Tiecon 2019: ஐஐடி முன்னாள் இயக்குனர் பேராசிரியர் அனந்த்-க்கு ’வாழ்நாள் சாதனையாளர் விருது’
தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் நடைப்பெற்ற TiE சென்னை நடத்திய டைகான் 2019 கருத்தரங்கு மற்றும் விருதுகள் விழா.
தொழில்முனைவை ஊக்குவிக்கும் அமைப்புகளில் முக்கியமானது TiE. ஒவ்வொரு ஆண்டும் 'Tiecon' என்னும் பெயரில் பெரிய கருத்தரங்கமும், விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ம் தேதி விருதுகளும், 12-ம் தேதி கருத்தரங்கமும் சென்னையில் நடைபெற்றது. டைகான் சென்னை தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை நடத்தி வருகிறது.
’வாழ்நாள் சாதனையாளர் விருது’ பேராசிரியர் எம்.எஸ். அனந்த்துக்கு வழங்கப்பட்டது. ஐஐடி ரிசர்ச் பார்க் அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த அனந்த் ஐஐடி சென்னையின் முன்னாள் இயக்குநர் ஆவார்.
துரோணாசாரியார் விருது: அருண் ஜெயின், தலைவர் மற்றும் எம்டி, Intellect Design Arena Limited
நீடித்த வளர்ச்சியடையும் நிறுவனம் : கவுதம் சாரங்கி, Go Fashions India Pvt Ltd
வேகமாக வளர்ச்சி அடையும் நிறுவனம்: எஸ்.ஜி.அனில் குமார், Samunnati Financial Intermediation & Services Pvt Ltd
ஸ்டார்ட் அப் நிறுவனம் : KritiLabs Technologies Private Limited
சிறந்த உறுப்பினர் : அருண் ப்ரகாஷ், Guvi Geek Technologies Pvt. Ltd.
வாழ்நாள் சாதனையாளர் விருது தவிர மேற்கண்ட ஐந்து பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பர்க் அறக்கட்டளையின் வினீத் நாயர் சிறப்புரையாற்றி அடுத்த நாள் கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்.
”மகாத்மா காந்தி இந்தியாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு பிறகே நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அகிம்சை என்பது புதுமையான யுத்தியாக இருந்தாலும் அதிகக் காலம் தேவைப்பட்டது. அப்போதைக்கு அனைத்து இந்தியர்களும் சுதந்திரம் தேவை என நினைக்கவில்லை. சுதந்திரம் தேவை என்னும் ஊக்கத்தை அனைவருக்கும் ஏற்படுத்தவேண்டி இருந்தது. தொழிலிலும் இதேபோல உங்களுக்கு இருக்கும் ஐடியாவை மற்றவர்களுக்கு கடத்த வேண்டும்,” என்றார்.
நான் சிறிய வயதில் இருந்த போது இரவு நேரம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது இரவில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில் ரயில் செல்லத்தொடங்கியது. இப்போது இரண்டு வாய்ப்புகள் ஒன்று ஓட வேண்டும். இல்லையெனில் அங்கே இருந்து அழ வேண்டும். ஓட வேண்டும் என முடிவெடுத்து ஓடத் தொடங்கினேன். என்னுடைய வேகத்தை விட ரயில் வேகமாக ஓடியது. இருந்தாலும் வேகமாக ஓட முயற்சி செய்தேன், முடியவில்லை. அப்போது அந்த வழியாக வந்த காய்கறி விற்கும் பெண் ஒருவர் என்னை கடைசி பெட்டியில் தூக்கி போட்டார். நானும் குடும்பத்துடன் இணைந்துவிட்டேன்.
”நீங்கள் ஓட வேண்டும் என நினைத்தால்தான் யாராவது உதவி செய்வார்கள். உங்களுக்கே அந்த உற்சாகம் இல்லையெனில் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தோன்றாது,” என்றார்.
ஒவ்வொரு விஷயத்தில் அதிகத் தெளிவு இருக்கும் பட்சத்தில், தொழிலில் எவ்வளவு பெரிய சூறாவளியையும் தாங்க முடியும் எனக் கூறினார்.
இந்தியாவில் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஹரிஷ் பட் உரையாற்றினார். ஜிடிபி சரிவு, பொருளாதார மந்தம் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தலைப்புச் செய்தியாக உள்ளன. இந்த நிலையில் இந்தியாவில் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்றே சொல்லுவேன். ஆறு பிரிவுகளில் இந்தியாவின் தகவலை அலசி பார்த்தால் புரியவரும், என்றார்.
வசதி படைத்த இந்தியா: தற்போது நான்கில் ஒரு குடும்பம் செலவு செய்யத் தயாராக இருக்கும் குடும்பமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டில் இரண்டில் ஒரு குடும்பம் வசதி படைத்த குடும்பமாக இருக்கும். இந்தத் தொகை சுமார் 20 கோடி குடும்பங்கள் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
பல நாடுகளின் மக்கள் தொகையை விட பணம்படைத்தவர்கள் இங்கு அதிகமாக இருப்பார்கள். குறிப்பாக தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த பங்கு அதிகமாக இருக்கும்.
நகரமயமாக்கல்: அதிகம் வளர்ச்சியடையும் பத்து நகரங்களில் பல இந்திய நகரங்கள் உள்ளன. ஆனால் இவை மட்டுமே இந்தியா அல்ல. 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் தொகை உள்ள 31 நகரங்கள் உள்ளன. 5000-க்கும் மேற்பட்ட சிறு நகரங்களில் 50000-க்கும் மேறட்ட பெரு கிராமங்கள் இந்தியாவில் உள்ளன.
தவிர இந்திய இளைஞர்கள், தகவல் தொடர்பு மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்தியாவின் தேவை உயர்ந்து வருகிறது. அதனால் இது சார்ந்த தொழில்களுக்கு வாய்ப்பு அதிகம் என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து டை சென்னை அமைப்பின் தலைவர் சி.கே.ரங்கநாதனும் இதயம் நல்லெண்ணெய் முத்து அவர்களும் உரையாடினார்கள். இந்த உரையாடலில் முத்து கூறியதாவது, ”ஒரளவுக்கு தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் எங்களுக்கு விற்பனை இருந்தது. அடுத்தகட்டமாக பெங்களூருக்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். அங்கு உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றேன். அண்ணன் தம்பி இருவர் நடத்தும் நிறுவனம் அது. அண்ணனிடம் சென்றேன். அவர் தம்பியிடம் பேசச்சொன்னார். தம்பியிடம் சென்றேன். அவர் மேஜேனரிடம் பேசச்சொன்னார். அடுத்து மேனேஜரும் நமக்கு சாதகமான பதில் சொல்ல மாட்டார் என நினைத்து வேறு யோசித்தேன்.
அப்போது வேறு மாதிரியாக உரையாடலை தொடங்கினேன். உங்களிடம் 1,000 ரூபாய்க்கு (20 ஆண்டுகளுக்கு முன்பு) பொருட்கள் வாங்குபவர் எத்தனை நபர் எனக் கேட்டேன். அவர் ஒரு எண்ணை சொன்னார். அவர்களுக்கு அரை லிட்டர் இதயம் நல்லெண்ணெய் தருகிறேன் எனச் சொன்னேன். இதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு செலவாகும் என மேனேஜர் கேட்டார், ரூ.25,000 ஆகும் எனச் சொன்னேன். எங்களுக்காக இவ்வளவு செலவு செய்கிறீர்களா என அவர் உரிமையாளரிடம் அழைத்துச் சென்றார். அதன் பிறகு நான் நினைத்தது நடந்தது.
”எப்போதெல்லாம் நாம் சிக்கலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் புதிய யோசனைகள் நமக்கு வரும்,” என்றார்.
மற்றவர்களுக்கு ஜிஎஸ்டி-யால் என்ன பயன் என்பது தெரியவில்லை. ஆனால் நாங்கள் செலுத்த வேண்டிய வரி பெரும் அளவுக்கு குறைந்தது. இதனால் ஒரு லிட்டருக்கு ரூ.5 வரை விலையை நாங்கள் குறைத்தோம் எனக் கூறினார் முத்து.
இதனைத் தொடர்ந்து சில அமர்வுகள் நடந்தன. முதலீட்டாளர்களிடம் ஒரு ஐடியாவை எப்படி சமர்பிப்பது என்பது குறித்த பிட்ச்பெஸ்ட் நிகழ்ச்சியில் மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்து கொண்டன.