2 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலமாக நடைப்பெற்ற TiEcon 2022 தொழில்முனைவோர் மாநாடு!
தமிழகத்தின் முக்கியமான தொழில்முனைவு நிகழ்ச்சி TieCon. கோவிட் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக இணையம் மூலமாகவே நடந்தது. தற்போது நேரடி நிகழ்ச்சியாக நடந்தது. முதல் நாள் நிகழ்வில் தொழில்முனைவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
அடுத்த நாள் (8-ம் தேதி) முழுவதும் கருத்தரங்கு நடைபெற்றது. தமிழ்கத்தின் பல பகுதிகளில் இருந்து தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டர். இதுதவிர முதலீட்டாளர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கெவின் கேர் நிறுவனத்தின் தலைவரும், TiE அமைப்பின் தலைவருமான சி.கே. ரங்கநாதன் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.
“கோவிட்டுக்கு பிறகு பிஸினஸ் மாடலை மற்றும் யுத்தியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது, அதனால் resilience unlimited (மீண்டெழுவது) என்னும் தலைப்பில் நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,” என தெரிவித்தார்.
Building a value driving enterprise என்னும் தலைப்பில் ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு உரையாற்றினார். அவர் கூறியதாவது,
“தற்போது மந்த நிலை ஸ்லோமோஷனில் தயாராகி வருதாகவே பார்க்கிறேன். டாட் காம் பபுள், சப் பிரைம் கிரைசஸ் என ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு பெயர் இருந்தது. அதுபோல, சிக்கல் உருவான பிறகு அந்த சிக்கலுக்கு பெயர் வைப்பார்கள் என கணிக்கிறேன். இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் எனக் கூறியவர் எப்படி மதிப்புமிக்க நிறுவனத்தை உருவாக்கினேன்,” என பேசினார்.
புரபெஷனல் என்னும் வார்த்தை நான் விரும்புவதில்லை. திறமை மைனஸ் மனிதத் தன்மை இருந்தால் அது புரபெஷனல் என்பதுதான் என்னுடைய கணிப்பு.
“திறமை என்பது மாற்றத்தக்கது. இன்று உங்களிடம் இருக்கும் திறமை மற்றொருவரிடம் வரக்கூடும் அதேபோல, மற்றவர்களிடம் இருக்கும் திறமை உங்களுக்கு வரலாம். ஆனால் மனிததன்மை என்பது உங்களிடம் இருப்பது மட்டும்தான். வெறும் திறமை மட்டுமே பயன்படாது.
ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருப்பது போல பிஸினஸ் என்பது கலை. (Artist) திறமையால் மட்டுமே கலை கூடிவிடாது.
தவிர, ஜோஹோவில் யாரும் மைக்ரோமேனேஜ் செய்ய மாட்டார்கள் ஒரு நாளைக்கு 20,000க்கும் மேற்பட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது எதுவும் எனக்கு தெரியாது. நான் விரல் விட்டு என்னும் அளவுக்கான முடிவுகள் எடுத்தாலே அதிகம்.
அதேபோல, நேரத்தை இலக்கு நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம். சொல்லப்போனால் எந்த புராஜக்டையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நாங்கள் முடித்ததில்லை. அதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்வோம். அதே சமயம் அதிக அளவிலான புராடக்ட்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இரண்டும் முரண்பாடான வாக்கியம்போல தோன்றினாலும் இரண்டுமே உண்மைதான், என்றார் ஸ்ரீதர் வேம்பு.
அதேபோல, எங்கள் பணியாளர்கள் யாரிடமும் எந்த கமிட்மெண்டையும் (வேலை தொடர்பான உத்தரவாதம்) நாங்கள் வாங்குவதில்லை. அவர்களே உணர்ந்து அந்த வேலையை செய்வார்கள். ஊழியர்கள் அவர்களாகவே வேலை செய்யத் தொடங்கினால் நிறுவனத்தில் அதற்கான மேஜிக் தானாக நடக்கும். இவை எதுவும் எங்களிடம் எழுத்து பூர்வமாக இல்லை. எங்களுடைய தொழில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி இருக்கிறது.
கோவிட் சமயத்தில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சப்ஸ்கிரிப்ஷன் தொகையில் தள்ளுபடியை வழங்கினோம். ஆறு மாதத்தில் முழு தொகையை வாங்கிக்கொள்ளுங்கள் என வாடிக்கையாளர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். இதனால் மார்கெட்டிங்குக்காக நாங்கள் செய்யும் செலவு கணிசமாக குறைந்திருக்கிறது.
சர்வதேச அளவில் எங்கெல்லாம் வாடிக்கையாளர் சந்திப்பு நடத்தினாலும் அங்கு பெரிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை எங்களால் சந்திக்க முடிகிறது என ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
இதனைத் தொடர்ந்து டை சென்னையின் ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற முருகப்பனுடன் கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே. ரங்கநாதன் உரையாடினார்.
தொழிலை அடுத்த தலைமுறைக்கே கொண்டு செல்வதே கடினம் என்னும் போது எப்படி ஐந்து தலைமுறைகளாக நிறுவனத்தை நடத்தி வருகின்றீர்கள் என்னும் கேள்விக்கு முருகப்பன் பதில் அளித்தார்.
”சிக்கல்கள் இல்லாமல் தொழில்கள் இல்லை. அதுவும் குடும்பங்கள் இருக்கும்போது சிக்கல்கள் இருக்கும். எங்களுக்குள் சில விதிமுறைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். அந்த விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறோம். பிஸினஸ் என்னும்போது கேபிடலிஸ்டாக இருக்கவேண்டும், குடும்பம் என்னும் போது சோசியலிஸ்டாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம்,” என்றார்.
குடும்ப நிறுவனத்தில் யார் வேண்டுமானாலும் இணைந்து பணிபுரியலாம். விருப்பபட்டால் சொந்தமாகவும் தொழில் தொடங்கலாம் அல்லது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், வெளியேறுவதும் உள்ளே வருவதும் நடக்காது.
உதாரணத்துக்கு மூத்த மகன் குழும நிறுவனங்களில் ஒன்றை பார்த்துக்கொள்கிறார். மற்றொருவர் சொந்தமாக செயல்படுகிறார். ரஷ்யாவில் செய்துள்ள முதலீடு குறித்து கேட்டதற்கு, ”கேரளாவில் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் 16 ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டுவருகிறோம். சுமார் 1700 பணியாளர்கள் உள்ளார்கள். அங்கு தொழில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது என்பது குறித்த எங்களுக்கு எதுவும் தெரியவில்லை,” என முருகப்பன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முருகப்பன் சிகே ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பினார். நான் ஓய்வு பெற்றுவிட்டேன், நீங்கள் எப்போது ஓய்வு பெற போகிறீர்கள் என்னும் கேள்விக்கு,
“நான் ஓய்வு பெறமாட்டேன். ஓய்வு பெற்றுவிட்டால் நாமே மந்தமாகவிடுவோம். இது உடல் நடலத்துக்கு நல்லதல்ல. முடிந்தவரை வேலை செய்வேன்,” என சி.கே.ஆர் குறிப்பிட்டார்.
நீங்கள் வேலை செய்துகொண்டே இருங்கள். என்னுடைய மகன் உங்களிடம் பயிற்சிக்காக வந்தான். அடுத்து என்னுடைய பேரனை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று முருகப்பன் சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
கிளைமேட் டெக்
அடுத்தது காலநிலை குறித்து சுந்தரம் கிளைமேட் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் மிருதுளா ரமேஷ் பேசினார்.
புரிகிறதோ இல்லையோ தற்போது அனைவரும் பேசும் விஷயமாக net zero emission இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் பேசுகின்றன. சர்வதேச அளவில் வெப்பநிலை உயர்ந்துவருகிறது என்பது கண்கூடு. உடனே அரசாங்கம் என்ன செய்கிறது என்னும் கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு கிளைமேட் டெக் என்னும் வார்த்தையே கிடையாது. ஆனால் தற்போது கிளைமேட் டெக் வளர்ந்து வரும் பிரிவாக இருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த பிரிவில் பெரிய வளர்ச்சி இருக்கும். தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் இந்த பிரிவில் கவனம் செலுத்துவது நல்லது.”
சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இந்தப் பிரிவில் நிறுவனங்களை வளர்ந்தெடுக்கும் பணிகளில் உள்ளனர். பல நிறுவனங்கள் இங்குள்ளன. கிளைமேட் டெக் என்பது பெரிய வார்த்தை, இதில் கழிவுகள், நீர் மேலான்மை உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. தொழில்முனைவோர்கள் இங்கு கவனம் செலுத்த வேண்டும் என பேசினார்.
ஸ்பேஸ்டெக்
அடுத்து வளர்ந்து வரும் பிரிவான ஸ்டேஸ் டெக் பிரிவில் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்னிகுல் நிறுவனத்தின் ஸ்ரீநாத் ரவிசந்திரன் பேசும்போது,
“நாங்கள் செய்வது சாதாரண லாஜிஸ்டிக்ஸ் பிஸினஸ். ஆனால் இது கொஞ்சம் டெக்னிக்கலான காம்பிளெக்ஸான் விஷயம். இங்கிருந்து சாட்டிலைட்களை மேலே எடுத்து செல்கிறோம். ஆனால் பல முதலீட்டாளர்களுக்கு நாங்கள் சொன்னது புரியவேயில்லை. 2017-ம் ஆண்டு நிறுவனம் தொடங்கினோம். அப்போது சுமார் 800 முதலீட்டாளர்களிடம் பேசி இருப்போம். இத்தனை முதலீட்டாளர்களிடம் பேசிய பிறகே எங்களுக்கான முதலீடு கிடைத்தது என,” கூறினார்.
வொண்டர் ட்ரெயில்
அடுத்ததாக ’வொண்டர் ட்ரெயில்’ என்னும் பிரிவில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பிக்யூவர் ட்ரெயில் நிறுவனத்தின் ஹரி கணபதியும், வொண்டர்லா நிறுவனத்தின் அருண் கே சிட்டலப்பல்லியும் உரையாடினார்கள். இருவரும் பொழுதுபோக்கு பிரிவை சார்ந்தவர்கள். அதனால் கோவிட் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது இந்த இரு துறைகள்தான். இதில், இருந்து எப்படி மீண்டு வந்தோம் என உரையாடினார்கள்.
அருண் பேசும்போது எங்களுக்கு விடுமுறையே கிடையாது. அத்தனை நாட்களும் வேலை என்னும் சூழலில் இருந்து தடாலடியாக மூட வேண்டிய சூழல் இருந்தது. சுமார் 2500 பணியாளர்கள் இருந்தனர். மூடுவதை தவிர பணியாளர்களின் நம்பிக்கையூட்டுவதே பெரும் பணியாக இருந்தது. உணவுப் பிரிவில் இருப்பவர் கொடுத்த ஐடியா காரணமாக கிளவுட் கிச்சன் தொடங்கினோம். கொஞ்சம் சுழல் எளிதான பிறகு மருத்துவத் துறை பணியாளர்களுக்கு மட்டுமே திறந்தோம். அப்போது சுமார் 5000 பார்வையாளர்கள் (மருத்துவர்கள்,நர்ஸ்கள் உள்ளிட்டோர்கள்) வந்தார்கள்.
ஆரம்பத்தில் வழக்கமான முறைகளில் விளம்பரம் செய்துவந்தோம். ஆனால் தற்போது டிஜிட்டல் அதிக கவனம் செலுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய பிக்மைட்ரெயில் ஹரி கணபதி,
“எந்த தொழிலிலும் ரிஸ்க் இருக்கும் ஆனால் எங்களுக்கு இருந்தது நிச்சயமற்ற தன்மை. என்ன நடக்கும் என்பதே தெரியாத நிலை. இதில் இருந்து மீண்டு வந்தோம். பணியாளர்களுக்கு தேவையானதை செய்தோம், முடிந்தவரை இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினோம். டிஜிட்டலில் அதிக கவனம் செலுத்தினோம்,” என கூறினார்.
கருத்தரங்குகள், உரையாடல்களுடன் டைகான் 2022 முடிவடைந்தது.