கீழ் அவர் பயிற்சி பெற்ற தற்காப்புக் கலையும் அவருக்குக் கைகொடுத்தது. தற்காப்புக் கலையில் அவர் கற்ற சில அசைவுகளைக் கொண்டு தொல்லை கொடுத்தவர்களை விரட்டியத்து தன்னையும் பாதுகாத்துக்கொண்டு தன் நண்பர்களையும் காப்பாற்றினார்.
கருணா போன்றே உத்திரப்பிரதேசத்திலும் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 2.5 லட்சம் பெண்கள் ’என் பாதுகாப்பு என் கையில்’ திட்டத்தின் கீழ் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட இது அத்தியாவசியமானதாகும்.
இந்தப் பிரச்சாரத்திற்கு தலைமை வகிக்கிறார் 27 வயதான அபிஷேக் யாதவ். இவர் பல்வேறு வகையான தற்காப்புக் கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர். பல்வேறு பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளார். இந்திய ராணுவத்தின் கோர்கா படையைச் சேர்ந்த இரண்டு படைப்பிரிவினருக்கு பயிற்சியளித்துள்ளார். அத்துடன் மஹாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேச காவல் துறையைச் சேர்ந்த சுமார் 70,000 காவல்துறை பணியாளர்களுக்கு தற்காப்பு கலை தொடர்பான வகுப்புகள் எடுத்துள்ளார்.
தற்காப்புக் கலை மீதான ஆர்வம்
அபிஷேக்கிற்கு தற்காப்புக் கலை மீதிருந்த ஆர்வத்தை அவரது பெற்றோர் ஊக்குவிக்கவில்லை. உத்திர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே அருகில் இருந்த ஒரு முகாமில் பயிற்சி பெற்றார். சோஷியல் ஸ்டோரி உடனான உரையாடலில் அபிஷேக் கூறும்போது,
“நான் தற்காப்புக் கலை கற்றுக்கொள்வதை என் பெற்றோர் விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தற்காப்புக் கலை என்பது எந்தவித பயனும் இன்றி அடி வாங்கிக்கொண்டு காயமேற்படுத்திக்கொள்ளும் ஒரு செயல். அதற்கு பதிலாக சிவில் சர்வீஸ் பணியில் சேரவேண்டும் என்று விரும்பினர்,” என்றார்.
அபிஷேக் படிப்பில் சமரசம் செய்துகொள்ளவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி திட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்தார்.
இதற்கிடையில் தற்காப்புக் கலையில் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார். ஐகிடோ, ஜிட்சு, கராத்தே போன்ற வெவ்வேறு தற்காப்புக் கலை வடிவங்களில் திறனை வளர்த்துக்கொண்டார்.
பயிற்சிக்காக வெவ்வேறு நகரங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையும் இவரது பெற்றோர் விரும்பவில்லை. இவரது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட நண்பர்களின் ஆதரவினாலேயே இவர் தொடர்ந்து பயிற்சியெடுத்துக் கொண்டார்.
”என்னுடைய நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் என்னுடைய பயணத்திற்காகவும் பயிற்சி செலவுகளுக்காகவும் பணத்தை சேகரித்துக் கொடுத்தனர். எனக்கு எப்போதும் ஆதரவளித்து தொடர்ந்து கற்றுக்கொள்ளுமாறு ஊக்குவித்தனர்,” என்றார்.
அபிஷேக் ஆறு ஆண்டுகளில் பயிற்சியை நிறைவு செய்தார். 2006-ம் ஆண்டு கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். அதே சமயம் படிப்பையும் தொடர்ந்தார். கர்நாடகா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப்படிப்பு மேற்கொண்டு 2009-ம் ஆண்டு நிறைவு செய்தார்.
தனிநபர் பயிற்சி
அபிஷேக் 2006ம் ஆண்டு பயிற்சியை முடித்த பிறகு Abhiself Protection Trust நிறுவினார். இதன்கீழ் ‘என் பாதுகாப்பு என் கையில்’ என்கிற திட்டத்தைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு அபிஷேக் உத்திர பிரதேசத்தில் கமாண்டோக்களுக்கு தற்காப்புக் கலையில் பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
ஒருமுறை கோராக்பூரில் உள்ள மதன் மோகன் மாளவியா பல்கலைக்கழகத்தில் ஒரு முகாம் ஏற்பாடு செய்தார். ஆனால் அதற்கு போதிய வரவேற்புக் கிடைக்கவில்லை. எதற்காக தற்காப்புக் கலையைக் கற்கவேண்டும் என்று பலர் வியந்தனர். முகாமில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள சில பெண்கள் வந்தனர். அபிஷேக் அவர்களை ஊக்குவித்தார். முகாமிற்கு வருகை தந்தவர்களில் முதல் நாள் 50 என்றிருந்த பெண்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளில் 2,000 என அதிகரித்தது.
இந்த ஆர்வத்தைக் கண்ட அபிஷேக் பள்ளிகளிலும் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்தார். காவல்துறை பணியாளர்கள், ராணுவ பணியாளர்கள், பெண்கள் என கிட்டத்தட்ட அனைவருக்கும் பயிற்சியளிக்கத் தொடங்கினார். தற்காப்புக் கலையின் பல்வேறு வடிவங்களில் அபிஷேக்கிற்கு நிபுணத்துவம் இருந்ததால் ’ஸ்பெஷல் கமாண்டோ நுட்பம்’ என்கிற புதிய நுட்பத்தை சொந்தமாக உருவாக்கினார்.
இது பெண்களுக்கு பயிற்சியளிக்க பயனுள்ளதாக இருந்த காரணத்தினால் தன் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்க இதைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த நுட்பத்தைக் கொண்டு பெண்கள் தங்களிடம் தவறாக நடந்துகொள்ள முற்படும் நபரின் மொத்த உடலையும் ஒற்றை விரலைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். பெண்களின் பாதுகாப்பில் அதிக ஆர்வம் காட்டுவதற்கான காரணத்தை அபிஷேக் விவரித்தார்.
“2012ம் ஆண்டு நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியது. எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அதேசமயம் என்னுடைய பயிற்சி திட்டம் அனைத்து பெண்களுக்கும் அவசியமான ஒன்று என்பதையும் உணர்ந்தேன். தேவை ஏற்படும் சூழல்களில் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு தனிநபருக்கும் வலிமையை அளிக்க விரும்புகிறேன்,” என்றார்.
அப்போதிருந்து அபிஷேக் உத்திர பிரதேசத்தை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் உள்ள பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.
2015-ம் ஆண்டு உத்திர பிரதேச அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய சிவிலியன் விருதான யஷ் பாரதி விருது அபிஷேக்கிற்கு வழங்கப்பட்டது. இவர் இந்த விருதினை வென்ற இளம் நபர் ஆவார். இந்த விருதுடன் இவருக்கு ஒரு மாதத்திற்கு 50,000 ரூபாய் ஊதியமும் 11 லட்ச ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கூடுதல் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யவும் அவரது பயணச் செலவுகளுக்கும் விருதுத் தொகையைப் பயன்படுத்திக்கொண்டார். இந்த முகாம்கள் அனைத்துமே கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஒரு வார காலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. தினமும் இடைவேளையின்போது இரண்டரை மணி நேரம் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும் கிட்டத்தட்ட 1,000-2,000 பெண்கள் கலந்துகொள்கின்றனர். பயிற்சி முடிந்த பிறகு ட்ரஸ்டில் இருந்தும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியில் இருந்தும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அபிஷேக் பல்வேறு நகரங்களில் ஏற்பாடு செய்யப்படும் தனது முகாம் குறித்த தகவலை மக்களிடையே கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்.
”எங்களுக்கென பிரத்யேகமாக முகநூல் பக்கம் உள்ளது. நாங்கள் பயிற்சியளிக்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை முறையாக நிர்வகிக்கிறோம். அடுத்து வரவிருக்கும் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்களை வாட்ஸ் அப் வாயிலாக அவரகளுக்குத் தெரிவிக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் பரிந்துரைகள் மூலம் பெண்கள் வருகின்றனர். ஏனெனில் பயிற்சி வாயிலாக பெண்களுக்கு நம்பிக்கை கிடைத்தால் மற்றவர்களிடம் பயிற்சி குறித்தும் அதில் பங்கேற்கவேண்டியதன் அவசியம் குறித்தும் பகிர்ந்துகொள்வார்கள்,” என்றார்.
பயிற்சியின் தாக்கம் சிறப்பாக இருப்பதாக இவர் தெரிவிக்கிறார்.
”பல சந்தர்ப்பங்களில் பெண்களால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடிந்துள்ளது. பல உள்ளூர் தாதாக்கள் கல்லூரிப் பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எங்களது பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்ட பிறகு அதே மாணவர்கள் அந்த தாதாக்களை எதிர்த்து நின்று தாக்குவதாகக் கேள்விப்பட்டேன். அத்துடன் சங்கிலிப் பறிப்பு சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதில் சம்பந்தப்பட்ட பெண் சங்கிலியைப் பறிக்க வந்தவரை எதிர்த்தது சண்டையிட்டு தன்னைக் காப்பாற்றிக்கொண்டார்,” என்றார்.
அபிஷேக் 2017-ம் ஆண்டு ஜகத்குரு க்ரிபாலு பரிஷத் உடன் இணைந்து 5,700 பெண்களுக்கு தற்காப்பு நுட்பத்தில் பயிற்சியளித்ததற்காக லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தப் பெண்களில் பெரும்பாலானோர் உத்திர பிரதேசத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கிழக்கு டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி அரசாங்கங்கள் இணைந்து 5,000 பெண்களுக்கு தற்காப்புக் கலையில் பயிற்சியளித்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. அபிஷேக் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
அபிஷேக்கின் கடின உழைப்பையும் மன உறுதியையும் வெற்றியையும் கண்டு அவரது பெற்றோர் அவரைப் பாராட்டத் தொடங்கினர். பெண்களின் பாதுகாப்பிற்காக அவர் மேற்கொள்ளும் பணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
வருங்காலத் திட்டம்
அபிஷேக்கின் தற்காப்பு பயிற்சி திட்டத்தில் எந்த வயதினரும் சேர்ந்துகொள்ளலாம். 45 வயதிற்கு மேற்பட்ட 50 பெண்கள் அடங்கிய ’பவர் விங்’ என்கிற குழுவிற்கும் பயிற்சியளித்துள்ளார்.
தற்போது 14 உறுப்பினர்கள் அடங்கிய குழு அபிஷேக்குடன் இணைந்துள்ளது. இவர்கள் அபிஷேக்கின் பிரச்சாரத்தில் உதவிய முன்னாள் மாணவர்கள். 1,000 – 2,000 பெண்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய அவசியம் ஏற்படும்போது அபிஷேக் இவர்களது உதவியைப் பெற்றுக்கொள்கிறார்.
அபிஷேக் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது முந்தைய சாதனையை முறியடிக்க உள்ளார். மும்பையின் தானே பகுதியில் சுமார் 21,000 பெண்களுக்கு பயிற்சியளிக்க உள்ளார். மஹாராஷ்டிர காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான பயிற்சி நபர்கள் 11,000 பேரும் கல்லூரி மாணவர்கள் 10,000 பேரும் இதில் அடங்குவர். அபிஷேக் தனது வருங்கால திட்டம் குறித்து கூறும்போது,
“ஒவ்வொரு தனிநபருக்கும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் அளவிற்கு பயிற்சியளிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: கிருஷ்ணா ரெட்டி | தமிழில்: ஸ்ரீவித்யா